24 April 2010

கண்டுகொள்ளுமா தமிழக அரசு...?

Posted by Gunalan Lavanyan 4:10 PM, under | 3 comments




(காட்சியில் வைக்கப்பட்டிருந்த சில புத்தகங்கள்... டிசைன்ஸ் பற்றி ஒரு புத்தகம் இருந்தது. 1800களிலேயே டிசைன்ஸ் பற்றி வெளிவந்திருக்கிற புத்தகம் அது படம் -3,4)

சென்னை கன்னிமரா நூலகத்தில் உலகப் புத்தக தினத்தை (ஏப்ரல் 23) முன்னிட்டு இரண்டு நாட்கள் புத்தகக் கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சியில் 1608-ம் ஆண்டில் வெளியான பைபிள் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல தஞ்சாவூர் வரலாறு, திருவாங்கூர் சமஸ்தான வரலாறு, சென்னை மாகாண கணக்கு வழக்கு நூல், பறவைகள், கடல்வாழ் உயிரினங்கள், செடிகள் பற்றிய அரிய வகைப் புத்தகங்கள் என்று வேறெங்கும் கிடைத்திராதப் புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்தப் புத்தகங்களை யாரும் பயன்படுத்த முடியாது. ஆய்வுக்கும் உபயோகப்படுத்த முடியாது. காரணம், ஸ்கேன் செய்யப்பட்டோ, லேமினேஷன் செய்யப்பட்டோ புத்தகங்கள் வைக்கப்பட்டு இருக்கவில்லை. வெளியான ஆண்டில் எப்படி வெளியிடப்பட்டதோ அப்படியே வைத்திருக்கிறார்கள். ஆனால், நிறைய நூல்கள் அக்கு அக்காக வருகின்றன. அதனால், சில நூல்களை கையால் கூடத் தொட அனுமதிக்க மறுக்கிறார்கள். அவர்களைச் சொல்லி என்ன குற்றம். புத்தகங்கள் அந்த அளவுக்கு சிதிலமடைந்து கிடக்கின்றன. இவற்றைப் பாதுகாக்க அரசு ஏதாவது நடவடிக்கை எடுத்து வருகிறதா என்று தெரியவில்லை. ஆனால், நூலகப் பணியாளர்களிடம் கேட்கும்போது அதற்கான ஏற்பாடுகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஸ்கேன் செய்தால் நூல் மேலும் சிதிலமாகும் என்று அச்சம் தெரிவிக்கிறார்கள். வளர்ந்துவரும் நவீன அறிவியல் உலகில் புத்தகங்களை லேமினேன் செய்தோ, ஸ்கேன் செய்தோ பாதுகாப்பதற்கெல்லாம் வழிவகைகள், வாய்ப்புகள் அதிகம் இருக்கத்தான் செய்கின்றன. அல்லது சில நவீன உத்திகளை வெளிநாடுகளில் இருந்து கடன் வாங்கியும் செய்ய முடியும். அரசாங்கத்தால் முடியாததுதான் என்ன? அதைச் செய்யுமா இந்த அரசு? உங்கள் ஓட்டுகளைப் பதிவு செய்து, இந்தச் செய்தியை பிரபலமாக்கி அரசின் கவனத்தை ஈர்க்க உதவலாமே! இதைவிட வேறென்ன செய்யப்போகிறோம் அடுத்தத் தலைமுறைக்கு... வாக்களியுங்கள் நண்பர்களே... உங்கள் கருத்துரைகளை பின்னூட்டம் இடுங்கள். முடிந்தால் கன்னிமரா செல்லுங்கள். சந்திப்போம்.

23 April 2010

காதல் ரசம்

Posted by Gunalan Lavanyan 7:38 AM, under | No comments

உனக்காக எதையும் செய்வேன் என்று
பொய்சொல்லப் போவதில்லை...
நான் எதையெல்லாம் செய்கிறேனோ
அதையெல்லாம் உனக்காகவே செய்கிறேன்!

அவள் திராட்சை கண்களில் இருந்து
காதல் ரசம் வழிந்துகொண்டு இருக்கிறது...
பீப்பாய் நிறைய பருகிவிட்டேன்.
தீரவில்லை தாகம்!

இருசக்கர வாகனத்தில் போகும்போது
பின்னால் வரும் தேவதைகளை
கண்ணாடியில் பார்ப்பது மாதிரி
நடந்துபோகும்போதும்
தேவதைகளைக் கடந்துபோகையில்
பார்ப்பதற்கு ஒரு சைடு மிர்ரர் கேட்கிறது
மனசு!

நான் உன்னைப் பார்க்கும்போதெல்லாம்
நீ என்னைப் பார்க்காமல் இருப்பது மாதிரி
நீ என்னைப் பார்க்கும்போதெல்லாம்
உன்னைப் பார்க்காமல் இருக்கமுடியவில்லை என்னால்!

ஒற்றைக் காலில் நின்று
மீன் கொத்திப் போகும்
கொக்கைப் போல
ஒற்றைக் கண்ணில் பார்த்து
என் இதயம் கொத்திப் போகும்
கொக்கு அவள்!

ஆடும்போது தோகை விரித்து
மயில் ஆடுவதைப் போல
போகும்போது கூந்தல் விரித்துப் போகும்
அவளும் ஒரு மயில்!

03 April 2010

பேரறிஞர் அண்ணா (1909 - 1969) - தொடர் - 6

Posted by Gunalan Lavanyan 4:02 PM, under | 2 comments

அமெரிக்கா பயணம்
சட்டசபையில் அண்ணாவின் பேச்சுகள் அரியணை ஏறின. அண்ணா தன்னுடைய ஆட்சிக்காலத்தில் பல சாதனைகள் நிகழ்த்தினார். குறிப்பாக சென்னை, மதராஸ் என்று இருந்த பெயர்களை மாற்றினார். தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார். இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ் - ஆங்கிலம் என்று இருமொழிக் கொள்கைகளைக் கொண்டுவந்தார். பெரியாரின் சுயமரியாதை திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கி பெரியாருக்கு சிறப்பு செய்தார். ஓயாமல் உழைத்தார். உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்த உடலுக்கு நோய் வந்துவிட்டது. அண்ணா முதல்வராக இருக்கும்போது அவருக்கு வந்த வயிற்று வலி அவரைப் பாடாகப்படுத்தியது. பரிசோதித்ததில் புற்றுநோய் இருப்பது தெரிந்தது. புற்றால் வந்த தீராத வயிற்று வலியால் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். அங்கு, நியூயார்க் நினைவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புகழ்பெற்ற மருத்துவர் தியோடர் மில்லர் அண்ணாவுக்கு அறுவைசிகிச்சை செய்து முடித்தார்.

‘அண்ணா... அண்ணா...'
சிகிச்சைமுடிந்ததும் மருத்துவர்கள் அண்ணாவுக்கு சில ஆலோசனைகள் சொன்னார்கள். உடலை அதிகம் அலட்டிக்கொள்ளாதீர்கள். மேடை ஏறுவதை கொஞ்ச காலத்துக்கு தவிர்த்துக்கொள்ளுங்கள். முடியாவிட்டால் குறைத்துக் கொள்ளுங்கள். அலைச்சல் கூடாது. அதனால், சுற்றுப்பயணங்கள் வேண்டாம். இப்போது உங்களுக்குத் தேவை - ஓயாத ஓய்வு ஒன்றுதான். இப்படி அவருக்கு என்னவெல்லாமோ சொன்னார்கள். எல்லாவற்றையும் தலையாட்டி கேட்டுக்கொண்ட அண்ணா, இந்தியா வந்தார். விமானநிலைத்தில் ‘ஜேஜே’வென்று கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம். உற்சாகம் குறையாமல் எட்டுத் திசைகளிலும் பார்த்தார். எங்கு திரும்பினாலும் ‘அண்ணா... அண்ணா...’ என்று குரல்கள். யோசித்தார். மக்கள் ஓயவில்லை; தொண்டர்கள் ஓயவில்லை; தம்பிகள் ஓயவில்லை; எனக்கெதற்கு ஓய்வு..? முடிவெடுத்துவிட்டார். அண்ணாவும் ஓயவில்லை. தமிழகத்துக்காக ஓயாமல் உழைத்தார். ஆனால், உடல் சும்மா இல்லை. ஓய்வு... ஓய்வு... என்று கேட்டுக்கொண்டே இருந்தது. அமெரிக்காவில் இருந்து திரும்பிய மூன்றாவது மாதத்தில் அண்ணாவின் உடல் தன்னிச்சையாக முடிவெடுத்து, படுத்துக்கொண்டது.

ஆமாம்! அண்ணா மீண்டும் நோயுற்றார்; அவதிப்பட்டார். அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவர்கள் பரிசோதித்தார்கள். மீண்டும் உணவுக் குழாயையே தாக்கியிருந்தது புற்று. அண்ணா படுத்தபடுக்கையானார்; மக்கள் துயரப்படுக்கையில் வீழ்ந்தனர். அண்ணா உடல் தேர வேண்டும் என்று தமிழகமே பிரார்த்தனை செய்தது. தலைவர்கள் மருத்துவமனைக்கு வந்துவந்து போனார்கள். தமிழகத்தையே பதற்றம் தொற்றிக்கொண்டது. அண்ணாவின் உயிர் இறுதி முடிவெடுவு எடுத்துவிட்டது.

1969 பிப்ரவரி 2, இரவு 12.30 மணிக்கு வானொலி கண்ணீர் வடித்தது. உயிர் காற்றில் கலந்துவிட்டது. தமிழகமே கதறியது. அண்ணா மறைந்தார்.

கின்னஸ் சாதனை
வாழ்நாள் முழுவதும் அரசியல், எழுத்து, நாடகம், பத்திரிகை, சினிமா என்று பல்துறைகளிலும் சாதனை படைத்துக்கொண்டிருந்த அறிஞர் அண்ணா, இறந்தபின்னும் சாதனையாளராகவே இறந்தார். சாதனையென்றால் சாதாரணச் சாதனையல்ல. உலக அளவில் போற்றப்படும் கின்னஸ் ரெக்கார்ட்.
அண்ணாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் சுமார் ஒன்றைரை கோடி (15 மில்லியன்) பேர். எள் போட்டால் எண்ணெய் எடுக்கலாம். இறுதிச் சடங்குகள் சென்னை மெரினா கடற்கரையில் நடந்துகொண்டிருந்தன. வானத்திலிருந்து பார்த்தால், கடற்கரையெங்கும் மணல் இல்லை. வெறும் தலைகளாகவே இருந்தன. மக்கள் கூட்டம் அலையலையாக மோதியது. ஒன்றரைக் கோடி மக்களின் கண்ணீர் அஞ்சலியோடு அண்ணா சென்னை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது கின்னஸ் சாதனையாக பதிவுசெய்யப்பட்டது.

வாழ்க்கைக் குறிப்புகள்
பெயர்:                        அண்ணாதுரை
காலம்:                        1909 - 1969
புனைபெயர்கள்:       சௌமியன், வீரன், பரதன், சமதருமன், ஒற்றன், சம்மட்டி
பிறந்த ஊர்:               சின்ன காஞ்சிபுரம்
பெற்றோர்:                 நடராஜன் - பங்காரு அம்மாள்
வளர்ப்புத்தாய்:         (தொத்தா) இராஜாமணி
உடன்பிறந்தவர்கள்: இருவர் (இரட்டையர்)
மனைவி:                    ராணியம்மாள்
குழந்தைகள்:             இல்லை. நான்கு வளர்ப்புப் பிள்ளைகள்                                                                                                                                            (பரிமளம், இளங்கோவன், கவுதமன், பாபு).
குடும்பத்தொழில்:     நெசவு
படிப்பு:                        இன்டர் மீடியட், பி.ஏ.(ஹானர்ஸ்), எம்.ஏ
தொழில்:        ஆங்கில ஆசிரியர், நாடகம், சினிமா, எழுத்து, மொழிபெயர்ப்பு, பத்திரிகை, அரசியல்
பத்திரிகை பணி:       பாலபாரதி, நவயுகம், விடுதலை, குடியரசு, ஜஸ்டிஸ் (ஆங்கிலம்), திராவிடநாடு, காஞ்சி, மாலைமணி, நம்நாடு, ஹோம் ரூல் (ஆங்கிலம்),
முதல் கட்டுரை:         ‘மகளிர் கோட்டம்’ (தமிழரசு)
முதல் சிறுகதை:        ‘கொக்கரக்கோ’ (ஆனந்த விகடன்)
முதல் குறுநாவல்:      ‘கோமளத்தின் குறும்பு’ (குடியரசு)
முதல் நாவல்:             ‘வீங்கிய உதடு’ (குடியரசு)
முதல்
மேடை நாடகம்:        சந்திரோதயம்
முதல் தேர்தல் களம்: 1936 - சென்.மாநகராட்சி தேர்தல்,  பெத்துநாயக்கன் பேட்டை. (தோல்வி)
முதல் சிறை:               1938 - இந்தி எதிர்ப்புக்காக நான்கு மாதம்
அரசியல் பிரவேசம்: 1934 - நீதிக்கட்சி
சட்டமன்ற
பிரவேசம்:                  1957 - காஞ்சிபுரம் தொகுதியிலிருந்து தேர்வு
அரசியல் பணி:          நீதிக்கட்சி, திராவிடர் கழகம் மற்றும் தி.மு.க-வில்
தி.மு.க. தொடக்கம்: 1949 செப்டம்பர் 17,
பொறுப்பு:                  பொதுச்செயலாளர்
நாடாளுமன்ற
உறுப்பினர்:               1962- (மாநிலங்கள் அவை)
தமிழக முதல்வர்:      1967, மார்ச் 6 (138 இடங்களுடன்
                                    தனிப் பெரும்பான்மை)
சிறப்பு விருது:            1968 ஏப்ரல், ‘சப்-ஃபெலோஷிப்’ (யேல் பல்கலை)
சிறப்புப் பட்டம்:        1968 செப்டம்பர், ‘இலக்கியப் பேரறிஞர்’                                                                         (டாக்டர் பட்டம் - அண்ணாமலைப் பல்கலை.)

........தொடர் நிறைந்தது.