03 February 2010

என்.எஸ்.கிருஷ்ணன் செய்த வேடிக்கை காதால்

Posted by Gunalan Lavanyan 12:32 AM, under | No comments

சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன். பம்பாய் மெயில் புறப்படுவதற்குச் சில விநாடிகளே இருந்தன. புனாவில் நடைபெறவிருக்கும் ‘வசந்தசேனா’ படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் ஒரு கோஷ்டி அந்த வண்டிக்குள் இருந்தது. கடைசி நேரத்தில் அந்த கோஷ்டியை அழைத்துச்செல்லும் இரு மானேஜர்கள் இடையே தகராறு. அது முடிவதற்குள் வண்டி புறப்பட்டுவிட் டது!

வண்டி சில மைல்கள் கடந்த பிறகுதான் தங்களை அழைத்துச் செல்லும் மானேஜர்கள் வண்டியில் ஏறவில்லை என்பது வண்டிக்குள்ளிலிருந்த சினிமா நடிக கோஷ்டிக்குத் தெரியவந்தது. அவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.  திருதிருவென்று விழித்தார்கள். அவர்களுக்கு நடுவே அப்படி விழிக்காத ஒரு நடிகரும் இருந்தார்.

அவர் மற்றவர்களைப் போல ஓடிக்கொண்டிருந்த ரயில் பெட்டிக்குள் தவிக்காமல் மற்றவர்களுக்குத் தைரியம் சொன்னார்:  ‘‘இப்ப என்ன ஆச்சு? ரயில் ஓடிக்கிட்டு இருக்கு. நாம் வண்டிக்குள்ளே பத்திரமாகத்தானே இருக்கோம்?’’ என்றார். ரயில் ஓடிக்கொண்டிருந்தது.

அதே பெட்டியில் ஒரு பெண்மணியும் இருந்தாள். அவரின் கலங்காத உள்ளத்தையும், வேடிக்கைப் பேச்சையும் சிறு புன்முறுவலோடு ரசித்துக் கொண்டிருந்தாள். அவளும் அந்த நடிக கோஷ்டியோடு நடிக்க வந்தவள்தான். அந்த மனிதர் எல்லாருக்கும் தைரியம் சொன்னாலும், அவளுக்கு உள்ளம் திக்கென்றது.தன் பதற்றத்தை அவ்வளவாக அந்தப் பெண்மணி  வெளிப்படையாகக் காட்டிக்கொள்ள வில்லை. ரயில் ஓடிக்கொண்டிருந்தது.

அவர் ஒவ்வொருவரிடமும் எவ்வளவு பணம் இருக்கிறது என்று கேட்டார். அவர்களிடம் தேவையான பணம் கிடைக்கவில்லை. அதே கேள்வியை அந்தப் பெண்மணியிடமும் கேட்டார், ‘‘புனாவுக்குப் போனதும் சினிமாக்  கம்பெனிக்காரரிடமிருந்து வாங்கிக் கொடுத்துவிடுகிறேன். உன்னிடம் எவ்வளவு பணம் இருந்தாலும் கொடுத்து உதவு!’’ என்று மீண்டும் அவர் கேட்டார்.

அந்தப் பெண்மணி தன்னிடமிருந்த தொண்ணூறு ரூபாயை எடுத்துக் அவரிடம் கொடுத்தாள். ரயிலில் சாப்பாட்டுச் செலவுக்கு அந்தப் பணம் மிக உதவியாக இருந்தது. புனா வந்ததும். தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட பங்களா இருந்த முகவரியை விசாரித்துக்கொண்டு நடிக கோஷ்டி அங்கு போய்ச் சேர்ந்தது. அங்கு போனதும் மீண்டும் உணவுப் பிரச்னை. சமைத்துச் சாப்பிட பாத்திரங்கள் இருந்தன. உணவுப் பண்டங்கள் இல்லை. அவற்றை வாங்கப் பணம் இல்லை. கம்பெனி மானேஜர்கள் எப்பொழுது வந்து சேருவர்களோ? அதுவரை வயிறுகளை வாடப்போட முடியுமா? தவித்தார்கள். அந்த மனிதர் மட்டும் தவிக்கவில்லை!

மறுபடியும் அதே பெண்மணியிடம் சென்றார். குழைந்தார். ‘‘இங்கு வந்தது முதல் இன்னும் யாரும் எதுவும் சாப்பிடவில்லை. ஏன், நீகூடத்தான் சாப்பிடாமல் இருந்துவருகிறாய்! உன் கையிலுள்ள பணத்தையெல்லாம் கொடுத்தும் உதவினாய்.  அதற்கு மற்றவர்கள் சார்பாக நன்றி. மீண்டும் உன் உதவி தேவையாக இருக்கிறது. உன்னிடமுள்ள நகைகளைக் கொடுத்து உதவ முடியுமா?’’ என்று பக்குவமாகப் பேசினார்.

அதுவரை பேசாதிருந்த பெண்மணி... ‘‘போனால் போகட்டுமென்று கையிலிருந்த பணத்தையெல்லாம் கொடுத்தேன்.  இப்போது நகைகளையும் கேட்கத் துணிந்துவிட்டீர்களே! அவற்றைக் கேட்க எப்படித்தான் உங்களுக்குத் துணிச்சல் வந்ததோ?’’ என்று அவள் அவரைக் கேட்கவில்லை; சீறினாள்.

அவர் அமைதியோடு பேசத் தொடங்கினார்: ‘‘உன்னிடந்தான் எதையும் கேட்கத் தோன்றுகிறது!’’ அப்படி அவர் சொன்னதும், அந்தப் பெண்மணியின் உள்ளம் குறிர்ந்துவிட்டது. உடனே தன் நகைகளை கழற்றி அவரிடம் கொடுத்தாள். அவர் ஒரு தடவை முகமலர்ச்சியோடு நன்றி கூறிவிட்டு நகைகளோடு போனார். சில நிமிடங்களில் நகைகள் அடமானம் வைத்து உணவுப் பொருள்களை வாங்கி வந்தார்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு கம்பெனி மானேஜர்கள் வந்து சேர்ந்தார்கள். அவர்கள் வந்ததும் அவர், ‘‘நல்ல வேளை, இன்றாவது வந்து சேர்ந்தீர்களே! இன்னும் வரவில்லை என்றால் அந்த மகராசியைத்தான் மிச்சம் மீதியிருக்கும் நகையைப் பிச்சை போடும்படி வேண்டும்கதி ஆகியிருக்கும்!’’ என்றார். மானேஜர்கள் ஒருவிதமான அசட்டுப் பார்வையோடு பேசாமலிருந்தார்கள். ஏற்கெனவே தாம் பொறுப்பேற்றபடி அவர்களிடமிருந்து பணம் வாங்கி நகைகளை மீட்டு, ரொக்கம் தொண்ணூறு ரூபாயையும் சேர்த்து, அந்தப் பெண்மணியிடம் கொடுத்தார்.

அவரது நேர்மையை உள்ளூரப் பாராட்டிக்கொண்டே அவற்றை பெற்றுக்கொண்ட பெண்மணி யார் என்று நினைக்கிறீர்கள் சாட்சாத் டி.ஏ.மதுரம்தான். அந்த மனிதர் சகலகலா வல்லவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனேதான்!
அதற்குப் பிறகு படப்பிடிப்புக்கு நடுவில் கிருஷ்ணனும் மதுரமும் பல தடவை சந்தித்துக் கொண்டார்கள். ஒருவரை ஒருவர் விரும்பினார்கள் என்று சொல்லும்படி அந்தச் சந்திப்புகள் இருந்தன. கிருஷ்ணனுக்கு மதுரத்தின் கலை உள்ளம் மிகப் பிடித்திருந்தது. நகைச்சுவையை நன்றாக மனத்திலே வாங்கிக்கொள்ளும் ஆற்றலும், வசனங்களை வெடுக்கென்று விழு ங்காமல் பேசும் திறமையும் மதுரத்துக்கு இருந்து வருவதைக் கிருஷ்ணன் கண்டார்.
கிருஷ்ணனிடம் குவிந்து கிடக்கும் வேடிக்கைப் பேச்சுக்களையும் அவற்றில் கலந்து காணப்பெறும் கருத்துள்ள நகைச்சுவையையும் கண்டுவிட்டுத் தம் மனத்தைப் பறிகொடுத்தார் மதுரம்.

இருவரும் ஒருவரையொருவர் விரும்புகிறார்கள் என்பதை டைரக்டர் ராஜா சாண்டோ புரிந்துகொண்டார். ஒருநாள் கிருஷ்ணனை அழைத்தார். அவரது அழைப்பில் ஒருவித அதட்டல் மேலோங்கி நின்றது. அதற்காக கிருஷ்ணன் அஞ்சி விடவில்லை. ‘‘என்னை அழைத்தீர்களாமே?’’ என்று கேட்டுக்கொண்டே டைரக்டருக்கு அருகில் கேள்விக் குறிபோல் போய் நின்றார்.

டைரக்டர் ராஜா சாண்டோ வழக்கம்போல், ‘‘டேய் கிருஷ்ணா’’ என்று அழைத்துவிட்டுச் சொன்னார்... ‘‘எனக்குத் தெரியாது என்றா நினைக்கிறாய்...? தெரியும்! தெரியும்! சில நாட்களாகக் கண்காணித்துக்கொண்டுதான் வருகிறேன்.  கடைசிவரை கைவிடமாட்டேன் என்று என்னிடம் உறுதிமொழி சொல்லு. உனக்கு இந்த நிமிடம் முதல் மதுரம் சொந்தம்!’’
கிருஷ்ணன் அந்த உறுதிமொழியை அளித்தார். அன்று அதே டைரக்டரின் முன்னிலையில் அவரது ஆசியோடு கிருஷ்ணனும் மதரமும் காதல் மணம் செய்துகொண்டனர். பொதுவாகப் படப்பிடிப்புகளில் காதலன் காதலிக்குத் திருமணம் நடப்பதுண்டு. அது சினிமா கல்யாணம். ஆனால், புனாவில் படத்துக்காக நடிக்கவந்த இடத்தில் கிருஷ்ணன் - மதுரத்துக்கு உண்மையாகவே திருமணம் நடந்துவிட்டது. அதை மனப்பூர்வமாகச் செய்துவைத்த டைரக்டர் ராஜாசாண்டோ திருமணம் முடிவடைந்ததும் ‘கட்’ என்று டைரக்டர் பாஷையில் சொல்லவில்லை!
- சா.இலாகுபாரதி

0 comments:

Post a Comment

கோப்பு

கோப்பு