09 November 2023

இன்னும் ஓயவில்லை சுனாமி நினைவலைகள்

Posted by Gunalan Lavanyan 8:27 PM, under | No comments


21ஆம் நூற்றாண்டின் மிக மோசமான பேரழிவு என்று வர்ணிக்கப்படும் சுனாமி ஏற்பட்டு 19 ஆண்டுகள் ஆகின்றன. அதன் வடுக்கள் இன்னும் ஆறவில்லை. கடற்கரையோர கிராமங்களில் மீனவ மக்கள் பட்ட துயரம் இன்னும் காயவில்லை. அரசு செய்த சீர்த்திருத்த நடவடிக்கைகள் பெரிய அளவில் இருந்தாலும் அது போதவில்லை என்று குற்றச்சாட்டு உள்ளது. சுனாமி குடியிருப்புகள் சிதிலம் அடைந்து போயிருப்பது இன்னும் வேதனையை மீனவர்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது.

 

2004 டிசம்பர் 26 அன்று இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் கடல்பகுதியில் அதிகாலையில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 9.1 முதல் 9.3 வரை பதிவான நிலநடுக்கத்தால் சுமார் 100 அடி உயரத்துக்கு அலைகள் எழுந்தன. இந்த சுனாமியால் 14 நாடுகளுக்கு மேல் பாதிக்கப்பட்டன. 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு மேல் காயமடைந்தனர். 44 ஆயிரம் பேர் காணாமல் போயினர். 17 லட்சத்துக்கும் அதிகமானோர் வாழ்விடத்தை இழந்து புலம்பெயர்ந்தனர்.

 

அதிகம் பாதிக்கப்பட்ட நாடான இந்தோனேசியாவில் மட்டும் 1 லட்சத்து 67 ஆயிரம் பேர்  உயிரிழந்தனர். 37 ஆயிரம் பேர் காணாமல் போயினர். தாய்லாந்து, சோமாலியா, மியான்மர் போன்ற நாடுகளில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இலங்கையில் 35 ஆயிரம் பேர் இறந்தனர்.

 

தமிழ்நாட்டில் சுனாமியால் அதிகம் பாதிக்கப்பட்டது நாகப்பட்டினம், சென்னைதான். சென்னையில் அன்றைய ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கடற்கரையில் நடைப்பயிற்சிக்குச் சென்றவர்கள், தூங்கிக் கொண்டிருந்த மீனவர்கள், கடற்கரையில் கடை வைத்திருந்தவர்கள் என்று நூற்றுக்கணக்கானோரை ஆழிப்பேரலை அள்ளிச்சென்றது.

 

கன்னியாகுமரி, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, கடலூர், பாண்டிச்சேரி என்று, சென்னை முதல் குமரி வரை கடலோரத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் சூறையாடியது சுனாமி. இதன் தாக்கத்தால் தமிழ்நாட்டில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். நாகப்பட்டினத்தில் மட்டும் 6 ஆயிரம் பேர் மாண்டனர். 

 

பல்வேறு மீனவர்கள் சுனாமியில் சிக்கி உயிரிழந்ததால் அவர்களையே நம்பியிருந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இன்றுவரை அந்தத் துயரத்திலிருந்து மீண்டுவரமுடியாமல் தவித்து வருகின்றன.

 

தமிழகத்தில் ஏற்பட்ட சுனாமி பாதிப்பின் நினைவாக கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் சுனாமி நினைவுப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. வருடந்தோறும் சுனாமி நினைவு நாளில் கடலுக்குள் பாலை ஊற்றியும், பூக்களைத் தூவியும் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மீனவர்கள் இன்று ஒருநாள் கடலுக்கு செல்லாமல் நினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 

சுனாமிக்குப் பிறகு தமிழ்நாட்டில் உலக வங்கி மற்றும் ஆசிய வங்கி உதவியுடன் 4500 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 13 கடலோர மாவட்டங்களில் உட்கட்டமைப்பு வசதிகள், மறுசீரமைப்பு பணிகளை அரசு மேற்கொண்டது. 

சுனாமி மறுவாழ்வுக்காக கட்டப்பட்ட குடியிருப்புகள் போதிய வசதியின்றி இருப்பதாகக் கூறி மீனவர்கள் அங்கு குடியேறாத நிலை இன்றும் தொடர்கிறது.

 

சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவ மக்களுக்கு வழங்கப்பட்ட குடியிருப்புகள்நிலங்கள் அவர்களின் பெயரில் இன்னும் பிரித்துக்கொடுக்கப்படவில்லை என்பது குற்றச்சாட்டாக உள்ளதுசுனாமி குடியிருப்பில் இருந்து வெளியே வருவதற்கு பாலம்சாலை வசதிகள் போதிய வகையில் அமைத்து கொடுக்கப்படவில்லை என்பது வேதனையாக இருப்பதாக மீனவர்கள் தெரிவிக்கிறார்கள்.

 

இதுமட்டுமின்றி சுனாமியால் உயிரிழந்தகாணாமல்போன பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு இதுவரை முழுமையான நிவாரணம் அளிக்கப்படவில்லை என்பது புகாராக உள்ளதுபிள்ளைகளை இழந்த பெற்றோர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் போல் இருப்பதால் அவர்களுக்கு போதிய மருத்துவ உதவிகளை செய்து பாதுகாக்கவேண்டும் என்ற கோரிக்கையும் மீனவர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

 

இதுதொடர்பாக மீனவர் சங்க பிரதிநிதி நாஞ்சில் ரவியை தொடர்புகொண்டு பேசினோம்சுனாமியால் பெற்றோரை இழந்த பிள்ளைகளின் கல்விச் செலவை முழுமையாக ஏற்றுக்கொள்வதாக அரசு கூறியது என்ன ஆனது என்று நாஞ்சில் ரவி கேள்வி எழுப்புகிறார்சுனாமியால் காணாமல்போனசிதிலமடைந்த மீன்பிடி படகுகளுக்கு பதிலாக, புதிய படகுகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி காணாமல் போய்விட்டதாக குற்றச்சாட்டை அவர் முன்வைக்கிறார்.

 

மீண்டும் சுனாமி வந்தால், அதிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கும் பாதுகாத்துக் கொள்வதற்கும் மீனவர்களுக்கு என்ன தொடர் பயிற்சி வழங்கப்பட்டு இருக்கிறது என்ற கேள்வியையும் நாஞ்சில் ரவி எழுப்பியிருக்கிறார்.

 

கடற்கரை ஓரங்களில் அலையாத்திக் காடுகள் உருவாக்குவதுகடற்பகுதியில் செயற்கை பவளப்பாறைகள் அமைப்பது போன்ற நடவடிக்கைகள் என்ன ஆனது என்றும் தெரியவில்லை என்று வேதனையுடன் கூறுகிறார் மீனவர்களின் பிரதிநிதி நாஞ்சில் ரவி.

 

மறுசீரமைப்புமறுகட்டமைப்பு பணிகளுக்காக உலக வங்கிஆசிய வங்கிகள் வழங்கிய நிதி என்னென்ன பணிகளுக்காக செலவிடப்பட்டு  இருக்கிறது என்று அரசு வெள்ளை அறிக்கைவெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

 

மீனவர்களுக்கான குடியிருப்புகள் 300 மீட்டருக்குள் கட்டிக் கொடுக்கப்படும் என்று கூறிவிட்டு பலகிலோ மீட்டருக்கு அப்பால் கட்டி கொடுக்கப்பட்டு இருப்பதாகவும்கட்டப்பட்ட வீடுகளும் சிதிலமடைந்து குடியிருக்கவே தகுதியற்ற வீடுகளாக மாறியிருப்பதாக நாஞ்சில் ரவி கூறுகிறார்.

 

சுனாமி வந்து 20 ஆண்டுகள் ஆகவுள்ள நிலையில் இன்னமும் மறுசீரமைப்புபாதுகாப்புதற்காப்புப்பயிற்சிகள் கூட போதிய அளவில் வழங்கப்படாமல் இருப்பது மீனவர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியிருக்கிறதுமீண்டும் ஒரு சுனாமி வந்தால் என்ன ஆகுமோ என்ற கேள்வியும் அவர்களை வாட்டி வதைக்கிறது.


04 May 2011

மூன்று தலைமுறை காதல்!

Posted by Gunalan Lavanyan 12:30 AM, under | No comments

அன்று கண்ணோடு கண் பார்த்து காதல் வளர்த்தவர்கள், இன்று எஸ்.எம்.எஸ் மூலம் காதல் வளர்க்கிறார்கள். இப்படி காதலின் வெளிப்பாடு மாறினாலும், தலைமுறைகள் தாண்டியும் மாறாமல் இருப்பது காதல் மட்டுமே. அப்படிப்பட்ட மூன்று தலைமுறைக் காதலர்களின் காதல் வாழ்க்கை.

மதம் கடந்த காதல்

இவங்க ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி கல்யாணம் முடிச்சவங்க. 2002-ல் காதலிக்க ஆரம்பிச்சபோது, ரெண்டு வீட்ல இருந்தும் நிறைய எதிர்ப்பு. வீணா - பாஷாங்கிற பேரைப் பார்த்தாலே தெரியலையா... இந்து, முஸ்லீம் காதல்னு. ரெண்டு பேரும் ஒண்ணா வேலை பார்க்கும்போதுதான் இவங்களுக்குள்ளே காதல் முளைச்சது. காதல் வளர வளர ரெண்டு வீட்டுக்கும் தெரிஞ்சு எதிர்க்க ஆரம்பிச்சாங்க.


ஒரு முஸ்லிம் தன்னுடைய மதச் சட்டப்படி வேற மதத்தைச் சேர்ந்தவங்களை கல்யாணம் பண்ணக் கூடாது. அப்படியே பண்ணாலும், அவங்களை முஸ்லிமா மதம் மாத்திதான் கல்யாணம் பண்ணமுடியும். இந்த விஷயத்தை பாஷா சொன்னபோது, வீணா முகத்தைப் பார்க்கணுமே அதிர்ச்சி, ஆச்சரியம் ரெண்டுமே இல்லாமல் தெளிவா இருந்தது.

‘என்ன அமைதியா இருக்கே’ன்னு பாஷா கேட்டதுக்கு, ‘இது எனக்கு ஏற்கனவே தெரியும்’னு வீணா சொன்னது பாஷாவுக்குதான் ஆச்சரியமா இருந்தது.

‘அப்ப நீ மதம் மாற தயாரா இருக்கியா... மதம் மாறினா பர்தா போடணும்... தினமும் அஞ்சு வேளை தொழுகை நடத்தணும்... இதுக்கெல்லாம் உனக்கு சம்மதமா...’

‘நீதான்னு ஆனபிறகு, இஸ்லாம், பர்தா, தொழுகை எல்லாம் எனக்கு பிடிக்காம இருக்குமா?’ - வீணா பளிச்சுன்னு பதில் சொன்னதும் பாஷா மனசுல பட்டாம்பூச்சிகள் பறந்தன.

பாஷாவும் வீணாவும் ரொம்பவே புரிஞ்சிக்கிட்டாங்க. ஆனா, ரெண்டு வீட்டுலயும் இவங்களை புரிஞ்சுக்கலை. எதிர்த்துட்டுதான் இருந்தாங்க.

‘வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே... நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்... நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருகிறேன்’னு பைபிள்ல சொல்றமாதிரி, மெரீனா பீச் இவங்களைப் பார்த்து சொல்லுச்சு. ஆமாம், துவண்டுபோற நேரத்துல எல்லாம், கடல் காத்தும் அந்த அலைகளும்தான் இவங்களுக்கு ஆறுதல் சொல்லியிருக்கு.

‘எப்படி கடல் ஓயாமே அலையடிச்சுட்டு இருக்கோ, அப்படிதான் நம்ம காதலும் ஓயாம இருக்கணும்’னு கண்ணியமா காதல் சபதம் ஏற்றது நம்ம காதல் ஜோடி. இடைவிடாத முயற்சியில 2009-ல் திருமணமும் நடந்தது. இப்ப வீணா, தன் பெயரை ‘தபஸம்’னு கெஸட்லேயும் மாத்திக்கிட்டாங்க. பாஷாவுக்கும் தபஸமுக்கும் அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கு. பெயர் ரேஹான் உசேன். மதத்தைக் கடந்த காதலுக்கு கிடைச்ச பரிசு அந்தக் குழந்தையின் சிரிப்பு!

எதிர்பில் வளர்ந்த காதல்

கோயமுத்தூர்ல, ஒரு கல்யாண வைபவத்துல காதல் வைபவம் தொடங்கிய ஜோடி இவங்க. அது 1993. பொன்.சுதா - சினிமா அஸிஸ்டன்ட் டைரக்டர். சென்னையில வாசம். உமா - கல்லூரி மாணவி. கோவை பொண்ணு. இவங்க அறிமுகம் ஆனது, காதல் துளிர்விட்டது எல்லாமே இந்த கல்யாணத்துல தாங்க. மாப்பிள்ளை தோழனா பொன்.சுதாவும், மணப்பெண் தோழியா உமாவும் இருக்கவேண்டியதாப் போச்சு. இந்த தோழன் - தோழி உறவுதான், இவங்களுக்கு உள்ளே ரசாயன மாற்றத்தை உண்டுபண்ணுச்சு.



இந்த மாற்றம் ஒருத்தருக்கு ஒருத்தர் தெரியாது. ஆனா, ரெண்டு பேருக்கும் நிகழ்ந்துருச்சு. இருந்தாலும் பொன்.சுதாவுக்கு கொஞ்சம் தயக்கம். ‘பார்த்ததுமே காதலா... இதைச் சொன்னா, அந்தப் பொண்ணு நம்மளை என்ன நினைக்கும்’னு சங்கடத்தோடு நெளிஞ்சாரு மனுஷன்.

‘சொல்லாமல் போகிற காதல் பலிக்காது’னு அனுபவஸ்தர்கள் சொல்வாங்க. இதை உமா புரிஞ்சுக்கிட்டாங்க. ஒரு கைக்கடிகாரத்தை வாங்கிட்டு, பொன். சுதாவை பார்க்கப் போனாங்க. உமா, தன் காதலை சொன்னதும், மனுஷன் அலாரம் அடிச்சமாதிரி அலறினாரு. ‘என்ன நீயும் என்னை காதலிக்கிறீயா... இது முன்னயே தெரிஞ்சிருந்தா நான் முந்தியிருப்பேனே’ன்னு லேசான இதய அதிர்ச்சி ஏற்பட்டுச் சிரிச்சார்.

காதல் ரயில் ஓட ஆரம்பிச்சது. வாரம் ஒருமுறை சென்னைக்கும் கோவைக்கும் இடையே டெலிபோனில் காதல் டிரிங்... டிரிங்... மாசம் ஒருமுறை நேருக்குநேர். இப்படி காதல் வளர்ந்துட்டு வர்ற நேரத்துலே உமா வீட்டுக்கு காதல் நிலவரம் தெரிந்து, கலவரமானது. உமா ஹவுஸ் அரெஸ்ட்.

‘என் மக கலெக்டர் ஆகப்போறா... அவளுக்கு இப்போ காதல் கத்திரிக்கா யெல்லாம் வேணாம். மீறி ஏதாவது நடந்தா, நாங்க குடும்பத்தோட தற்கொலை பண்ணிக்குவோம்’ - உமா வீட்டிலிருந்து பொன்.சுதாவுக்கு இப்படி மிரட்டல்.

‘நீங்க இந்த ரூட்டில் போனா, நாங்க வேற ரூட்டில் போவோம்’னு ரெண்டு பேரும் முடிவு பண்ணாங்க. ரகசிய ரிஜிஸ்டர் மேரேஜ் நடந்தது. கல்யாணத் துக்குப் பிறகு எதுவுமே நடக்காதமாதிரி ரெண்டுபேரும் அவங்கவங்க வீட்ல இருந்தாங்க. ஆனா, கொஞ்சநாள்ல பொன்.சுதா வீட்டுக்கு இந்தக் கல்யாண விவகாரம் தெரிஞ்சும், தெரியாத மாதிரி இருந்தாங்க.

காதல் நாயகிக்கு படிப்பு முடிஞ்சதும் அவங்களை வீட்டுக்கு அழைச்சிட்டு வந்து
நின்னார் நம்ம காதல் நாயகன். சமாதானமாகி மாப்பிள்ளை சொந்தங்கள் இணைந்து திருமணத்தை முடிச்சது. விஷயம் பொண்ணு வீடு வரைக்கும் போனது. ‘இனிமேலும் நாம சும்மா இருந்தா நாகரிகமா இருக்காது. பொண்ணு நம்மளை என்னா நினைப்பா...’னு நினைச்ச பொண்ணு வீட்டார், தம் பங்குக்கு திருமண வரவேற்பு நடத்தி, மாப்பிள்ளையோடு கை குலுக்கினாங்க. 

கல்யாணத்துக்குப் பிறகு அசிஸ்டன்ட் டைரக்டர் பொன்.சுதாவும் உமாவும் சென்னையில் தனிக்குடித்தனம் நடத்த ஆரம்பிச்சாங்க. சினிமா கனவோடு கணவன் வலம் வருவதால், வரும்படி இல்லாத குடும்பத்தை கவனிக்க தானே தயாராகிவிட்டார் மனைவி.

குடும்பம் சுழல ஆரம்பித்தது. பொன்.சுதா இரண்டு குறும்படங்களை இயக்கி 22 விருதுகள் பெற்றிருக்கிறார். அடுத்து சினிமாவை நோக்கி நகர்ந்துகொண்டு இருப்பவருக்கு இப்போது, இரண்டு குருத்துகள்: அன்புமதி, அனிச்சமலர்!

கடிதம் வளர்த்த காதல்

இது 70களில் நடந்த காதல். ரெண்டு பேரும் ஒரே மாவட்டம். ஒரே ஊர். ஒரே தெரு. அடுத்தடுத்த வீடு. இந்த நெருக்கம்தான் இவங்களுக்குள்ளகாதலை வளர்த்துச்சு. கடலூர் மாவட்டம் கீரப்பாளையம்தான் நம்ம முதல் தலைமுறை காதலர்களோட ஸ்பாட். உஷா பள்ளிக்கூட மாணவி. பாலு பி.ஓ.எல் (Bachelor Oriental Language) முடிச்ச விவரப்புள்ளி. (பி.ஓ.எல். பட்டம் இப்ப கிடையாது) உஷாவுக்கு ரெண்டு அண்ணன். ரெண்டு தம்பி. அப்பா இல்லை. அம்மாதான். பாலு தனிக்காட்டு ராஜா. கம்யூனிஸ்ட் பாதையில போற இடதுசாரி.


உஷா ராணியோட மூத்த அண்ணனும் பாலசுப்ரமணியனும் கட்சி தோழர்கள். பாலு வீட்டுக்கு உஷா அண்ணன் வர்றதும், உஷா வீட்டுக்கு பாலு போறதும் வழக்கம். இப்படி நம்ம நாயகன், நாயகி வீட்டில் அடிக்கடி வலம் வருவார். பள்ளி படிப்புல உஷாவுக்கு சந்தேகம் வரும்போதெல்லாம் திருவாளர் பாலுதான் டியூஷன் மாஸ்டர். கல்வி பரிவர்த்தனை நடக்கும்போதெல்லாம், இவங்களுக் குள்ளே காதல் பரிமாற்றமும் நடக்கும்.

இப்படி கல்வி தோட்டத்தில் காதல் பூ மலர்ந்தபோது, இடையில் ஒரு நாள் மடல் ஒன்று தீட்டினார் உஷா.

‘அன்புள்ள பாலு, உங்களை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது - அன்புடன் உஷா.’ இதுதான் எழுபதுகளின் காதல் எஸ்எம்எஸ்.

உஷா வீட்டுக்கு பாலு போய்வரும் படலம் இப்போது அதிகமானது. உஷாவின் அம்மா புரிந்துகொண்டார். பாலுவை தனியாகச் சந்தித்து கேட்டார்... ‘என்னப்பா இப்படி பண்ணிட்டே...’ - இந்தக் கேள்வி பாலுவுக்கு புரிந்துவிட்டது. ஆனால், பதில் சொல்லத் தெரியவில்லை. அமைதியாக நகர்ந்துவிட்டார். அதன்பிறகு, வீட்டுக் காதல் குளத்துக் காதலாக மாறிப்போனது.

குளத்துக்கு உஷா மட்டும்தான் குளிக்க வருவது வழக்கம். இப்போது பாலுவையும் குளத்துப் பக்கம் பார்க்க முடிந்தது. மூணு பேருக்கு தெரிஞ்ச காதல் இப்போ ஊருக்கே தெரிய ஆரம்பிச்சது. இந்த நேரத்தில், உஷாவின் இரண்டாவது அண்ணனுக்கு பாண்டிச்சேரியில் வேலை கிடைக்க, குடும்பமே பாண்டிச்சேரிக்கு குடிபெயர்ந்தது.

பாண்டிச்சேரியிலும், கடலூரிலுமாக காதல் தொடர்வண்டி பிரிந்து இருந்தது. ரெண்டு வருஷத்துக்குப் பிறகு ஒருநாள், போஸ்ட் மேன் பாலு வீட்டுக் கதவை தட்டினார், ‘சார் போஸ்ட்...’ - பாலு நண்பர், உஷா அண்ணனிடமிருந்து கடிதம்.

‘நீங்களும் உஷாவும் பிரிந்து இருந்தாலும், உஷா மனதில் நீங்கள் மட்டும்தான் இருக்கிறீர்கள். உங்கள் காதலில் சிவப்பு விளக்கு போய், இப்போது மஞ்சள் விளக்கு எரிகிறது...’ - கடிதத்தை படிச்சதும் பாலு நெஞ்சம் நெகிழ்ந்துவிட்டார். இப்போ பாலு, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பட்டம் முடிச்சிருந்தார். படிப்பு முடிச்சு, கம்யூனிஸ்ட் கூட்டங்களில் சுற்றிக்கொண்டு இருந்தவருக்கு ஒருநாள் மெட்ராஸிலிருந்து லெட்டர் வந்தது.

‘அன்புள்ள பாலுவுக்கு, உஷா எழுதுவது. நாங்கள் இப்போது சென்னையில் வசித்து வருகிறோம். நான் ஆயிரம்விளக்கில் உள்ள சீட்டு கம்பெனியில் வேலை பார்க்கிறேன். நீங்கள், சென்னை வந்து என்னை அழைத்துப் போங்கள்...’ - உஷா கடிதம் எழுதியது சீட்டு கம்பெனி முதலாளிக்கும் தெரியும்.

பாலு, சென்னை வந்ததும் உஷாவை முதலாளியே அனுப்பிவைத்தார். சென்னையிலேயே இருவருக்கும் வீடு பார்த்துக் கொடுத்தார். தாலி கட்டாமலேயே தம்பதிகளாகிவிட்டனர்; குழந்தையும் உண்டானது. 

அக்கம்பக்கத்து வீட்டார் உஷாவை பயமுறுத்தினார்கள். ‘தாலி இல்லாமல் பிரசவத்துக்காக ஆஸ்பத்திரிக்கு போனா, நர்ஸ் திட்டுவாங்க. சந்தேகப் படுவாங்க. எதுக்கும் ரெண்டுபேரும் யோசிச்சு முடிவெடுங்க...’

‘உண்மைதான். வாழ்பவர்களுக்குள் புரிதல் இருந்தாலும், தாலி இல்லாமல் போனால், இந்தச் சமூகம் பின்னாடியும் பேசும்; முடிந்தால் முன்னாடியும் பேசும்’ - பாலு சுதாரித்துக்கொண்டு, உஷா கழுத்தில் ஒரு மஞ்சள் கயிறைக் கட்டினார். பெண் குழந்தை பிறந்தது.

பிறகு, தீக்கதிர் நாளிதழில் செய்தி ஆசிரியராகச் சேர்ந்தார். இரண்டாவதும் பெண் குழந்தை. இரண்டு பெண்களுக்கும் திருமணமாகி, இப்போது பேரன் - பேத்திகள் வந்துவிட்டார்கள். காலமெல்லாம் வாழும் காதல், இவர்கள் மனதில் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறது!

- சா.இலாகுபாரதி
நம் தோழி - பிப்ரவரி 2011
படங்கள்: கமல்

01 May 2011

ஃபோட்டோகிராஃபர்களும் அன்னா ஹசாரேவும்

Posted by Gunalan Lavanyan 9:15 AM, under | No comments

புகைப்படக் கலையில் ஆர்வமும் தாகமும் உள்ள நண்பர்கள் ஒன்றிணைந்து ஒரு அமைப்பாக இயங்கி வருகிறார்கள். இப்படியொரு அமைப்பை முதன் முதலில் தென்னிந்தியாவிலேயே பெங்களூருவில்தான் தொடங்கி யிருக்கிறார்கள். பெங்களூருவில் உள்ள BWS (Bangalore Weekend Shoot) நண்பர்களின் இயக்கத்தை ஃபிளிக்கர், ஃபேஸ்புக் போன்ற தளங்களில் பார்த்த சென்னை நண்பர்கள் சிலரும் CWC (Chennai Weekend Clickers) என்று ஆரம்பித்து இயங்கிவருகிறார்கள். இதனால் ஒரேநேரத்தில் ஒரே இடத்தில் ஏராளமான புகைப்படக் கலைஞர்கள் சந்தித்து ஒரே காட்சிகளைப் பல்வேறு கோணங்களில் சுட்டுத்தள்ளுகிறார்கள். அவர்களுடைய சங்கமத்தையும் பங்களிப்பையும் பார்க்கும்போது புகைப்படக்கலையில் ஆர்வமும் ஆசையும் உள்ள யாருக்கும் அந்த இயக்கத்தில் தன்னையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றத்தான் செய்யும்.

அப்படி, இந்த ஞாயிறு CWC நண்பர்களை சந்தித்தேன். பெங்களூருவில் உள்ள BWSலிருந்து முரளிதரன் அழகர் வந்திருந்தார். தமிழர்தான். மென்பொருள் துறையில் உயர்பதவியில் இருக்கும் முரளிதரனுக்கு புகைப்படக் கலையில் வேட்கை அதிகம். அவரோடு பேசிக் கொண்டிருந்தபோது, இப்படியொரு அமைப்பு இயங்கிவருவதாகத் தெரிவித்தார். உடனே அந்த நண்பர்களை சந்திக்க வேண்டும் என்று கூறினேன். சென்னை வரும்போது நிச்சயம் அறிமுகப்படுத்துவதாகக் கூறினார்.


அப்படித்தான் இந்த மே தினத்தில் ஜனத்திரளில் மெரினா கடற்கரையில் CWC சங்கமத்தை அறிமுகப்படுத்தினார். பல்வேறு துறைகளில் இயங்கிக்கொண்டு புகைப்படக் கலையில் ஆர்வம் உள்ள பலரை அப்போது சந்திக்க முடிந்தது. எல்லாரும் சின்ன குழந்தைகளாக மாறி கேமாராவை தூக்கிக்கொண்டு ஓடிக்கொண்டு இருந்தார்கள்.

இன்னொருபக்கம் காந்தி சிலைக்கு அருகில் மனிதச் சங்கிலி அமைத்து இருந்தார்கள். எல்லாருடைய கைகளிலும் தேசிய கொடி. அவர்களைப் பார்த்ததும் இன்னைக்கு என்ன நாள் என்றே சற்று குழப்பமாக இருந்தது. கண்ணை ஸூம் பண்ணி பார்த்தால் இந்திவாலாக்கள், சிங், தமிழர், தெலுங்கர், மலையாளி, மார்வாடிகள் என்று எல்லா தரப்பு மக்களும் கைகோர்த்து நின்று கொண்டு, பாரத் மாதாக்கி ஜெய்! அன்னா ஹசாரேக்கி ஜெய்! வந்தே மாதரம்! வந்தே மாதரம்! வந்தே மாதரம்... என்று கோஷம் எழுப்பிக்கொண்டு இருந்தார்கள். அதைக் கேட்கும்போது இன்னொரு சுதந்திரவேள்வி ஆரம்பித்துவிட்டதா என்று தோன்றியது; மெய்சிலிர்த்தது! ஊழலுக்கு எதிரான இயக்கத்தினர் லோக்பால் மசோதாவை நிறைவேற்றக் கோரி மனிதச் சங்கிலி நடத்தினார்கள்.

I am in CWC group


அன்னா ஹசாரே பற்றி ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு கொள்கை வைத்திருக்கின்றன. நான் இடதுசாரிகளின் நிலைப்பாட்டை ஆதரிப்பதால், அன்னா ஹசாரே பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை. ஆனால், இன்று அம்பலப்பட்டு நிற்கும் பல ஊழல்களை வெளிச்சத்துக்கு கொண்டுவந்ததில் கம்யூனிஸ்டுகளுக்கு முக்கியப் பங்கு உண்டு.

26 April 2011

கண்ணீர் வடித்த பக்தர்

Posted by Gunalan Lavanyan 7:36 AM, under | No comments


தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை கட்டமைப்பதற்காகவும் தொழிற்சங்கத்தை வளர்ப்பதற்காகவும் அயராது பாடுபட்ட தலைவர் பா.ஜீவானந்தம். ஜீவா, ஜீவா என்று எல்லாரும் உரிமையோடு பெயர் சொல்லி அழைக்கப்பட்ட ஒரே தலைவரும் அவர்தான்.

நல்ல வீடு இல்லாமல் குடிசை வீட்டில் ஜீவா வாழ்ந்து வந்தபோது, அவர் வீட்டைக் கடந்துபோன காமராஜர் ஜீவாவைப் பார்க்க வேண்டும் என்று அவர் வீட்டுக்கு வந்தார். வீட்டைப் பார்த்து திகைத்துப்போன கர்மவீரர், ’ஐயோ ஜீவா... குடிசையிலா இருக்கிறீர்கள். உம் என்று சொல்லுங்கள் மாடி வீடு கட்டித்தரச் சொல்கிறேன்’ என்றார். அதற்கு ஜீவா சொன்னார், ‘அப்படியா, சந்தோஷம். அதேபோல இங்கு இருக்கிற எல்லா ஏழைக் குடிசைகளையும் மாடி வீடாக மாற்றித் தருவீர்கள் என்றால், என்னுடைய வீட்டையும் மாடியாக்கிவிடுங்கள்’ என்று ஜீவா காமராஜருக்கு பதில் அளித்ததாக வரலாற்றுப் பதிவுகள் இருக்கின்றன.

பாருங்கள் ஒப்பற்றத் தலைவர், நேர்மைக்கும் தூய்மைக்கும் பெயர் போன தலைவர், ஊழல் இல்லாத ஆட்சியை வழங்கிய தலைவர், எல்லா தரப்பு மக்களின் அபிமானத்தையும் பெற்ற தலைவர் காமராஜரே ஜீவாவின் வறுமையைப் பார்த்து வறுத்தப்பட்டு இருக்கிறார் என்றால், ஜீவா எவ்வளவு பெரிய தியாக வாழ்க்கையை வாழ்ந்து இருக்க வேண்டும்? எல்லா ஏழைகளும் எப்போது மாடியில் வசிக்கிறார்களோ, அப்போது தானும் வசிக்கிறேன் என்று கூறிய ஜீவா எவ்வளவு பெரிய தியாகி?

விஷயத்துக்கு வருகிறேன். விகடனில் நான் பணியாற்றிக்கொண்டிருந்தபோது ஜீவாவின் வாழ்க்கை வரலாறை புத்தகமாக எழுதினேன் (வெளியீடு விகடன் பிரசுரம்). ஜீவா என்ற பெயரிலேயே அது வெளிவந்து வாசகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது; பெற்று வருகிறது.

ஆனால், அதுவிஷயமல்ல. இந்த ஒரு மாதத்தில் மட்டும் ஜீவா புத்தகத்தை வாசித்துவிட்டு, என்னோட தொலைபேசியவர்கள் பலர். அதில் சிலர் வாழ்த்து சொன்னார்கள், சிலர் இதுமாதிரி நிறைய புத்தகங்கள் வரவேண்டும் என்றார்கள். இன்னும் சிலர் உங்கள் நட்பு கிடைத்ததற்கு மகிழ்ச்சி என்று கூறினார்கள். ஆனால், ஈரோட்டிலிருந்து பேசிய வாசகர் புத்தகத்தைப் படித்துவிட்டு, நெஞ்சுறுகி அழுதுவிட்டார். அவருக்கு வயது 50.

அவர் பேசியதை அப்படியே பதிவு செய்கிறேன்.

‘என் வயசுக்கு காமராஜர் தொடங்கி, இன்று இருக்கிற போலி அரசியல் தலைவர்கள் வரை பல பேரை பார்த்துவிட்டேன். ஆனால், ஜீவா மாதிரி ஒரு தலைவரை எனக்கு பார்க்கக் கொடுத்து வைக்கவில்லையே என்று நினைக்கும்போது துரதிர்ஷ்டக்காரனாக என்னை நினைக்கிறேன். அவரோடு அரசியல் செய்தவர்கள் அவரை மறைத்துவிட்டார்கள். இன்றைய தலைமுறையில் யாருக்கு ஜீவாவை தெரியும். 

போலி அரசியல் தலைவர்கள் எல்லாம் தங்களை தாங்களே விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள். தன்னைப் பற்றி புகழ்ந்து பேசச்சொல்லி சிலரை அதற்கு நியமித்தும் விடுகிறார்கள். ஆனால், இலவசமாக வருகிற மாடி வீட்டைக்கூட வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு மனம் படைத்த தலைவர்கள் இன்றைக்கு யார் இருக்கிறார்கள்? அன்று ஜீவா இருந்திருக்கிறார். அவருடைய வாழ்க்கையில் அவர் பட்ட இன்னல்களையும், துன்பங்களையும் படிக்கும்போது மனம் வலிக்கிறது. (அழுகிறார்...) ஜீவாவைப் பற்றி இன்னும் நான் தெரிந்துகொள்ள வேண்டும். அவருடைய மற்ற புத்தகங்களையும் எனக்கு அறிமுகப்படுத்துங்கள்’ என்று சொன்ன ரமேஷ், ஈரோடு மில் ஒன்றில் துணி மூடைகள் சுமக்கும் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். ரமேஷின் பக்தியைப் பார்த்து திகைத்துவிட்டேன்.

ஜீவா மறைந்து 50 ஆண்டுகள் நெருங்க இருக்கிற இந்த வேளையிலும், பல ஜீவன்களின் இதயத்தில் இன்னமும் ஜீவித்து வருகிறார் ஜீவா.

25 April 2011

கேள்விக்குறியாகும் தமிழ் வழிக் கல்வி!

Posted by Gunalan Lavanyan 10:09 AM, under | 3 comments


தமிழ் வழிக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு புத்தகம் கிடைப்பதில் சிரமம் இருந்துவருவதாகக் தமிழகம் முழுவதிலிருந்தும் தகவல்கள் வந்துகொண்டு இருந்தன. ஆனால், அரசே ஊக்கப்படுத்தும் தமிழ் வழிக் கல்விக்கு புத்தகம் எப்படி கிடைக்காமல் இருக்கும் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். ஆனால், மேற்கண்ட புகாரை நிரூபிக்கும் வண்ணமாக தினமலர் புதுமலர் இணைப்பில் ஒரு கடிதம் வெளியாகியுள்ளது.

’அன்புள்ள முதல்வருக்கு ஆனந்தி எழுதுவது...’ திமுகவின் பராக்கிரமங்களைப் பட்டியலிடும் விளம்பரட்தின் ஸ்லோகனையே தலைப்பாக்கி அந்தக் கடிதம் வெளியிடப்பட்டு இருக்கிறது. அந்தக் கடிதத்தை அப்படியே அளிக்கிறேன்.... அதன்பிறகு பேசுவோம்.



25.04.2011

நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டின்போது, இந்தியா கோப்பை வென்றதை அனைவரும் பார்த்துக்கொண்டு இருந்தனர்; ஆந்திர முதல்வரும், முன்னாள் விளையாட்டு வீரருமான கிரண்குமார் ரெட்டியும் பார்த்துக்கொண்டு இருந்தார். மறுநாள், கோப்பையை வென்ற இந்தியாவுக்கு, ஆளாளுக்கு பரிசுகள் அறிவித்துக்கொண்டு இருக்க, ஆந்திர முதல்வரோ அமைதியாக இருந்தார்.

’நீங்க எதுவும் செய்யவில்லையா?' என்று நிருபர்கள் கேட்டபோது, ’கிரிக்கெட் வீரர்கள், மற்ற விளையாட்டு வீரர்கள் போல அல்ல; அவர்களுக்கு நிறையவே கிடைக்கிறது. ஆகவே, தேவையின்றி அரசு நிதியை எதற்கு வீணாக்க வேண்டும்?' என்று, சிம்பிளாக சொல்லிவிட்டார்.

ஆனால், தமிழக முதல்வரான தாங்களோ, ’மகா ஏழைகளான' கிரிக்கெட் வீரர்களுக்கு, உங்கள் பங்குக்கு, மன்னிக்கவும்... தமிழக மக்கள் வரிப் பணத்திலிருந்து ஏதாவது கொடுத்தாக வேண்டும் என்று, அணிக்கு மூன்று கோடி ரூபாயும், பெரும்பாலும், சக வீரர்களுக்கு, குளிர்பானம் கொடுத்துக் கொண்டு இருந்த தமிழக வீரர் அஷ்வினுக்கு, ஒரு கோடி ரூபாயும் அறிவித் தீர்கள்.

இதில் என்ன வேடிக்கை என்றால், அப்போது தேர்தல் நேரம், எதையும் தன்னிச்சையாக செய்யக்கூடாத நிலை இருந்தது. ஆனாலும், ’கஷ்டத்தில்' இருக்கும் வீரர்களுக்கு உதவியே ஆகவேண்டும் என்று உங்களது, ’கருணை' உள்ளம் சொல்ல, முனைப்புடன் தேர்தல் கமிஷனுக்கு, பிரசாரத்துக்கு நடுவிலும் கடிதம் எழுதி, அனுமதி வாங்கினீர்கள்.

அவர்களும் அனுமதி கொடுத்து, ’பணம் கொடுக்கலாம்; ஆனால், அதை போட்டோ எடுத்து, பப்ளிசிட்டி தேடக்கூடாது' என்று, ஒரு நிபந்தனை விதித்தனர். ’ஒரு போட்டோகூட எடுத்துக்கக்கூடாதாம்' என்று, இதையும் வேதனையுடன் தாங்கள், நிருபர்களிடம் மனம் நொந்து கொண்டீர்கள்.

இந்த அளவு ஏழை, எளிய கிரிக்கெட் வீரர்களுக்கு பாடுபடும் தங்கள் பொன்னான உள்ளத்துக்கு ஒரு வேண்டுகோள்... இதற்கு தேர்தல் கமிஷன் அனுமதி கேட்டு கூட கடிதம் எழுத வேண்டாம்; ஒரு வாய்மொழி உத்தரவு போதும்... செய் வீர்களா?

’தமிழர்களே... தமிழர்களே' என்று, தாங்கள் வாஞ்சையாய் அழைக்கும் தமிழர்கள் பெற்ற பிள்ளைகள் சிலர், விடாப்பிடியாக தமிழ் வழிக்கல்வி கற்று வருகின்றனர். இவர்களுக்கு தேவையான பாட புத்தகங்கள் எல்லாம், சென்னையில் மட்டுமே கிடைக்கின்றன. சென்னை என்பது, தமிழகத்தின் ஒரு பகுதி தானே தவிர, சென்னையே தமிழகம் அல்ல. ஆனால், கல்வி அதிகாரிகள், ’உனக்கு வேண்டுமானால், சென்னைக்கு வந்து வாங்கிக்கொள்' என்பதுபோல, விட்டேத்தியாக உள்ளனர்.

பொறுமை இழந்த ஈரோடு மக்கள், உரிமை பாதுகாப்பு தலைவர் சண்முகசுந்தரம் என்பவர், இந்த வருடமாவது இதற்கு தீர்வு காண வேண்டும் என்று, கோர்ட்டிற்கு போய்விட்டார். கோர்ட்டாரும், ’என்ன இது... படிக்கிற புள்ளைகளுக்கு, இருக்கிற இடத்துல புத்தகம் கிடைக்க ஏற்பாடு பண்ணாம...' என்று எரிச்சலுடன் விளக்கம் கேட்டுள்ளனர்.

சாதாரண விஷயம்... ’அந்தந்த ஊரில் உள்ள தனியார் புத்தகக்கடையில், அரசு நிர்ணயித்த விலைக்கு புத்தகம் கிடைக்கச் செய்ய வேண்டும்' என்று, தாங்கள் ஒரு வார்த்தை, சின்னதாய் ஒரு வாய்மொழி உத்தரவு போட்டால் போதும்... தமிழ் குழந்தைகள் படிச்சு பொழச்சுக்குவாங்கய்யா.

நன்றி,

இப்படிக்கு
ஆனந்தி

(நன்றி: தினமலர்)



- இப்படி ஒரு கடிதம் தினமலரில் வெளியானதுமே சற்று நொந்துத்தான் போனான். தமிழ் வழிக் கல்வி பயில்வோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை, சிறப்புச் சலுகை என்றெல்லாம் அறிவிப்புகளை ’அள்ளி இறைக்கும்’ (நன்றி: நகைச்சுவை நடிகர் வடிவேலு) திமுக அரசு, மாணவர்களுக்கு எளிதாகப் புத்தகங்கள் கிடைப்பதில் உள்ள சிரமங்களை கண்டுகொள்ளாமல் இருப்பதை நினைத்தால் கோபமும் வேதனையும் ஒருசேர வருகிறது.

வாசலில் தமிழை வரவேற்றுவிட்டு புழக்கடைப்பக்கம் துரத்தி அடிப்பது மாதிரிதான் இருக்கிறது இந்த பாராமுகம். புத்தகங்கள் கிடைக்கவே வழி செய்யமுடியாத ஒரு அரசு, படித்துவிட்டு பட்டம் வாங்கிய பிறகு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிப்பதற்கு மட்டும் எப்படி முன்வரும் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

இதற்கிடையில், பள்ளிக் கல்வித் துறை செயலாளர் சபீதா தன்னிச்சையாகவே ப்ளஸ் 2 மற்றும் 10 வகுப்பு தேர்வு முடிவுகளுக்கான தேதியை அறிவித்து விட்டார் என்று அந்தத் துறையின் அமைச்சர் தங்கம் தென்னரசு கவலை தெரிவித்து இருக்கிறார். புத்தகங்கள் கிடைப்பதில் இருக்கிற பிரச்னைக்கு ஒரு முடிவுகட்டுவதற்கு இப்படி அவர் கவலைப்பட்டாரா என்று தெரியவில்லை. ஆனால், 58 வயது வரைக்கும் பதவியில் இருக்கப்போகிற ஒரு சாதாரண அதிகாரி தன் அதிகாரத்தை மீறி, தன்னை கண்டுகொள்ளாமல், தன்னிச்சையாக எப்படி அறிவிக்கலாம் என்று மட்டும் கவலையோடு பத்திரிகையாளர்களிடம் கூறுகிறார்.

ஆக, அரசியல்வாதிகளின் மனநிலை என்னவென்று தெளிவாகப் புரிகிறது. மக்கள் நலப்பணிகள் நடக்காமல் போனால்கூட அவர்கள் கவலைப்பட மாட்டார்கள். ஆனால், அதிகாரம் பறிபோனால் மட்டும் கூக்குரல் எழுப்பு வார்கள். இந்த நிலை தமிழ் வழிக் கல்வியில் மட்டுமல்ல. தமிழர் பாதுகாப் பிலும் கூடத்தான்.

24 April 2011

பாபாவுக்கு பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி - புகைப்படத் தொகுப்பு

Posted by Gunalan Lavanyan 11:28 PM, under | No comments


புட்டப்பர்த்தி சாய்பாபா ஞாயிறு அன்று (ஏப்ரல் 24) காலை 7.30 மணிக்கு மரணமடைந்தார். ஞாயிறு மாலை 6 மணி முதல் குல்வந்த் மண்டபத்தில் பக்தர்கள் தரிசனத்துக்காக பாபாவின் உடல் வைக்கப்பட்டு இருக்கிறது. புதன் அன்று (ஏப்ரல் 27) இறுதிச் சடங்கு நடைபெறும் என்று ஆஸ்ரம வட்டாரம் தெரிவித்து இருக்கிறது.



பாபாவின் இறுதிச் சடங்கை பார்ப்பதற்காக உலகம் முழுவதும் இருந்து பாபாவின் பக்தர்கள் லட்சக்கணக்கானவர்கள் புட்டப்பர்த்தி ஆசிரமம் நோக்கி வந்தவண்ணம் இருக்கிறார்கள். பாபாவின் மறைவால் அதிர்ச்சியடைந்த பக்தர்கள் கண்ணீர் வடித்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

ஆந்திரா அரசு 4 நாள் துக்கம் அனுஷ்டிப்பு

வரும் புதன்கிழமை பிரசாந்திநிலையத்தில் உள்ள குல்வந்த் ஹாலில் அடக்கம் செய்யப்படும். பாபா உடல் அடக்கம் செய்யப்படும்போது அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடக்கும். சாய்பாபா மறைவுக்கு ஆந்திரா அரசு மாநிலம் முழுவதும் 4 நாள் துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த நான்கு நாளும் அனந்தபூர் மாவட்டம் முழுவதும் விடுமுறை அளிக்கப்படுவதாக ஆந்திர அரசு வெளியிட்டு்ள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தலைவர்கள் இரங்கல்

புட்டபர்த்தி சாய்பாபா மறைவுக்கு ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தமிழக முதல்வர் கருணாநிதி, ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி, மத்திய - மாநில அமைச்சர்கள், அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், ஆந்திர முன்னாள் முதல்வர் ரோசைய்யா, ஆந்திர அமைச்சர்கள் உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பாபாவின் மரணச் செய்தியை கேட்டுவிட்டு கருணாநிதி வெளியிட்ட இரங்கல் செய்தியில், ’சென்னை மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்க உதவியவர் பாபா. இதன்மூலம் தமிழக மக்களின் இதயத்தில் அவர் இடம் பிடித்துவிட்டார்’ என்று கூறியிருக்கிறார். ‌ஜெயலலிதா வெயிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘சாய் பாபாவின் இழப்பு மனித குலத்துக்கு பேரிழப்பு’ என்று தெரிவித்து இருக்கிறார்.

பிரதமர் மன்மோகன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ’தெய்வீகத் தன்மையும், போற்றுதலுக்குரியவருமான சாய்பாபா லட்சக்கணக்கான மக்களின் மனதில் வாழ்ந்தவர்’ என்று கூறியிருக்கிறார். பா.ஜ.க-வின் மூத்த தலைவர் அத்வானி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பாபா மறைவால் நாடே கவலையில் ஆழ்ந்துள்ளது. சாய்பாபாவை நான் பல முறை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளேன். அவரது அறிவுரைகள் எனக்கு பல நேரங்களில் வழிகாட்டுதலாக இருந்தது’ என்று கூறியிருக்கிறார்.

அஞ்சலி

தமிழ்க துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பாபாவுக்கு நேரில் அஞ்சலி செலுத்துவதற்காக சிறப்பு விமானம் மூலம் புட்டபர்த்தி சென்று அஞ்சலி செலுத்தினார். ஆந்திரமுதல்வர் கிரண்குமார்ரெட்டி, கவர்னர் நரசிம்மன், மகாராஷட்டிர முன்னாள் முதல்வர் அசோக்சவான், தெலுங்குதேச கட்சி தலைவர் சந்திரபாபுநாயுடு, பிரஜா ராஜ்யம் கட்சி தலைவர் சிரஞ்சீவி உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள்.

பாபாவுக்கு பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி - புகைப்படத் தொகுப்பு


















பாபா மரணத்தில் மர்ம முடிச்சுகள்!

Posted by Gunalan Lavanyan 3:48 PM, under | 2 comments

உடல்நலக் குறைவால் கடந்த மாதம் 28ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த புட்டபர்த்தி சாய்பாபா இன்று மரணம் அடைந்தார்.

இதயக் கோளாறு, சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டு இருந்த பாபாவுக்கு வயது 85. பாபாவுக்கு உலகம் முழுவதும் பக்தர்கள் இருக்கிறார்கள். அதனால், அவருடைய மரணச் செய்தியைக் கேட்ட பலர் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து இருக்கிறர்கள்.



ஆனால், பாபாவின் இறப்பில் மர்மம் இருப்பதாக ஆந்திரா வட்டாரத்தில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. பாபா இருந்த புட்டபர்த்தியில் கடந்த ஒரு வார காலமாக அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு இருந்தது. அதற்குக் காரணமே அவருடைய மரணத்தால் எந்தவித அசம்பாவிதமும் நடந்து விடாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான் என்று அவருடைய பக்தர்கள் கூறுகிறார்கள்.

அதுமட்டுமல்ல, அவர் இறந்தபிறகுதான் 144 தடை உத்தரவே பிறப்பக்கப் பட்டது என்றும், ஆனால், உடனே விஷயம் வெளியில் தெரிந்தால் பதட்டமான சூழ்நிலை உருவாகிவிடும் என்பதால், அதைத் தடுப்பதற்காகத்தான் ஒரு வாரம் காலதாமதமாக மரணச் செய்தியை வெளியிட்டு இருக்கிறார்கள் என்றும் சிலர் சந்தேகம் தெரிவிக்கிறார்கள்.

இதற்கிடையில் புட்டபர்த்தியின் மாவட்ட ஆட்சியர் ஒருமுறை மருத்துவ மனைக்கு சென்று பாபா உயிரோடுதான் இருக்கிறார் என்றும், ஆனால், மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார் என்றும் தகவல் கூறியிருந்தார். ஆனால், அந்தத் தகவலும் உண்மையில்லை என்று ஒருசாரார் பேசிக் கொள்கிறார்கள்.

அதேநேரத்தில் பாபா டிரஸ்டுக்குச் சொந்தமான சொத்தை யார் நிர்வகிப்பது என்ற தகராறின் காரணமாகத்தான் மரணச் செய்தியை மருத்துவர்களே அறிவிக்காமல் ஒத்திவைத்து இருந்தார்களோ என்ற சந்தேகமும் பக்தர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

எது எப்படியிருந்தாலும் கத்திரிக்காய் முற்றினால் கடைத்தெருவுக்கு வரத்தான் போகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் பாபாவின் மரணத்தில் உள்ள முடிச்சுகள் அவிழும்.

19 April 2011

180 டிகிரி

Posted by Gunalan Lavanyan 8:28 PM, under | No comments

180 டிகிரி படத்திலிருந்து சில காட்சிகள்...