25 February 2010

காதலும் மறக்கும்

Posted by Gunalan Lavanyan 9:01 PM, under | No comments

To: …………….sudha@gmail.com
subject: to my sweet darling
அன்பிற்கினியவளே!
இராத்திரி முழுதும் உறக்கம் இழந்து கட்டிலில் புறண்டுக்கொண்டிருந்தேன். நீண்ட நாழிகைக்குப் பிறகு, உறக்கம் தொலைத்த இரவை நடந்து கழிக்கலாம் என்று நடக்கத் தொடங்கினேன்... யாருமற்ற இரவில் தனிமை மிகக் கொடியது என்று சொல்வார்கள். ஆனால் எனக்கு அந்தத் தனிமை மிக இனிமையாகவே இருந்தது. வானத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். நிலா நகர்ந்துகொண்டிருந்தது. நட்சத்திரங்கள் ஒவ்வொன்றாக உதிர்ந்து என் சட்டைப் பையில் விழுந்து தெறித்ததுபோல் இருந்தது. ஒரு நொடி கண்களை இமைத்துப் பார்த்தேன். பிரமை! மாயை கலைந்ததும் மீண்டும் நடந்தேன். நேற்று உன்னோடு நான் இருந்த மணித்துளிகள்... குளத்தில் எறிந்த கல் எழுப்பும் அலையாய் நெஞ்சில் எழுந்துகொண்டிருந்தது.
ஃப்ளாஷ்பேக்!
விடிந்தும் விடியாததுமான காலைப் பொழுதில் உனக்கு முந்தியே வந்து பூங்காவில் அமர்ந்து புல்லின் நுனியை கடித்துக்கொண்டிருந்தேன். என்னைத் தவிர, வேறு யாருமற்றுக் கிடந்த பூங்காவை ஒவ்வொரு மனிதராக வந்து நிரப்பிக்கொண்டிருந்தார்கள். சூரியன் முழுமையாக தனது இமைகளைத் திறந்து பார்த்துக்கொண்டிருந்தான். மொட்டுகள் மலர துடித்துக்கொண்டிருந்தன. மூடியிருந்த பூக்கள் விரியத் தொடங்கியிருந்தன. பனித்துளிகள் காய்ந்துகொண்டிருந்தன. லேசான காற்று என் காதில் சில்லென்று வீசிவிட்டுப் போனது. செம்பருத்தி செடி என் தோளில் உரசிக்கொண்டிருந்தது. என் கை கடிகார முள் ‘டிக் டிக்’ என்று எழுப்பும் ஓசை நேரம் கடந்துகொண்டிருப்பதை அறிவித்தது.
செல் எடுத்து உனக்கு தொடர்புகொண்டேன். ஸ்விட்ச் ஆஃப். பதட்டமில்லாமல் உன் வீட்டுக்கு டையல் செய்தேன். நீண்ட ஒலிக்குப் பிறகு மணி அடிக்கும் ஓசை ஓய்ந்தது. எரிச்சலோடு பூங்காவை சுற்றிக்கொண்டிருந்தேன்.
‘‘மணி என்ன சார்’’ எங்கிருந்தோ ஒரு குரல் காதை அறைந்தது.
திரும்பிப் பார்த்தேன். ஒரு வயோதிக மனிதர் வாக்கிங் ஸ்டிக் பிடித்து நின்றுகொண்டிருந்தார்.
‘‘ஜஸ்ட் எய்ட் ஓ க்ளாக்’’ சொல்லிவிட்டு நடக்கும்போதுதான் மூளைக்குள் உறைத்தது. ‘மாலை 5.30 மணிக்கு நீ வரச்சொல்லியிருந்தது...’
மனதிற்குள்ளேயே சிரித்துக்கொண்டு பூங்காவைவிட்டு நகர்ந்தேன்.
மாலை 5.30 மணி.
அப்போதுதான் அலுவலகத்திலிருந்து வெளியே வந்து ஒரு தம் பற்ற வைத்து, தலையை வருடிக்கொண்டே சீரியஸாக ஏதோ யோசித்துக்கொண்டிருந்தேன்.
‘‘என்ன சார் அஞ்சரை மணி ஆயிடுச்சு கிளம்பலையா’’ என்று மறுபடியும் ஒரு குரல் எங்கிருந்தோ காற்றில் பறந்து வந்து காதில் ஊடுருவியது.
இப்போது மூளை அலறியது... ‘ஈவினிங் ஃபைவ் தர்டி... ஃபைவ் தர்டி... ஃபைவ் தர்டி’ என்று டவாலி கோர்ட்டில் கூப்பிடுவது போல் ஓர் அலறல்.
சற்றைக்கெல்லாம் என் பைக் உறுமியது. அடுத்த பத்து நிமிடத்தில் பார்க் வாசலில் வண்டியை பார்க் செய்தேன்.
உள்ளே நுழைந்ததும் உன்னுடைய வாசனை மூக்கை துளைத்து மனசை பிசைந்தது. என்னைப் பார்த்ததும் சிணுங்கினாய்.
‘‘ஏண்டா இவ்ளோ லேட்... நான் அஞ்சு மணிலேருந்து வெயிட் பண்றேன் தெரியுமா...’’ சொல்லிவிட்டு கோபமாகப் பார்த்தாய்.
நான் சிரித்துக்கொண்டே சொன்னேன்... ‘‘நான் காலம்பறயே உனக்காக இங்கே வந்துட்டேன். அது உனக்குத் தெரியுமா...’’
‘‘என்ன உளர்றே...’’
‘‘ஆமாம்’’ என்று நடந்ததையெல்லாம் சொன்னேன். நீ என் மடியில் குலுங்கிக் குலுங்கி சிரித்தாய்... நானும் சிரித்தேன்.
‘‘அசடு வழியுது தொடச்சிக்கோ...’’ என்றாய்.
வெட்கமாகப் போய்விட்டது எனக்கு.
‘‘வெட்கப்பட்டதெல்லாம் போதும்... போதும்...’’ என்று போதும் போதும் என்கிறவரை முத்தமிட்டாய்...
‘‘இப்படி
ஆயுள் முழுவதும்
உன் முத்தம்
எனக்குக் கிடைக்கும் என்றால்
நான் தினம் தினம்
மறக்கிறேன் என்னை’’ என்று கவிதை சொன்னேன்.
என்னை கட்டி அணைத்துக்கொண்டாய்.
‘‘இராத்திரி ரெண்டு மணி ஆகுது எங்க போறீங்க இந்நேரத்துல’’ ஒரு குரல் என் காதை வந்து உரசியது. நினைவு திரும்பினால் போலீஸ் இன்ஸ்பெக்டர்.
‘‘இல்லே சார் தூக்கம் வரலே அதான் ஒரு வாக் போலாம்னு...’’ வார்த்தைகளை மென்று விழுங்கினேன்.
வழக்கம் போல் போலீஸின் துருவல் நடந்தது.
‘‘எங்க ஒர்க் பண்றே... ஐ.டீ. காட்டு...’’ என்றதும், பர்ஸை எடுத்து நீட்டினேன்.
பார்த்துவிட்டு, ‘‘இந்த ஃபோட்டோல இருக்கிறது யாரு’’ என்று மறுபடியும் ஒரு கேள்வி. பழையபடி என் மறதி.
‘‘ஓ ஸாரி ஸார். ஷீ ஈஸ் மை கேர்ள் ஃபிரண்ட். திஸ் ஈஸ் மை ஐ.டீ.கார்ட்’’ என்று ஐ.டீ.யை நீட்டினேன்.
அதைப் பார்த்துவிட்டு, ‘‘அந்த சுரேஷ் நீங்கதானா... சுதா எல்லாம் சொல்லியிருக்கா... நேத்து நடந்ததைக்கூட வீட்ல வந்து சொன்னா... எல்லாரும் விழுந்து விழுந்து சிரிச்சோம்... சரி அது போகட்டும். ஐ ஹேம் ராகவன். சுதா ஈஸ் மை டாட்டர். சீக்கிரம் வந்து உங்க பேரண்ட்ஸை வீட்லே பேசச் சொல்லுங்க... கல்யாணம் முடிச்சா இந்த ஞாபக மறதியெல்லாம் இருக்காது... இப்போ போய் தூங்குங்க. மணி ரெண்டரை ஆகுது. நாளைக்கு ஆஃபீஸ் போக வேணாமா..?’’
‘‘ஆமா அங்கிள் போகணும். என் பேரன்ட்ஸோட சீக்கிரம் உங்களை சந்திக்கிறேன்... பை...’’ வீடு வந்து சேர்ந்து கட்டிலில் விழுந்தேன். படுத்ததே தெரியவில்லை. தூங்கிவிட்டேன்.
காலை எழுந்ததும் பல்கூட துலக்கவில்லை. உனக்கு மெயில் அனுப்பிக்கொண்டு இருக்கிறேன்... நிறைய விஷயங்கள் உன்னிடம் பேசவேண்டி இருக்கிறது. மாலை 5.30 மணிக்கு பார்க்கில் சந்திக்கலாம். மறக்காமல் நான் வந்துவிடுகிறேன். நீயும் வந்துவிடு.
ஆயிரம் முத்தங்களுடன்
சுரேஷ்
send
sending.....

18 February 2010

வாரிகொடுத்த வள்ளல்!

Posted by Gunalan Lavanyan 11:09 PM, under | No comments

டி.கே.எஸ்.சகோதரர்களின் நாடகக் கம்பெனியில் சேர்ந்தபோது அந்த இளைஞனுக்கு பதினாறு வயது. அப்போது, அவனுக்கு சங்கீதத்தில் ஞானம் அதிகம். நாடகப் பாடல்களைப் பாடும்போது தாளம் தப்பாமல் பாடுவது, கடினமான வரிகளையும் பிழையில்லாமல் பாடுவதெல்லாம் அவனுக்கு ‘வாய் வந்த கலை’. மிருதங்கம், தபேலா போன்ற வாத்தியங்களை அலட்டிக்கொள்ளாமல் வாசிப்பது ‘கை வந்த கலை’.

டி.கே.எஸ். நாடகக் குழு காரைக்குடியில் நாடகங்களை நடத்திவந்த சமயத்தில், குழுவிலிருந்த பிரதான நடிகரான எம்.ஆர்.சாமிநாதன் ஒருநாள் காணாமல் போய்விட்டார். அப்போது நடந்துவந்த ‘மனோகரா’ என்ற நாடகத்தின் பிரதான பாத்திரமான வசந்தன் வேடத்தில் அதுவரை சாமிநாதன்தான் நடித்து வந்தார். திடீரென்று அவர் காணாமல்போகவே என்ன செய்வதென்று தெரியாமல் டி.கே.சங்கரன் கோபத்தின் உச்சிக்கே போய்விட்டார். அருகில் இருந்த டி.கே.சண்முகம், “சாமிநாதனுக்கு பதிலாக வசந்தன் வேடத்தில் நடிக்க நம்மிடம் ஒரு இளைஞன் இருக்கிறான். அதனால் நீங்கள் கவலைகொள்ளத் தேவையில்லை” என்று சொல்ல சங்கரன் ஆறுதல் அடைந்தார்.

அதுவரை சிறிய வேடங்களிலேயே நடித்து வந்த அந்த இளைஞனுக்கு பிரதான நகைச்சுவை வேடத்தில் தான் நடிக்கப் போவதை நினைத்து அளவற்ற மகிழ்ச்சி. ஆனால், அதை வெளிக்காட்டிக்கொள்ள வில்லை. அதற்குப் பதிலாக தன் திறமையைக் காட்டினான். அதனால், இனி வசந்தன் வேடத்தில் அந்த இளைஞனையே நடிக்கவைப்பது என்று டி.கே.எஸ்.குழுவினர் முடிவு செய்தனர்.

அந்த இளைஞன்தான், பிற்காலத்தில் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு நகைச்சுவை சாம்ராஜ்யத்தை நிறுவி அதில் வெற்றிக்கொடி நாட்டிய… தமிழ்நாட்டு மக்களை சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்த ‘கலைவாணர்’ என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட என்.எஸ்.கிருஷ்ணன். 1926-க்குப் பிறகு டி.கே.எஸ். நாடகக் கம்பெனி ஏற்றத்தைக் கண்டது. புராண நாடகங்களுக்குப் பதிலாக சமூக நாடகங்களை நடத்தத் தொடங்கியது. எம்.கந்தசாமி முதலியார் என்ற நாடக ஆசிரியர் வந்து சேர்ந்ததுதான் இந்த மாற்றத்துக்குக் காரணம். அப்படி ‘மேனகா’ என்ற புரட்சிகரமான நாடகத்தை கம்பெனி நடத்தியது. அதில் சாமா அய்யர் வேடத்தில் நடித்து கிருஷ்ணன் தூள் பரத்தினார். மக்களின் வரவேற்பு அதிகமானது. கிருஷ்ணனின் புகழ் பரவத் தொடங்கியது.

இந்தச் சமயத்தில் டி.கே.எஸ். கம்பெனியிலிருந்து கிருஷ்ணன் விலக நேர, செய்தி அறிந்ததும் ‘கோல்டன் கம்பெனி’யார் கிருஷ்ணனை தன் கம்பெனிக்கு அழைத்துக் கொண்டனர். ஒருமுறை ஆலப்புழையில் கோல்டன் கம்பெனி முகாமிட்டு இருந்தது. அப்போது, ‘சம்பூர்ண ராமாயணம்’ என்ற நாடகம் நடந்து வந்தது. அதில் என்.எஸ்.கிருஷ்ணனும் என்.எஸ்.நாராயண பிள்ளையும் நகைச்சுவை வேடத்தில் நடித்து வந்தனர்.

ஒருநாள் நாடகத்தில் சூர்ப்பனகை பங்கத்துக்குப் பிறகு கர-தூஷண வதம் செய்கிற காட்சி. கரனாக வேடம் போட்டிருந்த நாராயணப் பிள்ளை ‘வதம்’ செய்யப்படுவதற்கு முன் வேடிக்கையான வசனங்களைப் பேசி மக்களின் ஆரவாரத்தை தூண்டுவது வழக்கம். அன்று அப்படி நாராயணப் பிள்ளை வசனம் பேசத் தொடங்கினார்…
“ஏ! தங்காய்… சூர்ப்பனங்காய்!” என்று காயில் முடிகிற வசனங்களாகப் பேசி கரவொலி பெற்றார். அவருக்குப் பிறகு தூஷணன் வேடம். தூஷணனாக கலைவாணர் வந்தார். நாராயணப் பிள்ளையைவிட அதிகமாக மக்களின் கைத்தட்டலைப் பெறுவது என முடிவு செய்து, பேசத் தொடங்கினார்…
“நீலமேக சியாமள ரூபா! அணா! பைசா!” என்று பேசினார். கலைவாணர் இப்படிப் பேசியதும் மக்கள் வெகுவாக ஆரவாரம் செய்தனர். நாராயணனுக்கு வந்ததைவிட கைத்தட்டல்கள் அதிகம் கிடைத்தது. இப்படித் தொடங்கியதுதான் கலைவாணரின் நகைச்சுவை சாம்ராஜ்யம்.

நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது. கிருஷ்ணன், ‘சதிலீலாவதி’ என்ற படத்தில் நடிக்கத் தொடங்கினார். இந்தப் படம் ஜெமினி பிக்சர்ஸ் கம்பெனியால் தயாரிக்கப்பட்டது. எஸ்.எஸ்.வாசன்தான் கிருஷ்ணனுக்கு திரைப்படத்தில் முதல் வாய்ப்பு வழங்கினார். ஆனால், டி.கே.எஸ். குழுவால் நாடகமாக நடிக்கப்பட்ட ‘மேனகா’ என்ற கதை படமாக எடுக்கப்பட்டபோது அதில் கிருஷ்ணன் நடித்தார். எதிர்பாராதவிதமாக இந்தப் படம் முதலில் வெளியாகிவிட்டது. ஆகவே, மக்களுக்கு கிருஷ்ணன் திரையில் அறிமுகமான முதல் படம் ‘மேனகா’.

ஒருபடத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட பிறகு அந்தப் படத்தின் படப்பிடிப்பு முடியும் வரை அதைப் பற்றியே யோசிப்பது, தனக்கு வழங்கப்பட்டிருக்கும் பாத்திரத்தை மேலும் எவ்வாறு மெருகூட்டுவது என்று சிந்தித்துக்கொண்டு இருப்பது என்று வழக்கமாகக் கொண்டிருந்தார் கலைவாணர். அப்படி ஒருநாள் மாடர்ன் தியேட்டர்ஸின் ‘மாணிக்கவாசகர்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது படத்தின் இயக்குநர் டி.ஆர்.சுந்தரம் தன்னுடைய வாய்ஜாலத்தை கிருஷ்ணன் காதுபடவே காட்டியிருக்கிறார். ஆனால், சுந்தரம் அமைத்திருந்த காட்சியமைப்பில் கிருஷ்ணனுக்கு அவ்வளவு உடன்பாடு இல்லை. எனவே, “காட்சியை மாற்றியமைக்க வேண்டும். அதை என்னுடைய பொறுப்பில் விட்டுவிடுங்கள். காட்சி எடுத்து முடித்தபிறகு எப்படி வந்திருக்கிறது என்று பாருங்கள். அப்போது உங்களுக்கு அந்தக் காட்சியில் திருப்தி இல்லையென்றால் அதை வெட்டி எறிந்துவிடுங்கள். அதற்கான செலவை நான் தந்துவிடுகிறேன்” என்று யாரும் நேருக்கு நேர் நின்று பேசத் தயங்கும் டி.ஆர்.சுந்தரத்தைப் பார்த்து கிருஷ்ணன் உரத்துச் சொல்லிவிட்டார். இதைக் கேட்ட படப்பிடிப்புக் குழுவினர் மத்தியில் ஒரே ஆச்சர்யம், அதிர்ச்சி. ஆனால், சுந்தரம் எதுவும் சொல்லவில்லை. கிருஷ்ணனின் நிபந்தனைக்கு தலை அசைத்துவிட்டார். படப்பிடிப்பு தொடங்கியது. கிருஷ்ணனும் மதுரமும் இணைந்து நடித்த அந்தக் காட்சி எடுத்தாகிவிட்டது. காட்சியைத் திரையிட்டு பார்த்தபோது சுந்தரத்துக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. அப்படியே கலைவாணரை ஆரத்தழுவிக் கொண்டார். அதன்பிறகு கலைவாணர் மதுரம் நடிக்கும் மாடர்ன் தியேட்டர்ஸின் எந்தப் படமானாலும் படப்பிடிப்பு தளத்தில் டைரக்டர் நுழைவதே இல்லை.

அதேபோல, படப்பிடிப்புக்கு போகும்போது நேரம் தவறாமல் குறித்த நேரத்துக்கு சில மணி முன்பே போய்விடுவதை கிருஷ்ணன் கடைப்பிடித்து வந்தார்.

ஜெமினி பிக்சர்ஸ் ‘மங்கம்மா சபதம்’ படத்தை எடுத்து வந்த சமயம். கலைவாணரும் அவரது குழுவினரும் நிர்ணயிக்கப்பட்டிருந்த படப்பிடிப்பு நேரமான காலை 7 மணிக்கு முன்பே வந்துவிட்டனர். ஆனால், குழு நடிகர்களில் ஒருவரான ‘புளிமூட்டை’ ராமசாமி மட்டும் 6.45 ஆகியும் வரவில்லை. விஷயத்தை கேள்விப்பட்ட ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன், “இன்னும், அந்த நடிகர் ஏன் வரவில்லை?” என்று கேட்டுக்கொண்டே கைக் கடிகாரத்தைப் பார்த்தபடி தமது அறைக்கு வெளியே இருந்த தாழ்வாரத்தில் நடந்து கொண்டிருந்தார். புளிமூட்டை வந்து சேராததைப் பற்றி வாசன் விசாரித்த செய்தி கலைவாணருக்கு எட்டியது. மேக்கப் அறையிலிருந்து அப்படியே வெளியே வந்தவர், வாசன் நடைபோட்டுக் கொண்டிருந்த தாழ்வாரத்தை நோக்கி மெல்ல கணைத்துக்கொண்டே வந்தார். வாசன் அவரை நிமிர்ந்து பார்த்தார், கலைவாணர் “வணக்கம்” என்று கைகுவித்துச் சொன்னார். “புளிமூட்டை ராமசாமி இன்னும் வரவில்லை என்று தாங்கள் கவலைப்பட்டதாகக் கேள்விப்பட்டேன், அவன் எப்படியும் 7 மணிக்குள் வந்துவிடுவான். எங்கள் குழுவில் நேரம் தவறாமல் படப்பிடிப்பில் கலந்துகொள்ள வேண்டும் என்பதைக் கடைப்பிடித்து வருகிறோம். நீங்கள் கவலைப்பட வேண்டாம்” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது மணி 6.59. அதேநேரத்தில், புளிமூட்டை வேர்க்க விறுவிறுக்க அவர்கள் முன் வந்து நின்றார். வாசன் முகம் மலர்ந்தது. கலைவாணரின் பேரில் அவர் கொண்டிருந்த மதிப்பு உயர்ந்தது.

புளிமூட்டை ராமசாமிக்கு ‘புளிமூட்டை’ என்று பட்டப்பெயர் வந்ததும் கலைவாணரின் திருவாயால்தான். கலைவாணர் தனது ‘அசோகா ஃபிலிம்ஸ்’ தயாரித்த ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ (எம்.ஜி.ஆர். நடித்த படம் அல்ல) என்ற படத்தில் ராமசாமிக்கு ஒரு திருடன் வேடம். படப்பிடிப்பின்போது ராமசாமி மேக்-அப்போடு நடித்துக்கொண்டிருந்தார். கதையின்படி கள்வர் கூட்டத்தில் சிக்கிய கலைவாணர், ராமசாமியைத் தேடினார். அவரைக் காணவில்லை. உடனே அருகில் இருந்தவரிடம் “எங்கே அந்தப் புளிமூட்டை” என்று வேடிக்கையாகக் கேட்டார். அன்று முதல் ராமசாமியின் பெயருக்கு முன்னால் புளிமூட்டை சேர்ந்துகொண்டது. இதேபோல் ‘யதார்த்தம்’ பொன்னுசாமி பிள்ளைக்கும் ‘யதார்த்தம்’ என்ற பட்டப்பெயர் மற்றொரு படப்பிடிப்பில் கலைவாணரால் வழங்கப்பட்டதுதான்.

மாம்பலம் வெங்கட்டராம ஐயர் தெருவிலிருந்த கலைவாணரின் இல்லம் எப்போதும் கலகலப்போடு இருக்கும். தன்னுடைய வீட்டில் ஏதாவது நிகழ்ச்சிக்கு ஒத்திகை நடத்த ஏற்பாடு செய்திருந்தால் முதலில் கலைவாணர் மாடியிலிருந்து இறங்கி வருவார். நிகழ்ச்சி நடக்க இருக்கும் இடத்தை ஒருமுறை உற்றுப் பார்ப்பார். “ஏம்ப்பா! ஜமக்காளத்தை இன்னும் விரிக்கவில்லையா…” என்று கேட்டுக்கொண்டே தாமே ஜமக்காளத்தை எடுத்து விரித்துவிடுவார். தாம் ஒரு பெரிய திரைப்படக் கம்பெனி நடத்தி வந்த போதிலும் தம்மை யாரும் ‘முதலாளி’ என்று கூப்பிடுவதை அனுமதிக்கமாட்டார். எல்லாருக்கும் அவர் ‘அண்ணன்’தான். அவரது கம்பெனியில் புதிதாக வேலைக்கு சேர்ந்திருந்த பையன் அவரை அப்படி ‘முதலாளி’ என்று அழைத்துவிட்டான். உடனே அவர், “ஏண்டா தம்பி, இப்படியெல்லாம் என்னை உயர்த்தித் திட்டுறே? சும்மா ‘அண்ணே’ன்னு கூப்பிடு போதும்” என்றார். அப்படித் தொழிலாளர் மத்தியிலும் அவர் ஏற்றத்தாழ்வை பார்த்ததில்லை.

தான் ஒரு பெரும் நடிகன் என்ற கர்வம் அவருக்கு எப்போதும் இருந்தது இல்லை. தன்னைவிட புகழில் குறைந்த நடிகர்களாக இருந்தவர்களிடத்திலும் அவர் ஏற்றத் தாழ்வின்றி பழகுவார். ஒருநாள் திடீரென்று ஃபிரெண்ட் ராமசாமியின் வீட்டுக்கு என்.எஸ்.கே. சென்றார். தரையில் மலையாளப் பாயை விரித்துப் படுத்திருந்த ராமசாமிக்கு கலைவாணரைக் கண்டதும் ஒரே ஆச்சர்யம். அதோடு வணக்கத்தையும் வைத்தார்.

“எவ்வளவு தூரத்திலிருந்து வரேன் தெரியுமா உனக்கு?” என்று கேட்டுக்கொண்டே கிருஷ்ணன் கட்டிலில் அமர்ந்தார். “அண்ணே டீ சாப்பிடுங்கள்” என்று ராமசாமி பணிவாக உபசரித்தார். “நான் டீயை சாப்பிடுவதில்லை. குடிப்பதுதான் வழக்கம்” என்று தனது பாணியிலேயே சொன்னார். தொடர்ந்து, “டேய் ராமசாமி இப்போதான் நீ நடித்த ‘மனம்போல் மாங்கல்யம்’ படம் பார்த்தேன். மிக நன்றாக வந்திருக்கிறது. நீயும் நன்றாக நடித்திருக்கிறாய். நீ முன்னுக்கு வருவாய். இதைச் சொல்லிவிட்டுப் போகத்தான் வந்தேன்” என்றார். இதைக் கேட்ட ராமசாமிக்கு அளவுகடந்த மகிழ்ச்சி.

கலைவாணர் தாம் வாழ்ந்த காலத்தில் அரசியல் சார்பற்றவராக திகழ்ந்தார். தி.மு.க-வுக்கு எதிராகப் பிரசாரம் செய்யும் ப.ஜீவானந்தத்தோடும் பழகுவார். தி.மு.க. தலைவரான அண்ணாவோடும் பழகுவார். ஜீவா மீது எவ்வளவு பற்று கொண்டிருந்தாரோ அதேபோல அறிஞர் அண்ணா மீதும் அளவில்லா அன்பு கொண்டிருந்தார்.

1957-ம் ஆண்டு தமிழ்நாட்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. காஞ்சிபுரம் தொகுதியில் அண்ணா போட்டியிட்டார். அவருக்கு எதிராக காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் சீனிவாசன் நிறுத்தப்பட்டிருந்தார். கலைவாணர் அண்ணாவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டார். காங்கிரஸ் வேட்பாளர் மருத்துவத் துறையில் கைராசிக்காரர். மிகவும் புகழ் பெற்றவர். எனவே, என்.எஸ்.கே. பிரசாரத்தை இப்படித் தொடங்கினார்… “இந்தக் கைராசிக்காரருக்கு உங்க வாக்குகளை அளித்து சட்டசபைக்கு அனுப்பிவச்சுட்டா, உங்க குழந்தை குட்டிகளுக்கு ஒடம்புக்கு ஏதாவது வந்துட்டா என்ன செய்வீங்க? நல்லா யோசிச்சு உங்க ஓட்டை யாருக்குப் போடணுமோ அவங்களுக்குப் போடுங்க!” என்று மக்களை சிரிக்க வைத்தார். அண்ணாவை ஜெயிக்க வைத்தார்.

கலைவாணர் தன் வாழ்வின் இறுதி நாள் வரை தனக்கென்று எதையும் வைத்துக்கொள்ளவில்லை. இருப்பதை எல்லாம் ஏழை எளியவர்களுக்கு இரண்டு கைகளாலும் வாரி வழங்கினார். வீட்டு வாசலில் ‘அண்ணே’ என்று குரல் கேட்டால் அதற்குப் பதில் குரல் ‘அன்புக்குரலாக’ ஒலிக்கும், இல்லை என்று வந்தவர்களுக்கு இல்லை என்று அனுப்பியது கலைவாணர் சரித்திரத்தில் இல்லை.

அப்படிப்பட்ட கலைஞன் துரதிர்ஷ்டவசமாக சிறை செல்ல நேரிட்டது. ‘இந்து நேசன்’ பத்திரிகை ஆசிரியர் லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 1944-ம் ஆண்டு கலைவாணர் கைதானார். அவரோடு அன்றைய சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதரும் கைதானார். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, பிரிவு கவுன்சில் அப்பீலுக்குப் பிறகு, இரண்டு ஆண்டுகள் கழித்து 1946 ஏப்ரல் 25-ம் தேதி கலைவாணரும் பாகவதரும் விடுதலை செய்யப்பட்டனர்.

சிறையிலிருந்து விடுதலையானபிறகு ஓய்வின்றி படங்களில் நடிக்கத் தொடங்கினார். பழைய உற்சாகத்தோடு நடித்தார். ஓய்வின்றி உழைத்தவரை பலர் ஓய்வெடுக்க வேண்டினர். சிலர் வற்புறுத்தி குற்றாலத்துக்கு அழைத்துச் சென்று அவரை ஓய்வெடுக்க வைத்தனர். குற்றாலத்தில் கலைவாணர் வயிற்றில் வீக்கம் ஏற்பட்டது. அப்போதும் உற்சாகத்தோடு வீங்கியிருந்த வயிற்றைப் பார்த்து நகைச்சுவை செய்தார். பிறகு சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டார். தமிழ்நாட்டின் பெருந்தலைவர்களும் திரைப்படத்துறையின் பெரும் நடிகர்களும் அவரை வந்து பார்த்தனர். வந்தவர்களிடமெல்லாம் சிரித்துப் பேசினார். “உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்றவர்களிடமெல்லாம் “அவ்வளவு சீக்கிரம் எமன் என்னைக் கொண்டுபோய்விட மாட்டான். நான் இன்னும் கலை உலகுக்குத் தொண்டு செய்ய வேண்டியிருக்கு” என்று சொன்னார்.

கலைவாணர் மருத்துவமனையில் இருந்தபோது ஒரு தனி ஆள் நியமித்து, தனக்கு வந்து குவிந்த பழங்களை சாறு பிழிந்து மருத்துவமனையில் இருந்த எல்லா நோயாளிகளுக்கும் கொடுக்கச் செய்தாராம்.

திடீரென்று ஒருநாள் அந்தச் செய்தி தமிழகம் முழுவதும் காட்டுத் தீயாகப் பரவியது. கோவை, சேலம் உள்ளிட்ட படப்பிடிப்புத் தளங்களில் உடனடியாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. சென்னையில் உள்ள ஸ்டூடியோக்களிலும் படப்பிடிப்புத் தளங்களிலும் படப்பிடிப்பு ரத்து. செய்தியைக் கேட்டதும் சினிமா கலைஞர்களும் தமிழ்த் திரைப்பட ரசிகர்களும் அந்தத் துயரத்தைக் காண சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு விஜயம் செய்யத் தொடங்கிவிட்டனர். நல்லவேளை, அவர்கள் எதிர்பார்த்து வந்த துயரம் அங்கு நடந்திருக்கவில்லை. இறந்துவிட்டதாகச் சொல்லப்பட்ட கலைவாணர் படுக்கையில் உட்கார்ந்து கொட்டக் கொட்ட விழித்தபடி குறையாத சிரிப்போடு வெற்றிலை போட்டுக்கொண்டிருந்தார். ஆனால், வந்தவர்கள் எதற்கு வந்தார்களோ அந்த வேலையை செய்யத் தொடங்கிவிட்டனர். கலைவாணரைப் பார்த்து விம்மத் தொடங்கிவிட்டனர். பிறகுதான் கலைவாணருக்கு காரணம் புரிந்தது. யாரோ புரளி செய்திருக்கிறார்கள் என்று!

எதிர்பார்த்து வந்தவர்களை இல்லை என்று அனுப்பியதில் மனம் உடைந்தாரோ என்னவோ, அவர்களை ஏமாற்றக்கூடாது என்றுகூட நினைத்து இருக்கலாம். 1957-ம் ஆண்டு ஆகஸ்ட் 30-ம் நாள் தமிழகம் நினைத்து முன்பு ஏமாந்த அந்தத் துயரம் நடந்தேவிட்டது. ஒரு சகாப்தம் முடிந்தேவிட்டது.

பயோ-டேட்டா…

பெயர்: என்.எஸ்.கிருஷ்ணன்
காலம்: 29.11.1908 – 29.08.1957
பிறந்த ஊர்: ஒழுகினசேரி – கன்னியாகுமரி மாவட்டம்
பெற்றோர்: சுடலையாண்டி பிள்ளை – இசக்கியம்மாள்
உடன் பிறந்தோர்: 6 சகோதரிகள் (வீட்டில் இவர் மூன்றாவது பிள்ளை)
மனைவிகள்: நாகம்மை (முதல் மனைவி)
                        டி.ஏ.மதுரம் (இரண்டாவது மனைவி)
                        வேம்பு (மூன்றாவது மனைவி, மதுரத்தின் தங்கை)
குழந்தைகள்: 8 பேர்
படிப்பு: 4-ம் வகுப்பு
தொழில்: நடிப்பு, இயக்கம், தயாரிப்பு (நாடகம் மற்றும் சினிமா)
சொந்த நிறுவனங்கள்: என்.எஸ்.கே. நாடகக் குழு மற்றும் அசோகா ஃபிலிம்ஸ்.
சந்தோஷம்: உதவி கேட்டு வந்தவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் உதவி செய்வது.
வருத்தம்: தன் இறுதி நாட்களில், பண வசதி, உடல் நலம் இல்லாமல் இருந்தபோது உதவி கேட்டு வந்தவர்களுக்கு உதவி செய்ய முடியாமல் போனது.
அரசியல்: மக்களுக்கு நல்லது செய்கிற கட்சிகளை ஆதரிக்கும் அளவுக்கு மட்டுமே அரசியலில் ஈடுபாடு.
அரசியல் நண்பர்கள்: பேரறிஞர் அண்ணா (தி.மு.க.)
                                    பா. ஜீவானந்தம் (இ.கம்யூ)
இயக்கிய படங்கள்: மங்களம் (1951), பீலி கூத்ரு (1951), பணம் (1952)
நடித்துப் புகழ்பெற்ற நாடகம்: மேனகா
புகழ்பெற்ற வில்லுப்பாட்டு கதை: கிந்தனார்.

14 February 2010

குண்டு வெடிக்கும் பாடலாசிரியர்.

Posted by Gunalan Lavanyan 6:17 AM, under | 1 comment

திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் அண்ணாமலையின் சமீபத்திய பல பாடல்கள் செம ஹிட். கடந்த ஆண்டு ‘டாப் 10’ பாடல்கள் வரிசையில் இவரது இரண்டு பாடல்கள் இடம் பிடித்தன. ‘என் உச்சி மண்டையில சுர்ருங்குது’ன்னு இவர் எழுதிய ‘வேட்டைக்காரன்’ படப் பாடல் குழந்தைகள் மத்தியிலும் நல்ல பிரபலம். ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தில் இவர் எழுதிய ‘பண்ணாரஸ் பட்டு கட்டி’ பாட்டும் மெகா ஹிட். அதேபோல ‘என் பேரு முல்லா...’, ‘நண்பனை பார்த்த தேதி மட்டும்...’ பாடல்களும் ஹாட் டாக். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஃபில்., தமிழ் இலக்கியம் படித்துவிட்டுப் பாடல் துறையில் இறங்கியிருப்பவர். இவர் பாடலாசிரியராக பரிணாமம் அடைவதற்கு முன்பே ழ, விருட்சம், அரும்பு என பல சிறு பத்திரிகைகளில் 50 க்கும் அதிகமான கவிதைகளை எழுதியிருக்கிறார். தவிர ஆனந்தவிகடன் போன்ற வெகுஜன பத்திரிகைகளிலும் இவரது கவிதைகள் 50க்கும் அதிகமாக வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.அவரிடம் நமது doordo (செய் அல்லது செய்) ப்ளாகுக்காக எடுக்கப்பட்ட ஸ்பெஷல் பேட்டி. தற்போது ஓடிக்கொண்டு இருக்கும் 'ரசிக்கும் சீமானே' படத்தில் ரீமிக்ஸிய 'ரசிக்கும் சீமானே பாடலுக்கு இவர், வரிகள் எழுதும் போது குண்டுவெடிக்கும் நெஞ்சுவெடிக்கும் என்று எழுதி ரசிகர்கள் மனசை வெடிக்க வைத்திருக்கிறார்... அவரிடம் நிறைய பேசியதிலிருந்து தொகுக்கப்பட்ட நேர்காணல்.

அணுகுண்டு சோதனையில்
அத்தனை சேதமில்லை
பெண்கொண்ட பேரழகில்
பிழைத்தவன் யாருமில்லை!
- கவிஞர் அண்ணாமலை

‘‘நான் பிறந்த ஊர் திருவண்ணாமலை. என் தாய்வழித் தாத்தா வெச்ச பேரு அண்ணாமலை. எனக்கு சொந்த ஊர், தென்னாற்காடு மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகிலுள்ள கீழப்பட்டு கிராமம். கீழப்பட்டு கிராமத்தில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன். திருவண்ணாமலையில் பத்தாவது வரைக்கும் படிப்பு. மேல்நிலை படிப்பை சங்கராபுரத்துல முடிச்சேன்.
பள்ளிக் காலத்திலேயே எனக்கு கவிஞர் வைரமுத்துன்னா உயிர். குறிப்பா, அவர் குங்குமத்துல எழுதுன ‘இதுவரை நான்’ தொடர் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அந்தத் தொடர் வரும்போது கீழப்பட்டு கிராமத்தில் இருந்தால், பத்து கிலோமீட்டர் வரை சைக்கிள் மிதித்துக்கொண்டு கள்ளக்குறிச்சிக்குப் போய், குங்குமம் வார இதழை வாங்கி முதல் ஆளா படிப்பேன். அத படிக்கலன்னா அன்னிக்கு சாப்பிடவே பிடிக்காது. அந்த அளவுக்கு வைரமுத்து என்னை பாதிச்சார். தவிரவும், நான் சினிமா பாட்டெல்லாம் ரசிச்சு கேட்க ஆரம்பிச்ச பன்னிரெண்டு வயசுல வைரமுத்து பாட்டுதான் எங்க பாத்தாலும் கேட்கும். ‘இளையநிலா பொழிகிறது...’, ‘பனிவிழும் மலர்வனம்...’ எல்லாம் என்னை எங்கோ அழைச்சுட்டுப் போகும்.
அந்த ஈர்ப்பால, பள்ளி முடிச்சதும் வைரமுத்து படிச்ச கல்லூரியிலேயே படிக்கணும்னு நினைச்சிதான் சென்னை பச்சையப்பன் கல்லூரியில சேர்ந்தேன். அப்புறம் இளங்கலை, முதுகலை, எம்.ஃபில். ஆய்வு படிப்புன்னு ஏழு வருஷம் பச்சையப்பன் கல்லூரியிலேயே போச்சு. கல்லூரி காலத்துல நிறைய கவிதை போட்டிகள், ஒவ்வொரு கல்லூரியிலும் நடக்கும். எல்லா கவிதை போட்டியிலும் கலந்துக்குவேன். பாடலாசிரியர் கபிலன் அப்போ என்னுடைய வகுப்புத் தோழர். நானும் கபிலனும்தான் கவிதைப் போட்டியில எங்க கல்லூரி சார்பா கலந்துக்குவோம். 
அப்படி கவிதை போட்டிகள்ல நிறைய முதல் பரிசு வாங்கியிருக்கேன். அநேகமா, போட்டியில கலந்துகிட்டா, பரிசு வாங்காம வந்த தருணங்கள் மிகவும் குறைச்சல்!
அப்போ இயக்குநர் செல்வா, எனக்கு சீனியர் மாணவரா பச்சையப்பன் கல்லூரியில படிச்சிட்டு இருந்தார். அந்த நேரத்துல அவர் ‘சித்திரப் பாவை’ன்னு ஒரு தொடர் எடுத்தார். பாலபாரதி இசை அமைச்சாரு. அந்தத் தொடருக்கு ஒரு டைட்டில் சாங் தேவை. அதுக்கு ‘பிரபலமான பாடலாசிரியர்களை வெச்சி பாடல் எழுத வேணாம். நம்ம கல்லூரியில் இருக்கிற திறமையான மாணவர் யாரையாவது வெச்சி எழுதிக்கலாம்’னு செல்வா முடிவு பண்ணியிருந்தார். நிறைய கவிதைப் போட்டிகள்ல நான் பரிசு வாங்கியிருந்ததால என்னை அழைத்து அதற்குப் பாடல் எழுதச் சொன்னார். அதுதான் என் முதல் பாடல் அனுபவம். அப்புறம் ‘நீலா மாலா’ன்னு ஒரு சீரியல் எடுத்தார். அதுலயும் நான் பாட்டு எழுதினேன். எனக்கு பாட்டு எழுதணுங்கிற ஆசை இல்லாத காலத்துலேயே, இயக்குனர் செல்வா எனக்கு வாய்ப்பு கொடுத்து எழுத வெச்சாரு. 
அதுக்கப்புறம் இசையமைப்பாளர் காந்திதாசன், எனக்கு ஜூனியர் மாணவரா பச்சையப்பன் கல்லூரியில படிச்சிட்டு இருந்தார். அவர் தினமும் ஏதாச்சும் டியூன் போட்டுட்டே இருப்பார். அந்த டியூனுக்கு நான் பாட்டு எழுதிக்கிட்டே இருப்பேன். இப்படி ஒரு ரெண்டு வருஷம். அதுல டியூனுக்கு எழுதறதுல எனக்கு நல்ல பயிற்சி கிடைச்சுது.
பச்சையப்பன் கல்லூரியில எம்.ஃபில் முடிச்சுட்டு, வெளியே வந்தப்ப, செல்வாகிட்ட உதவியாளரா இருந்த சுகி.மூர்த்திங்கறவர் ‘கும்மாளம்’ படத்தை இயக்கினாரு. அதுக்கு காந்திதாசன்தான் இசை. அதுல மூணு பாட்டு எழுதச் சொன்னாங்க. ‘திம்சுகட்ட அடடா திம்சுகட்ட...’ன்னு அதுல நான் எழுதினதுதான் என் முதல் சினிமா பாட்டு. ‘சின்ன சின்னதாய் சிறகுகள் முளைக்கிறதே’, ‘ஒவ்வொரு நாளும் உன்முகம் பார்த்து’ன்னு மீதி ரெண்டு பாட்டும் அதுல வரும்.
அதைத்தொடர்ந்து குறிப்பிட்ட இடைவெளிகளில் ‘சேனா’, ‘ஸ்டூடண்ட் நம்பர் 1’, ‘மச்சி’ ‘ஜோர்’, ‘காற்றுள்ள வரை’, ‘ஜங்ஷன்’ போன்ற 10 படங்களுக்கு எழுதினேன். அப்படி நான் எழுதிய எல்லா பாட்டுமே எனக்கு பிடிக்கும். ‘திம்சு கட்டை’ பாட்டுல, 
‘செவப்பா செவப்பா ஒரு ஃபிகரு...
சிரிச்சா சிரிச்சா அட ஃபயரு!
அவ காம்ப்ளான் வாங்கிக் குடிச்சா 
ஹார்லிக்ஸ் மனசு நோகும்...
ஹெச்.எம்.டி. வாச்சு போட்டா, 
டைட்டான் ரொம்ப பாவம்...’
- இப்படி எழுதின எல்லா வரிகளும் நிறைய பேருக்கு பிடிச்சது. ‘சேனா’ படத்துல,  ‘பூச்செடிக்குகூட இந்த வீட்டில் 
காதல்தான் உண்டாச்சா... 
நீ போன பின்பு பூக்கவில்லை செடிகள் 
ஏன் என்று சொல்வாயா?
இதோ இந்த பூந்தொட்டி 
உன்னைக் கண்டால் பூப்பூக்கும்... 
அதோ அந்த நாய்க்குட்டி 
நீதான் வந்தால் வாலாட்டும்...’ என்பது போல எல்லா பாட்டிலும் நல்ல கற்பனை, புதுமை இருந்தாலும் எல்லாரையும் என் பாடல்கள் போய் சேரலை.
இப்படி போய்கிட்டிருந்த என் பாடல் பயணத்தில் முக்கியமான திருப்பம், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியை சந்தித்ததுதான். அவரை தொடர்புகொண்டதும், என் திறமையை பரிசோதிக்க பாடல் மற்றும் மெட்டு சார்ந்த ரெண்டுவிதமான டெஸ்ட் வைத்தார். அதுல அவர் திருப்தியானதும் எனக்கு, அடுத்தடுத்து வாய்ப்பளித்தார். 
ஏவி.எம்-;மின் ‘அ ஆ இ ஈ’ படத்துல ‘நட்டநடு ராத்திரியை பட்டப்பகல் ஆக்கிவிட்டாய்’னு வரும் பாட்டு, ஓரளவு ஹிட் ஆச்சு. விஜய் ஆண்டனியோட இசையில ‘ரசிக்கும் சீமானே’, ‘பந்தயம்’னு தொடர்ந்து எழுதினேன். ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்துல மூணு பாட்டு... ‘பண்ணாரஸ் பட்டு கட்டி’, ‘என் பேரு முல்லா’, ‘நண்பனை பார்த்த தேதி மட்டும்’னு மூணுமே ஹிட். ‘பண்ணாரஸ்’ மெகா ஹிட். அடுத்து, விஜய் ஹீரோவா நடிச்ச ‘வேட்டைக்காரன்’ படத்துலயும் விஜய் ஆண்டனிதான் என் பேரை இயக்குநர் பாபுசிவனிடம் முன்மொழிந்து, என்னை எழுத வெச்சார். அப்படி எழுதின ‘என் உச்சி மண்டையில சுர்ருங்குது’ பாட்டும் மெகா ஹிட்! 
அந்த பாட்டை ரொம்ப திட்டமிட்டு எழுதினேன். ‘என் உச்சி மண்டையில சுர்ருங்குது உன்னை நான் பாக்கையில கிர்ருங்குது... கிட்ட நீ வந்தாலே விர்ருங்குது... டர்ருங்குது’ன்னு பல்லவி எழுதினேன். குழந்தைகளுக்கு பிடிக்கணுங் கிறதுனால சரணத்துல, ஆட்டுக்குட்டி, பூனை யானை, பேனா, இந்த மாதிரி வார்த்தைகள்லாம் பயன்படுத்தி இருப்பேன். அப்புறம் கிராமத்து வார்த்தைகளான ‘கம்மாங்கர காடு, சுட்ட கருவாடு’ன்னு வார்த்தைகள் வரும். இதுல விஜய்க்கு பொருத்தமா எழுதணும்னு ‘அப்பாவியா மூஞ்ச வெச்சி அங்க இங்க கைய வெச்சி, நீயும் என்னை பிச்சி தின்ன கேக்குறியேடா’ன்னு எழுதினேன். அனுஷ்காவுக்கு மூக்கு நீளம்ங்கறதால ‘துப்பாக்கியா மூக்க வெச்சி, தோட்டா போல மூச்ச விட்டு நீயும் என்னை சுட்டுத் தள்ள பாக்குறியேடி’ன்னு எழுதினேன். இப்படி எல்லாருக்கும் பொருத்தமா அமையணும்னு மெனக்கெட்டு எழுதுன பாட்டு, குழந்தைகளுக்கும் புடிக்கணும்னுதான் அதுல... காகிதம், பேனா, யான, பூன, ஆட்டுக்குட்டி போன்ற வார்த்தைகளையும் பயன்படுத்தினேன். இப்ப அந்த பாட்டுதான், சினிமா துறையினர் மத்தியிலும், மக்கள் மத்தியிலயும் ‘அண்ணாமலைன்னு ஒருத்தர் பாடல் எழுதிட்டு இருக்கார்’னு என்னை பிரபலப்படுத்தியிருக்கு!
அப்புறம் நடிகர் விஜய், வேட்டைக்காரன் பட ஆடியோ ரிலீஸ் சமயத்துல ‘பண்ணாரஸ் பட்டு கட்டி பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்’னு மேடையில சொன்னதிலும் எனக்குப் பெருமை. ‘என் உச்சி மண்டைல’ பாட்டும் அவருக்குப் ரொம்ப புடிச்சதுதான்!
‘வேட்டைக்கார’னுக்குப் பிறகு 17 பாட்டு எழுதிட்டேன். மேக்சிமம் குத்துதான். சினிமால அப்படித்தானே... ஒரு குத்து ஹிட்டானா, அப்புறம் குத்தோ குத்து, கும்மாங்குத்துதான்!
‘ரசிக்கும் சீமானே’ படத்துல ரெண்டு பாட்டு எழுதியிருக்கேன். ‘ஓ ரசிக்கும் சீமானே’ன்னு வர ரீமிக்ஸ் பாட்டுல ‘உன் கெண்டைக்கால் அழகுல என் கண்ணு வழுக்கும்... நீ குணியும்போது மனசுக்குள்ள குண்டு வெடிக்கும்’னு  ரெண்டு வரி வரும். இது கிளப்ல ஆடற மாதிரியான சூழல்ல வர்ற பாட்டு. கொஞ்சம் அசைவமாவும் யோசிக்கவேண்டியிருந்துச்சு. 
‘ரெட்டைச்சுழி’ படத்துல கார்த்திக் ராஜா இசையில, சுந்தர்.சி பாபு இசையில ‘அகராதி’, நடிகர் ஜீவா ரெட்டை வேடத்துல நடிக்கிற ‘சிங்கம் புலி’ங்கிற படத்துல, பிரசாந்த் ஹீரோவா நடிக்கிற ‘மம்முட்டியான்’ படத்துல, எஸ்.ஏ.சி-யோட ‘வெளுத்துக்கட்டு’ படத்துல, மணிஷர்மா இசையில ஒரு பாட்டுன்னு இந்தப் பட்டியல் இன்னும் நீளுது...
நான் எழுதுற ஒவ்வொரு பாடலும் ‘வெறும் வெற்று வார்த்தைக் கூட்டங்களாக இருக்கக்கூடாது. அதுல நம்ம வாழ்ந்த வாழ்கையின் அடையாளம் இருக்கணும்’னு நெனைக்கிறேன். சன் டி.வி.யில வர்ற ‘தங்கம்’ சீரியல்ல டைட்டில் சாங்லகூட ‘துன்பம் உன்னை செதுக்கும், நீ சிந்தும் வியர்வைத் துளிகள்... எல்லாம் வெற்றிப் படிகள்’னு எழுதியிருப்பேன். பாடல் துறையில் என் வியர்வைத் துளிகள் அத்தனையும் எதிர்காலத்தில் நிச்சயம் வைரக் கற்களாக மாறும் என்பது என் அசைக்கமுடியாத நம்பிக்கை!’’
சந்திப்பு: சா.இலாகுபாரதி புகைப்படங்கள்: ஜான்

13 February 2010

சல்லாப காதலர்கள் ஜாக்கிரதை!

Posted by Gunalan Lavanyan 6:57 PM, under | No comments

காதலர் தினத்தை கொண்டாடுவதற்காக நிறைய காதல் ஜோடிகள் முன்கூட்டியே காண்டம்களை வாங்கிவருவதாகவும், அதனால் காதலர் தின ஸ்பெஷல் விற்பனையாகவே உலகமெங்கும் மில்லியன் கணக்கில் காண்டம்கள் விற்பனை ஆகி இருப்பதாகவும் கூறுகிறார்கள்.


காதலர் தினம் என்ற பெயரில் இப்படி சல்லாபமாக இருக்க விரும்பும் காதல் ஜோடிகளை எச்சரிப்பதற்காகவே இந்தக் கட்டுரை. தவிர காதலர்களுக்கோ அல்லது காதலர் தினத்தை சல்லாபமாக கழிக்க வேண்டும் என்று திட்டமிட்டு இருக்கும் காதல் ஜோடிகளுக்கோ எதிரான கட்டுரை அல்ல.

தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக காம லீலைகளில் ஈடுபடும் காதல் (காம) ஜோடிகளில் சிலர் அந்தத் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாக எண்ணி காம விளையாட்டில் ஈடுபடும்போது அதை செல்போனில் படம் பிடித்து விடுகிறார்கள். தெரிந்தோ, தெரியாமலோ இப்படி செய்பவர்கள் அவசியம் இத்தகைய வீடியோ பதிவுகளை தவிர்ப்பதுதான் உத்தமம். காரணம், செல்போனில் பதிவு செய்து அதை அல்பத்தனமாக பிறகு பார்த்து ரசிக்கலாம் என்று கருதியிருப்பார்கள். ஆனால், அந்த அல்பத்தனமே அதன்பிறகு அவர்களுக்கு ஆப்புவைக்கும்.

அது எப்படி என்று பார்ப்போம்?
பல ஆண்கள் (சில பெண்கள்), இந்த வீடியோ பதிவை தங்களுடைய நண்பர்களுக்கு போட்டு காட்டியும், புளூ டூத் வழியாக ஃபார்வர்ட் செய்தும் சில்லறைத்தனமான ஆசையை நிறைவேற்றப்பார்ப்பார்கள். ஆனால், அவர்களுடைய அந்த நண்பர்கள் மூலமாக எளிதாக மற்ற எல்லாருடைய செல்போன்களுக்கும் இந்த வீடியோ காட்சி பரவி பிரசித்தி பெற்ற வீடியோவாக மாறி, வீடியோவில் உள்ளவர்களின் பிற்கால வாழ்க்கையையே அது கேள்விக்குறியாக மாற்றிவிடுகிற வாய்ப்புகளை இதே தொழில்நுட்ப வளர்ச்சிதான் செய்து தருகிறது.

அப்படியில்லாமல், சிலர் தாங்கள் மட்டுமே வைத்து வீடியோவை பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்திருந்தாலும் சில நேரங்களில் அசம்பாவிதம் நடந்துவிடுகிறது. திடீரென்று ஒருநாள் சொல்போன் ரிப்பேர் ஆகி சர்வீஸுக்கு போனால் அதில் இருக்கும் வீடியோவை சர்வீஸ் சென்டர்காரர்கள் சுட்டு உலகம் முழுக்க இணையதளத்தின் மூலமோ அல்லது அதே புளூ டூத் மூலமோ பரப்பிவிடும் சாத்தியங்கள் நிரம்ப இருக்கின்றன.

இப்படி பதிவு செய்யும் வீடியோவை மற்றவர்கள் பார்ப்பது மட்டும் இல்லாமல், சில மாஃபியா கும்பல்கள், குறுக்குசால் ஓட்டுபவர்களிடம் அது கிடைத்துவிட்டால் அந்தப் பதிவில் உள்ளவர்களின் கதி அதோ கதிதான். அதை வைத்தே அந்த கும்பல் அவர்களை ப்ளாக்மெயில் செய்து பணம் பறிக்கவும், தவறான வழிகளுக்கு அழைக்கவும் சந்தர்ப்பங்கள் இடம் கொடுக்கும்.

சில நேரங்களில் அந்த வீடியோ மீடியாகாரர்களின் கைகளில் கிடைத்துவிட்டால் அவ்வளவுதான்... அதில் உள்ளவரின் மானம் கப்பலேரி ஊர் சுற்றி உலகம் சுற்றி வலம் வந்து கொண்டிருக்கும்.

இதனால் சம்பந்தப்பட்டவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்பதில் எள் அளவும் சந்தேகம் இல்லை. ஆகவே, உல்லாசமாக ஈடுபடுபவர்கள் சல்லாபத்தை முடித்தோமா பாய் மடித்தோமா என்று இருப்பது நல்லது. தவறியும், 'நான் மட்டும்தானே பார்க்கப்போகிறேன். நாம் மட்டும் தானே பார்க்கப்போகிறோம்... இன்று இரவு பார்த்துவிட்டு நாளை டெலிட் செய்துவிடுகிறேன்' என்று எதிர் பாலினக்காரர் சொல்கிறார் என்று அதை நம்பி, சம்மதம் சொல்லி, வீடியோ பதிவு செய்ய அனுமதிக்காதீர்கள். அது உங்கள் வாழ்க்கையையே நிர்மூலமாக்கிவிடும்.

தேவை ஜாக்கிரதை!
தேவையா இப்படிப்பட்ட சல்லாபம்?

உங்கள் கருத்துகளை பின்னூட்டம் இடுங்கள்... இந்தப் பதிவுக்கு வாக்களித்து, சல்லாப வீடியோ பதிவர்களுக்கு எச்சரிக்கை செய்யுங்கள்.

11 February 2010

காதலை தீர்த்துக்கொள்வோம்!

Posted by Gunalan Lavanyan 11:15 PM, under | No comments

உனக்காக எதையும் செய்வேன்
என்று பொய்சொல்லப் போவதில்லை
நான் எதையெல்லாம் செய்கிறேனோ
அதையெல்லாம் உனக்காகவே செய்வேன்!

பிறைமுகம்
கயல்விழி
சங்கு கழுத்து
மேகக் கூந்தல்
மலை மார்பு
கொடியிடை
வாழை கால்கள்
தாமரை பாதம் என்று
அவளை வர்ணிக்கமாட்டேன்!
இதயத்தில் புகுந்து
எப்போதும் என்னை
இம்சித்துக்கொண்டிருக்கும்
அவள் ஒரு பிடாரிகளின் அரசி!

குடை இல்லாமல் போகும் போது
மழை வருவதைப் போல
நீ இல்லாமல் போகும்போது
அதிகமாகக் காதல் வருகிறது எனக்கு!

இதயத்தில்
பூக்கள் பூப்பதில்லை
பொழிகின்றன
காதல் மழை!

வாழையடி வாழையாக
உன்னை காதலித்துக்கொண்டிருக்கிறேன்
இந்தத் தலைமுறையிலாவது வா
காமம் செப்பி
காதலை தீர்த்துக்கொள்வோம்..!

10 February 2010

சொப்பன சுந்தரி!

Posted by Gunalan Lavanyan 9:29 PM, under | No comments

விலைமாதர்களுக்கு சமர்ப்பணம்...


வெம்பி வெதும்பி முளைத்தவைகள்
பஞ்சப் படர்நெருப்பில் பற்றி எரிய
இச்சைத் துடுப்புகளை வீசி
படகோட்டும் கோவலர்களின்
படகிலேறி பயணிக்க வேண்டியவளாய்
அடர்ந்த பேரிருட்டில்
சொப்பனமாய் மாறி
காமுகர்களின் களவிக்கு வழிவகுத்தாள்
துர்பாக்கிய சுந்தரி.

எச்சில் படாதவைகளும்
வலி அறியாதவைகளுமாக இருந்தவள்
காமத்துடுப்புப் போட்டு
வெளியேறுவதென முடிவெடுத்து
காட்டுத்தீயில் பொழுதுகளாய்
மல்லாந்திருக்கிறாள்
மறித்துப்போன பிணமென!

- சா.இலாகுபாரதி
(12.01.2005-ல் எழுதிய கவிதை)

09 February 2010

குடை பிடித்து நடக்கும் காதல்

Posted by Gunalan Lavanyan 10:32 PM, under | No comments

குடையில்
மஞ்சள் கதிர்களை சுமந்து
நடப்பவளை தொடர்கிறேன்...
நேற்றொருநாள் நிகழாத
சந்திப்பையெண்ணி
பின்திரும்பி விழிகளால்
நலம் பகர்கிறாள்...
நான் இமைகளால்
வழிமொழிகிறேன்...
நடையின் வேகம் குறைத்து
நடக்கிறாள்...
நடக்கிறோம்..!
குடை பிடித்து நடக்கிறது
காதல்!

- சா.இலாகுபாரதி

08 February 2010

ஒரு பால் புணர்ச்சி

Posted by Gunalan Lavanyan 11:13 PM, under | 3 comments

கஜுராஹோ சிற்பங்களில் ஒருபாற்புணர்ச்சியைப் பிரதிநிதிப்பது பற்றிய ஒரு தவறான புரிந்துகொள்ளல் இருப்பதை டாக்டர். தேவங்கானா தேசாய் சுட்டிக் காட்டுகிறார். கஜுராஹோ சிற்பங்களில் அவ்வாறு சித்தரிக்கப்படவில்லை. ஒருபாற்புணர்ச்சிக்குரிய உருவமென தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட இரு சிற்பங்கள் இருக்கின்றன.


1. அதிகம் பேசப்பட்ட காட்சி, அவ்வப்போது ஒருபாற்புணர்ச்சியில் ஈடுபட்டுள்ள பெண்கள் என்று தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது, அந்தத் தளத்தில் இருக்கும் விஷ்வநாதர் கோயிலின் வடக்கு சுவரில் இருக்கும் தலையைக் கவிழ்ந்திருக்கும் சிற்பம். முகப்பில் முதுகுப்புறத்தைக் காட்டும் மேலே இருக்கும் உருவம் ஒரு பெண் போல் தெரிகிறது, ஆனால் அது உண்மையிலேயே ஆண், அதனுடைய பிறப்புறுப்பைக் கீழ்ப்பாகத்திலிருந்து பார்க்க முடிகிறது. அந்த உருவம் பெண் என தவறாகப் புரிந்துகொள்வதற்கு, பின்புறத்தில் முடி கொண்டையாக கட்டப்பட்டிருந்தது தான் காரணம், மத்திய காலங்களில் இது ஆண்கள் முடிவைத்திருக்கும் பாணியாக இருந்து வந்துள்ளது.





2. அவ்வப்போது தவறாகப் புரிந்து கொள்ளப் பட்ட மற்றொரு சிற்பம் தேவி ஜகதாம்பா கோயிலின் தெற்குச் சுவரில் உள்ளது. இங்குத் தாடியுடன்கூடிய ஒரு சைவ (கபாலிகா) துறவி, ஆடையற்ற ஒரு க்ஷபானகா சந்நியாசியை, ஒரு கையால் அவருடைய உறுப்பை பிடித்துக்கொண்டு மற்றொரு கையை உயர்த்தி அடிக்கும் தொணியில், தன்னுடைய சமய நெறியில் இணையுமாறு மிரட்டிக்கொண்டு இருக்கிறார். அந்த சந்நியாசி சரண்டைவதுபோன்று கைகளைக் கூப்பி இருப்பதாகக் காட்டப்படுகிறது. இந்த உருவங்கள், நீதியுரைக்கும் உருவகக் கதை நாடகமான ப்ரபோதாசந்திரோதயாவின் இரு கதாபாத்திரங்களை பிரதிநிதிக்கின்றன, இந்த நாடகங்கள் 11-ம் நூற்றாண்டில் கஜுராஹோ பிரதேசங்களில் நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சிற்பக்கலை காட்சியில் எந்த ஒருபாற்புணர்ச்சி உறவும் சம்பந்தப்பட்டிருக்கவில்லை.

07 February 2010

இனி இலவசமாக சினிமா பார்க்கலாம்!

Posted by Gunalan Lavanyan 4:42 AM, under | No comments

உலகத் திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்களை தமிழகமெங்கும் மக்களுக்கு இலவசமாக திரையிட்டு காட்டிவரும் அமைப்பு 'நிழல்கள்'. இதன் அமைப்பாளர் திரு ப.திருநாவுக்கரசு.

இந்த அமைப்பின் மூலமாக இதுவரைக்கும் தமிழகத்தில் 400க்கும் மேற்பட்ட இடங்களில் திரையிடல்கள் நடந்திருக்கின்றன. ஆனால், 'சென்னையில் அவ்வளவாக திரையிடல்கள் நடத்த முடியவில்லை. அதற்கு இடப்பற்றாக் குறைதான் காரணம்' என்று 'டிஸ்கவரி புக்பேலஸில்' சனி (5.2.2010) அன்று நடைபெற்ற திரையிடலின்போது திருநாவுக்கரசு குறிப்பிட்டார்.

சென்னை - கே.கே.நகரில் பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை அருகில் உள்ளது டிஸ்கவரி புக்பேலஸ். திரைப்பட உதவி இயக்குநனுரும், இலக்கிய வாசகரும், சிறுகதை எழுத்தாளருமான கயிலை மு.வேடியப்பன் இந்த புத்தகக் கடையை நடத்தி வருகிறார். சற்று பெரிய இடவசதியோடு அமைந்துள்ள இந்தப் புத்தகக் கடையில்... சினிமா திரையிடல்கள், புத்தக வெளியீடுகள், நூல் அறிமுகம் மற்றும் விமர்சனக் கூட்டங்களை இலவசமாக நடத்திக்கொள்ள அவர் அனுமதி வழங்குகிறார் வேடியப்பன்.

'அந்தவகையில், இனி ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமை தோறும் நிழல்கள் அமைப்பு சார்பாக டிஸ்கவரி புக்பேலஸில் திரையிடல்கள் நடைபெறும்' என்று திருநாவுக்கரசு கூறியிருக்கிறார்.

ஒவ்வொரு படம் திரைடலுக்கு முன்பும், பின்பும் அந்த படம் குறித்த அறிமுகத்தையும் அனுபவத்தையும் பகிர்ந்துகொள்ள நிழல் அமைப்பு வாய்ப்பு ஏற்படுத்தித் தருகிறது. திரைத்துறை சார்ந்தவர்கள் மட்டுமின்றி சினிமா ஆர்வலர்களும் இந்தத் திரையிடலில் பங்கேற்று சினிமா மற்றும் அதன் தொழில்நுட்பங்கள், திரைப்பட உருவாக்கம் தொடர்பான சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பி தங்களை தெளிவுபடுத்திக்கொள்ளலாம். இது வளர்ந்துவரும் இளைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு.

அடுத்தமாதம் மாதம் முதல் இந்தத் திரையிடலில் திரைப்பட முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்கேற்க இருக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல்.

முதல் சனிக்கிழமை

நேற்று நடைபெற்ற பிப்ரவரி மாதத்துக்கான திரையிடலின்போது... தேசிய விருது மற்றும் பல்வேறு மாநில அரசு விருதுகளைப் பெற்ற 'கர்ண மோட்சம்' குறும்படமும், எழுத்தாளர் அழகிய பெரியவன் எழுதிய 'குறடு' சிறுகதையை வைத்து எடுக்கப்பட்ட 'நடந்த கதை' குறும்படமும் திரையிடப்பட்டன. (நடந்த கதை இதுவரைக்கும் ஐந்து அமைப்புகளிலிருந்து விருது பெற்றுள்ளது.) மேலும் சில உலகப் படங்களும் திரையிடப்பட்டன. விழாவில் முதல் இரண்டு படங்களின் இயக்குநர்கள் முறையே முரளி மனோகர் மற்றும் பொன்.சுதா பங்கேற்று படம் எடுக்கும்போது ஏற்பட்ட தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.

கர்ண மோட்சம்

அழிந்து வரும் தெருக்கூத்துக் கலையைப் பற்றிய படம். மிக மெல்லிய குரலில் அழுத்தமாக பதிவு செய்யப்பட்ட கதை. அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய படம். விமர்சனுக்கு உட்படுத்தக் கூடாத படம். இயக்குநனை அப்ரிஷியேட் செய்ய வேண்டும். கமர்ஷியல் சினிமாவுக்கு போனாலும் இது போன்ற மக்கள் படங்களையே எடுக்கவேண்டும் என்று முரளி மனோகருக்கு கோரிக்கை வைக்கிறேன்.

நடந்த கதை

அழகிய பெரியவன் கதை. கதை சொல்லியாக பின்னணி குரல் கொடுத்திருக்கிறார் அறிவுமதி. எங்கள் ஊர் (பேரணாம்பட்டு) சுற்றி கதை பின்னலோடு எடுக்கப்பட்ட படம். மட்டுமின்றி தலித் மக்கள் படும் வேதனையை ஆதிக்க சாதியினர் செய்யும் கொடுமையை தோலுரித்து காட்டக்கூடிய படம். ஆதிக்க சாதியினர் பார்க்கவேண்டிய படம். தலித் நண்பர்கள் இந்தப் படத்தை பார்க்காமல் இருந்தால் பார்த்துவிடுங்கள். சமூகத்தில் உள்ள அவலங்களை எதிர்த்து போராட ஊக்கமளிக்கும் கதை.

06 February 2010

காதல் தூது போன எம்.ஆர்.ராதா

Posted by Gunalan Lavanyan 12:08 AM, under | No comments

‘காதல்ல எல்லாம் குயில் விடு தூது, கிளி விடு தூதுன்னுவாங்க. இந்த ஜீவா, என்னைப் பிடிச்சாரு பாரு. அப்ப எவ்வளவு முரட்டுக் காதல் பாருங்க.’
- எம்.ஆர்.ராதா

அவசரநிலைப் பிரகடனப்படுத்தப்பட்டு, கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்த காலத்தில், கட்சி ஊழியர்கள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். அப்போது, ஜீவாவுக்கு நடிகவேள் எம்.ஆர்.ராதாதான் அடைக்கலம் கொடுத்து, அவரைப் பாதுகாத்து வந்தார். அந்தநாட்களில் ஜீவா, ராதாவிடம் தொடர்ந்து கடிதங்களைக் கொடுத்து, அதைக் கொண்டுபோய் ஒரு பெண்ணிடம் கொடுத்துவிட்டு, அதேபோல் அந்தப் பெண் கொடுக்கும் கடிதங்களையும் கொண்டுவந்து தன்னிடம் கொடுக்கும்படி கேட்டுக்கொள்வது வழக்கம். ராதாவும் எந்தத் தயக்கமும் இன்றி இருவருக்கும் இடையே கடிதப் பரிமாற்றம் செய்துவந்தார். இந்தக் கடிதப் போக்குவரத்து ஏதோ புரட்சிக்கு வித்திடப் போகிறது என்று நினைத்திருந்த ராதா, அது குறித்து ஜீவாவிடம் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. ஆனால், தொடர்ந்து கேள்விகேட்காமல் அவரால் இருக்கவும் முடியவில்லை.
ஒருநாள் ஜீவாவைப் பார்த்து, ‘‘புரட்சி எப்போது வெடிக்கும்’’ என்று ராதா கேட்க, அதற்கு ஜீவா ‘‘பொறுத்திருந்து பார்’’ என்று பதில் சொல்ல, ராதாவும் ‘ஏதோ கட்சி ரகசியமாக இருக்கும்போல் இருக்கிறது; அதனால்தான் அண்ணன் நம்மிடம் சொல்லத் தயங்குகிறார்’ என்று தனக்குத்தானே நினைத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
பின்னர் கம்யூனிஸ்ட் கட்சி மீதிருந்த தடை நீங்குகிறது. இப்போது ராதா, ஜீவாவிடம் அந்தச் சம்பவத்தை நினைவுபடுத்தி, ‘‘அந்தக் கடிதங்களினால், புரட்சி வெடித்ததா?’’ என்று கேட்கிறார்.
அதற்கு ஜீவா, ‘‘ஆம் ஏற்பட்டது’’ என்று பதில் சொல்கிறார். ராதாவின் வியப்பு கலைவதற்குள்... ‘‘ஆனால், நீங்கள் நினைப்பது போல் அவை கட்சி சம்பந்தப்பட்ட கடிதங்களல்ல... அனைத்தும் காதல் கடிதங்கள். அதனால், எனக்கும் பத்மாவதி என்ற அந்தப் பெண்ணுக்கும் ‘காதல் புரட்சி’ ஏற்பட்டது’’ என்று ஜீவா சொல்ல, அப்போது ராதா, சந்தோஷக் கிளர்ச்சியால் தன் ஆரவாரமிக்க சிரிப்பால் பொங்கிவழிந்திருக்கிறார்.

04 February 2010

மார்க்ஸின் உன்னதமான காதல் வார்த்தைகள்!

Posted by Gunalan Lavanyan 12:12 AM, under | No comments



காணச்சகியாத தோற்றம், கண்கள் மட்டுமின்றி கேசம், தோலின் நிறம் எல்லாமே கறுப்பு. ஜெர்மானியர்கள் வெறுப்புடன் நோக்கும் யூத இனத்தைச் சேர்ந்தவர் காரல் மார்க்ஸ். ஜென்னியோ ரைன்லாந்தின் மிகச்சிறந்த அழகி. பிரபுக்கள் வம்சத்தைச் சேர்ந்த ஜெர்மானியப் பெண்.

ஷேக்ஸ்பியரின் ரசிகரான மார்க்ஸ், உறக்கத்தில் கேட்டாலும் உரக்கச் சொல்லும் அளவுக்கு ஷேக்ஸ்பியர் கவிதைகள் மீது தீராத காதல் கொண்டவர். ஜென்னியின் தந்தை லுட்விக்கும் மார்க்ஸும் ஷேக்ஸ்பியரின் கவிதைகளை உரக்கப்பாடி வியந்து போற்றுவார்கள். 

ஜென்னியின் வீடே கவிதைகளால் நிரம்பி வழியும். தன்னையும் மீறி மார்க்ஸினுள் இருந்த கவிதாவேசம் பீறிட்டுப் பொங்கும். இதுவே ஜென்னி, மார்க்ஸின் மீது காதல் வயப்பட்டதற்கு காரணமாக அமைந்தது.

அகங்காரமற்ற அறிவும் தன்னலமற்ற தியாகமும் பெண்களை மதிக்கும் சுபாவமே மார்க்ஸிடமிருந்து ஜென்னி ரசித்த ஆணின் அழகு! மார்க்ஸோ, 'உலகின் மிகச்சிறந்த பூ ஒன்று இருக்குமானால் அதுகூட தோற்றுப்போகும் அவளிடம்' என்று ஜென்னியை ரசித்தார்.

வெட்கப்படும் தேவதைகள்!

Posted by Gunalan Lavanyan 12:12 AM, under | No comments

காதல் கொண்டாட்டம்
சா.இலாகுபாரதியின் கவிதை - 4





வானத்திலிருந்து இறங்கி
முதன்முறையாக பூமிக்கு வந்த தேவதைகள்
நகர்வலம் வரத்தொடங்கியிருந்தனர்...

அது ஒரு இலையுதிர்க்காலம்.
தெருக்களின் இருமறுங்கிலும்
ஆடைகளைக் களைந்து
நின்றுகொண்டிருந்தன மரங்கள்.

தேவதைகள் வருவதை அறிந்து
நாணத்தால் இளம் பச்சை நிற ஆடைகளை
பூணத் தொடங்கியிருந்தன சில மரங்கள்.

வெட்கத்தை இழந்த மரங்கள்
‘நிர்வாணம்தான் யாராலும் பறிக்கமுடியாத
ஆடை’ என்று தத்துவம் பேசின.

நிர்வாணம் பார்த்து கண்கள் பூத்துவிட்ட
தேவதைகளுக்கு வெட்கத்தைப் பார்க்க
புதிதாக இருந்தது.

வெட்கம் குறித்து
யோசிக்கத் தொடங்கிய தருணத்தில்
ஆடை தறித்த மரங்கள்
பூக்கத் தொடங்கியிருந்தன.
தேவதைகள் வெட்கப்படத் தொடங்கியிருந்தனர்.

சிற்றின்பக் கலையின் உச்சநிலை

Posted by Gunalan Lavanyan 12:11 AM, under | 1 comment

கஜுராஹோ சிற்பங்கள் பற்றி ஜேம்ஸ் மெக்கொன்னாச்சி தன்னுடைய காமசூத்திர  வரலாற்று புத்தகத்தில் கஜுராஹோ சிற்பங்களின் கவர்ச்சி கரமான ‘சிற்றின்பக் கலையின் உச்சநிலை’ என விவரிக்கிறார்: ‘வளைந்த, அகன்ற இடுப்பும் பெருத்த மார்புகளையும் கொண்ட கவர்ச்சிகரமான மங்கைகள் தங்கள் தாராளமான உடலமைப்பு மற்றும் அணிகலன்பூட்டிய உடல்களை நேர்த்தியாக செய்யப்பட்ட வெளிப்புற சுவர் முகப்புகளில் காட்சிப்படுத்துகிறார்கள். இந்தச் சதைப்பிடிப்பான அப்ஸரஸ்கள் கற்களின் மேற்பரப்பெங்கும் ஆரவாரமாக, மூகப்பூச்சு செய்கிறார்கள், முடிகளை உலர்த்துகிறார்கள், விளையாடுகிறார்கள், நடனமாடுகிறார்கள், மற்றும் ஓய்வில்லாமல் தங்கள் அரைக்கச்சைகளை பின்னுவதும் அவிழ்ப்பதுமாக இருக்கிறார்கள்... தேவலோக கவர்ச்சி மங்கைகள் தவிர, நெருக்கமான முறைவரிசையிலான கிரிஃப்பின்கள், பாதுகாவல் தெய்வங்கள் மற்றும் மிகவும் பழியார்ந்த, வரம்புமீறி பின்னிப்பிணைந்த மைதுனாக்கள் , அல்லது காதல்புரியும் இணைகள் இருக்கின்றன.’ என்று கூறுக்கிறார்.

03 February 2010

Goa stills

Posted by Gunalan Lavanyan 8:32 AM, under | No comments


















என்.எஸ்.கிருஷ்ணன் செய்த வேடிக்கை காதால்

Posted by Gunalan Lavanyan 12:32 AM, under | No comments

சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன். பம்பாய் மெயில் புறப்படுவதற்குச் சில விநாடிகளே இருந்தன. புனாவில் நடைபெறவிருக்கும் ‘வசந்தசேனா’ படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் ஒரு கோஷ்டி அந்த வண்டிக்குள் இருந்தது. கடைசி நேரத்தில் அந்த கோஷ்டியை அழைத்துச்செல்லும் இரு மானேஜர்கள் இடையே தகராறு. அது முடிவதற்குள் வண்டி புறப்பட்டுவிட் டது!

வண்டி சில மைல்கள் கடந்த பிறகுதான் தங்களை அழைத்துச் செல்லும் மானேஜர்கள் வண்டியில் ஏறவில்லை என்பது வண்டிக்குள்ளிலிருந்த சினிமா நடிக கோஷ்டிக்குத் தெரியவந்தது. அவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.  திருதிருவென்று விழித்தார்கள். அவர்களுக்கு நடுவே அப்படி விழிக்காத ஒரு நடிகரும் இருந்தார்.

அவர் மற்றவர்களைப் போல ஓடிக்கொண்டிருந்த ரயில் பெட்டிக்குள் தவிக்காமல் மற்றவர்களுக்குத் தைரியம் சொன்னார்:  ‘‘இப்ப என்ன ஆச்சு? ரயில் ஓடிக்கிட்டு இருக்கு. நாம் வண்டிக்குள்ளே பத்திரமாகத்தானே இருக்கோம்?’’ என்றார். ரயில் ஓடிக்கொண்டிருந்தது.

அதே பெட்டியில் ஒரு பெண்மணியும் இருந்தாள். அவரின் கலங்காத உள்ளத்தையும், வேடிக்கைப் பேச்சையும் சிறு புன்முறுவலோடு ரசித்துக் கொண்டிருந்தாள். அவளும் அந்த நடிக கோஷ்டியோடு நடிக்க வந்தவள்தான். அந்த மனிதர் எல்லாருக்கும் தைரியம் சொன்னாலும், அவளுக்கு உள்ளம் திக்கென்றது.தன் பதற்றத்தை அவ்வளவாக அந்தப் பெண்மணி  வெளிப்படையாகக் காட்டிக்கொள்ள வில்லை. ரயில் ஓடிக்கொண்டிருந்தது.

அவர் ஒவ்வொருவரிடமும் எவ்வளவு பணம் இருக்கிறது என்று கேட்டார். அவர்களிடம் தேவையான பணம் கிடைக்கவில்லை. அதே கேள்வியை அந்தப் பெண்மணியிடமும் கேட்டார், ‘‘புனாவுக்குப் போனதும் சினிமாக்  கம்பெனிக்காரரிடமிருந்து வாங்கிக் கொடுத்துவிடுகிறேன். உன்னிடம் எவ்வளவு பணம் இருந்தாலும் கொடுத்து உதவு!’’ என்று மீண்டும் அவர் கேட்டார்.

அந்தப் பெண்மணி தன்னிடமிருந்த தொண்ணூறு ரூபாயை எடுத்துக் அவரிடம் கொடுத்தாள். ரயிலில் சாப்பாட்டுச் செலவுக்கு அந்தப் பணம் மிக உதவியாக இருந்தது. புனா வந்ததும். தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட பங்களா இருந்த முகவரியை விசாரித்துக்கொண்டு நடிக கோஷ்டி அங்கு போய்ச் சேர்ந்தது. அங்கு போனதும் மீண்டும் உணவுப் பிரச்னை. சமைத்துச் சாப்பிட பாத்திரங்கள் இருந்தன. உணவுப் பண்டங்கள் இல்லை. அவற்றை வாங்கப் பணம் இல்லை. கம்பெனி மானேஜர்கள் எப்பொழுது வந்து சேருவர்களோ? அதுவரை வயிறுகளை வாடப்போட முடியுமா? தவித்தார்கள். அந்த மனிதர் மட்டும் தவிக்கவில்லை!

மறுபடியும் அதே பெண்மணியிடம் சென்றார். குழைந்தார். ‘‘இங்கு வந்தது முதல் இன்னும் யாரும் எதுவும் சாப்பிடவில்லை. ஏன், நீகூடத்தான் சாப்பிடாமல் இருந்துவருகிறாய்! உன் கையிலுள்ள பணத்தையெல்லாம் கொடுத்தும் உதவினாய்.  அதற்கு மற்றவர்கள் சார்பாக நன்றி. மீண்டும் உன் உதவி தேவையாக இருக்கிறது. உன்னிடமுள்ள நகைகளைக் கொடுத்து உதவ முடியுமா?’’ என்று பக்குவமாகப் பேசினார்.

அதுவரை பேசாதிருந்த பெண்மணி... ‘‘போனால் போகட்டுமென்று கையிலிருந்த பணத்தையெல்லாம் கொடுத்தேன்.  இப்போது நகைகளையும் கேட்கத் துணிந்துவிட்டீர்களே! அவற்றைக் கேட்க எப்படித்தான் உங்களுக்குத் துணிச்சல் வந்ததோ?’’ என்று அவள் அவரைக் கேட்கவில்லை; சீறினாள்.

அவர் அமைதியோடு பேசத் தொடங்கினார்: ‘‘உன்னிடந்தான் எதையும் கேட்கத் தோன்றுகிறது!’’ அப்படி அவர் சொன்னதும், அந்தப் பெண்மணியின் உள்ளம் குறிர்ந்துவிட்டது. உடனே தன் நகைகளை கழற்றி அவரிடம் கொடுத்தாள். அவர் ஒரு தடவை முகமலர்ச்சியோடு நன்றி கூறிவிட்டு நகைகளோடு போனார். சில நிமிடங்களில் நகைகள் அடமானம் வைத்து உணவுப் பொருள்களை வாங்கி வந்தார்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு கம்பெனி மானேஜர்கள் வந்து சேர்ந்தார்கள். அவர்கள் வந்ததும் அவர், ‘‘நல்ல வேளை, இன்றாவது வந்து சேர்ந்தீர்களே! இன்னும் வரவில்லை என்றால் அந்த மகராசியைத்தான் மிச்சம் மீதியிருக்கும் நகையைப் பிச்சை போடும்படி வேண்டும்கதி ஆகியிருக்கும்!’’ என்றார். மானேஜர்கள் ஒருவிதமான அசட்டுப் பார்வையோடு பேசாமலிருந்தார்கள். ஏற்கெனவே தாம் பொறுப்பேற்றபடி அவர்களிடமிருந்து பணம் வாங்கி நகைகளை மீட்டு, ரொக்கம் தொண்ணூறு ரூபாயையும் சேர்த்து, அந்தப் பெண்மணியிடம் கொடுத்தார்.

அவரது நேர்மையை உள்ளூரப் பாராட்டிக்கொண்டே அவற்றை பெற்றுக்கொண்ட பெண்மணி யார் என்று நினைக்கிறீர்கள் சாட்சாத் டி.ஏ.மதுரம்தான். அந்த மனிதர் சகலகலா வல்லவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனேதான்!
அதற்குப் பிறகு படப்பிடிப்புக்கு நடுவில் கிருஷ்ணனும் மதுரமும் பல தடவை சந்தித்துக் கொண்டார்கள். ஒருவரை ஒருவர் விரும்பினார்கள் என்று சொல்லும்படி அந்தச் சந்திப்புகள் இருந்தன. கிருஷ்ணனுக்கு மதுரத்தின் கலை உள்ளம் மிகப் பிடித்திருந்தது. நகைச்சுவையை நன்றாக மனத்திலே வாங்கிக்கொள்ளும் ஆற்றலும், வசனங்களை வெடுக்கென்று விழு ங்காமல் பேசும் திறமையும் மதுரத்துக்கு இருந்து வருவதைக் கிருஷ்ணன் கண்டார்.
கிருஷ்ணனிடம் குவிந்து கிடக்கும் வேடிக்கைப் பேச்சுக்களையும் அவற்றில் கலந்து காணப்பெறும் கருத்துள்ள நகைச்சுவையையும் கண்டுவிட்டுத் தம் மனத்தைப் பறிகொடுத்தார் மதுரம்.

இருவரும் ஒருவரையொருவர் விரும்புகிறார்கள் என்பதை டைரக்டர் ராஜா சாண்டோ புரிந்துகொண்டார். ஒருநாள் கிருஷ்ணனை அழைத்தார். அவரது அழைப்பில் ஒருவித அதட்டல் மேலோங்கி நின்றது. அதற்காக கிருஷ்ணன் அஞ்சி விடவில்லை. ‘‘என்னை அழைத்தீர்களாமே?’’ என்று கேட்டுக்கொண்டே டைரக்டருக்கு அருகில் கேள்விக் குறிபோல் போய் நின்றார்.

டைரக்டர் ராஜா சாண்டோ வழக்கம்போல், ‘‘டேய் கிருஷ்ணா’’ என்று அழைத்துவிட்டுச் சொன்னார்... ‘‘எனக்குத் தெரியாது என்றா நினைக்கிறாய்...? தெரியும்! தெரியும்! சில நாட்களாகக் கண்காணித்துக்கொண்டுதான் வருகிறேன்.  கடைசிவரை கைவிடமாட்டேன் என்று என்னிடம் உறுதிமொழி சொல்லு. உனக்கு இந்த நிமிடம் முதல் மதுரம் சொந்தம்!’’
கிருஷ்ணன் அந்த உறுதிமொழியை அளித்தார். அன்று அதே டைரக்டரின் முன்னிலையில் அவரது ஆசியோடு கிருஷ்ணனும் மதரமும் காதல் மணம் செய்துகொண்டனர். பொதுவாகப் படப்பிடிப்புகளில் காதலன் காதலிக்குத் திருமணம் நடப்பதுண்டு. அது சினிமா கல்யாணம். ஆனால், புனாவில் படத்துக்காக நடிக்கவந்த இடத்தில் கிருஷ்ணன் - மதுரத்துக்கு உண்மையாகவே திருமணம் நடந்துவிட்டது. அதை மனப்பூர்வமாகச் செய்துவைத்த டைரக்டர் ராஜாசாண்டோ திருமணம் முடிவடைந்ததும் ‘கட்’ என்று டைரக்டர் பாஷையில் சொல்லவில்லை!

உடலுறவுக் கலை

Posted by Gunalan Lavanyan 12:21 AM, under | 2 comments





கஜுராஹோ: ஒட்டுமொத்தப் பகுதியும் எட்டு வாயில்களைக் கொண்ட மதில் சுவறினால் சூழப்பட்டு, ஒவ்வொரு வாயிலும் இரு தங்க பேரீச்ச மரங்களினால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. முதலில் அங்கு 80 இந்து கோயில்களுக்குமேல் இருந்தன. ஆனால், தற்போது 25 கோயில்கள் மட்டுமே பாதுகாக்கப்படும் நிலையில் உள்ளன. இவை சுமார் 20 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்திருக்கின்றன. இந்தக் கோயில்களில் உள்ள சிற்பங்கள் உடலுறவுக் கலையை விரிவாக விளக்கிச் சித்தரிக்கும் வகையி்ல் அமைந்துள்ளதால் இவை பெரும்  புகழ் பெற்றிருக்கின்றன. இந்தக் கோயில்கள் இந்திய கட்டடக் கலைக்கு மிகவும் புகழ் சேர்க்கும் அளவில் திகழ்கின்றன. கஜுராஹோ கிராமத்தில் வசிக்கும் உள்ளூர்வாசிகள் அவற்றின் சிறப்பினை அறிந்து தங்களால் முடிந்த அளவுக்கு அந்தக் கோயில்களை பராமரித்து வருகின்றனர்.

அவள் ஒளிந்துகொண்டிருக்கும் இதயம்!

Posted by Gunalan Lavanyan 12:16 AM, under | No comments

காதல் கொண்டாட்டம்
சா.இலாகுபாரதி கவிதை – 3

எப்போதும்
நாந்தான் சொல்லவேண்டும்
என்று நினைக்கிறாய்…

ஒரு முறையாவது
நீ சொல்வாய் என்று
உன் இதயத்தின் வாசல் வரை
வந்து பார்க்கிறேன்…

நீயோ ஒளிந்துகொண்டு
கண்ணாமூச்சி ஆடுகிறாய்…

நான் எப்படி சொல்வேன்
‘நீ ஒளிந்துகொண்டு இருப்பது
என் இதயம்தான்’ என்று...

வெட்கத்தில் கண்களைப்
பொத்திக்கொள்ள மாட்டாயா..!

கோப்பு

கோப்பு