26 March 2010

பேரறிஞர் அண்ணா (1909 - 1969) - தொடர் - 5

Posted by Gunalan Lavanyan 7:12 PM, under | 1 comment

அண்ணாவுக்கு தோல்வி
1962-ம் ஆண்டு வந்தது. தமிழகத்துக்கு பொதுத் தேர்தல். அடுத்த யுத்தம் தொடங்கியது. இந்தமுறை தி.மு.க. 142 இடங்களில் போட்டியிட்டது. பெரியார் தி.மு.க-வுக்கு எதிராகப் பிரசாரம் செய்தார். ஆனால், பிரசார மேடைகளில் அண்ணா பெரியாரை எதிர்த்து ஒரு வார்த்தைகூட பேசவில்லை. தமிழக அரசியல் தலைவர்கள் புருவம் உயர்த்தினர். இந்தத் தேர்தலில், முன்பு தி.மு.க. வெற்றி பெற்றிருந்த இடங்களில் காங்கிரஸ் தீவிர பிரசாரம் செய்தது. விளைவு அந்த இடங்களில் தி.மு.க-வுக்கு தோல்வி. அண்ணாவும் தோல்வியைத் தழுவினார். ஆனால், வேறொரு வகையில் தி.மு.க. உற்சாகம் பெற்றது. புதிதாக, அதேநேரத்தில் முன்பைவிட அதிகமாக 50 இடங்களில் வெற்றி பெற்றது. இருந்தும் அண்ணாவின் தோல்வி தம்பிகளிடத்தில் சற்று அயர்ச்சியை உண்டாக்கித்தான் இருந்தது.

ஆனால், அண்ணா துவளவில்லை. ‘நான் தோற்றதால் தோல்வி என்னை அழுத்திவிடும் என்று நினைக்காதீர்கள். ஓர் அண்ணாதுரைக்கு பதிலாக ஐம்பது அண்ணாதுரைகளை அனுப்பிவைக்கிறேன்’ என்று தம்பிகளை உற்சாகப் படுத்தினார். இருந்தும் தொண்டர்கள் ஓயவில்லை, அண்ணாவை பாராளு மன்றத்துக்கு அனுப்பிவைத்தனர். அண்ணா எம்.பி. ஆனார். பாராளுமன்றத்தில் திராவிடநாடு கோரிக்கையை அவர் வலியுறுத்திப் பேசினார்.

இந்தச் சூழலில் இந்தியா ஒரு புதிய சோதனையை சந்தித்தது. 1962 - இந்தியாவின் எல்லைப் பகுதிகளை சீனா ஆக்கிரமிக்கத் தொடங்கியது. இந்தப் பிரச்னை ஓயும்வரை திராவிடநாடு கொள்கையை கைவிடுவதாக அண்ணா அறிவித்தார். அடுத்தடுத்த ஆண்டுகளில் தி.மு.க-வின் வளர்ச்சி அபாரம்! மாநகராட்சி மற்றும் நகராட்சித் தேர்தல்களில் பெரும் வெற்றி!


முதல்வரானார் அண்ணா
அடுத்த திட்டத்துக்கு அண்ணா கட்சியை தயார்படுத்தினார். 1967-ல் தமிழகத்துக்கு பொதுத் தேர்தல். அதற்கு ஓர் ஆண்டு முன்பாகவே தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டார். புதிதாக வியூகம் அமைத்தார். தமிழகத்தில் பத்துக்கும் மேற்பட்ட எதிர்கட்சிகள் இருந்தன. அனைத்து கட்சிகளையும் ஒன்று திரட்டினார். காங்கிரஸுக்கு எதிராக வலுவான கூட்டணி தயார்! தேர்தலுக்காக தமிழகத்தில் அமைக்கப்பட்ட முதல் கூட்டணி இதுவே. வெற்றிக்கு இதுமட்டும் போதும் என்று அவர் நினைக்கவில்லை. அதனால், மற்றுமொரு திட்டத்தையும் செயல்படுத்தினார். தமிழகம் முழுவதிலும் தி.மு.க. வேட்பாளர்களையே நிறுத்தாமல், தொகுதிப்பங்கீடு செய்தார். அனைத்து எதிர்க்கட்சிகளும் காங்கிரஸை எதிர்த்து களம் கண்டன. ஆனால், காங்கிரஸ் இந்தச் செயல்பாடுகளை மதிக்கவில்லை. அண்ணாவின் திட்டம் பலிக்காது என்று நினைத்தது.

ஆனால், காங்கிரஸ் நினைப்பில் விழுந்தது மண்! உணவுத் தட்டுப்பாடும், விலைவாசி ஏற்றமும் இருந்துவந்த நேரம் அது. தேர்தல் பிரசாரத்தில் அண்ணா மக்களுக்கு ஒரு வாக்குறுதியை அளித்தார். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ரூபாய்க்கு மூன்று படி அரிசி வழங்கப்படும் என்று அறிவித்தார். ஏற்கெனவே மக்களின் அமோக ஆதரவைக் குவித்துவந்த தி.மு.க-வுக்கு இந்த வாக்குறுதி கைகொடுத்தது. தேர்தலில் காங்கிரஸ் வெறும் 49 இடங்களை மட்டுமே பிடித்தது. தி.மு.க. மொத்தம் 138 இடங்களில் வெற்றி பெற்று வாகை சூடியது. அதன் கூட்டணிக் கட்சிகள் 40 இடங்களை வென்றன. பெரும்பான்மையுடன் தி.மு.க ஆட்சி அமைத்தது. அண்ணா தமிழக முதல்வரானார். கழக உடன் பிறப்புகளான அவரது தம்பிகள் இரா.நெடுஞ்செழியன், மு.கருணாநிதி, க.அன்பழகன் போன்றோர் முக்கிய அமைச்சர் பொறுப்புகளை ஏற்றனர். இந்த வெற்றில் எம்.ஜி.ஆரின் பங்கு குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில் அண்ணாவின் தளபதியாக இருந்த மு.கருணாநிதி தமிழகத்தின் அடுத்த முதல்வராகும் தகுதிகளோடு வளர்ந்து கொண்டிருந்தார்.

நாடகமும் சினிமாவும்
அண்ணாவின் வாழ்க்கையிலும், அவரது வளர்ச்சியிலும் நாடக - சினிமா உலகுக்கு முக்கியப் பங்குண்டு. அவரது சமூக நாடகங்களும், திரைப்படங்களுக்கு அவர் எழுதிய கதை-வசனங்களும் மக்கள் மத்தியில் ஓர் எழுச்சியை ஏற்படுத்தின; சமூகத்தில் அதிர்வை உண்டாக்கின. அரசியல் வாழ்க்கையில் ஈடுபட்டுவந்த அதேவேளையில் கலைத்துறையிலும் அண்ணாவின் பங்களிப்பு கோலோச்சிக்கொண்டு இருந்தது. ‘தணிக்கை ஏதும் செய்யாமல் இருந்தால், ஒரே திரைப்படத்தின் மூலம் ஆட்சியைப் பிடித்துவிடுவேன்’ என்று ஒருமுறை அண்ணா கூறினார். அதனால், ஒரே படத்தின் மூலமாக, அரசியலில் அவரால் திருப்பத்தை ஏற்படுத்த முடியவில்லை என்பதை உணரமுடியும். ஆனால், தி.மு.க.வின் வளர்ச்சிக்கும், தேர்தலில் தி.மு.க. மகத்தான வெற்றி பெற்று, அண்ணா முதலமைச்சராக பொறுப்பேற்றதற்கும் நாடகமும் சினிமாவும் திருப்புமுனையாக அமைந்தன.

அண்ணா, நாற்பதுக்கும் மேற்பட்ட ஓரங்க நாடகங்களை எழுதினார். ‘குடியரசு’ பத்திரிகையில் வெளிவந்த ‘காங்கிரஸ் வாலா’ என்ற நாடகம்தான் அண்ணா எழுதிய முதல் ஓரங்க நாடகம். இதைத் தவிர எட்டு பெருநாடகங்களை அவர் எழுதியிருக்கிறார். இவற்றில் சில திரைப்படங்களாகவும் பின்னர் எடுக்கப்பட்டன.
சந்திரோதயம், சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் அல்லது சந்திரமோகன், வேலைக்காரி, ஓர் இரவு, நல்லதம்பி, காதல் ஜோதி, சொர்க்கவாசல், பாவையின் பயணம் போன்றவை அண்ணாவின் எட்டு பெரிய நாடகங்கள். இதில் ‘ஓர் இரவு’ நாடகம் ஒரே இரவில் எழுதப்பட்டு மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற நாடகம். அதேபோல, நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமியால் அரங்கேற்றப்பட்ட ‘வேலைக்காரி’ நாடகம், நூற்றுக்கணக்கான நாட்கள் நடத்தப்பட்டு மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றது. ‘நல்லதம்பி’ - சிரிப்பூட்டி சிந்திக்கவைக்கும் நாடகம். பின்னர், இது திரைப்படமாக வந்தது. படத்தில் என்.எஸ்.கிருஷ்ணன் நல்லதம்பியாக நடித்து மக்களைச் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தார். ‘ரங்கோன் ராதா’ என்ற திரைப்படம் அண்ணாவின் நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம். கலைஞர் கருணாநிதியின் திரைக்கதையும் வசனமும் அண்ணாவின் இந்தக் கதைக்கு மெருகூட்டின.

அண்ணா திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன்புவரை படங்கள் முழுக்க வடமொழிச் சொற்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. அதனால், சில படங்கள் மக்களுக்கு புரியாமல்கூட போனதுண்டு. இந்த நிலையை அண்ணாவின் தமிழும், வசனமும் மாற்றிக்காட்டியது என்று சொல்லலாம். அரசியல் தவிர, தமிழ் திரைப்படத்துக்கும் திருப்புமுனையைத் தந்தார் பேரறிஞர் அண்ணா.
(தொடரும்...)

24 March 2010

பேரறிஞர் அண்ணா (1909 - 1969) - தொடர் - 4

Posted by Gunalan Lavanyan 7:02 AM, under | No comments

தி.மு.க. உதயம்
என்ன சொன்னாலும் பெரியார் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. அவரின் முடிவு இறுதிசெய்யப்பட்ட முடிவு. அண்ணாவுக்கு பெரியாரின் வாரிசு அரசியல் பிடிக்கவில்லை. அதனால், பெரியாரின் நிலைப்பாட்டையும் தன்னுடைய நிலைப்பாட்டையும் விளக்கி திராவிடநாடு பத்திரிகையில் அண்ணா எழுதினார். அண்ணாவின் நிலைக்கு உடன்பட்ட தம்பிகள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். ‘தம்பி உடையான் படைக்கு அஞ்சான்’. அண்ணா தீர்க்கமாக முடிவெடுத்தார். தன் தம்பிகளோடு திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறினார். வேறொரு பெயரில் தி.க-வுக்கு மாற்றாக இன்னொரு இயக்கத்தை தொடங்குவது என்று முடிவு செய்தார். தொடங்கினார். அந்த இயக்கம் 1949 செப்டம்பர் 17 அன்று உதயமானது. பெயர்: தி.மு.க - திராவிடர் முன்னேற்றக் கழகம்.

தி.க-வில் பெரியார் மட்டும்தான் எல்லா பொறுப்புகளையும் வகித்தார். யாருக்கும் பொறுப்புகளை பகிர்ந்தளிக்க அவருக்கு விருப்பமில்லை. ஆனால், தி.மு.க-வில் எல்லோருக்கும் பொறுப்பு. எல்லோரும் கட்சியின் தூண்கள் என்று அண்ணா நினைத்தார். அதனால், அனைவருக்கும் பொறுப்புகளை பகிர்ந்து அளித்தார். பொதுச் செயலாளராக அண்ணா செயல்பட்டார். கழகத்துக்கு கொடியும் தேர்வு செய்யப்பட்டது. கறுப்பு - சிவப்பு நிறத்தில் தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் கழகக் கொடி பறக்கத் தொடங்கியது. அப்போது தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி பொறுப்பில் இருந்தது. காங்கிரஸின் திட்டங்களும், செயல்பாடுகளும் அண்ணாவுக்கு துளியும் பிடிக்கவில்லை. அதனால், காங்கிரஸ் பேரியக்கத்துக்கு எதிராக கழகத் தொண்டர்களை ஒன்று திரட்ட முடிவு செய்தார். தமிழகமெங்கும் தி.மு.க-வுக்கு கிளைகள் தொடங்கப்பட்டன. கூட்டங்கள், மாநாடுகள் நடந்தன. தமிழகமே தி.மு.க-வின் பக்கம் திரும்பியது.

மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி நடத்துகிற காங்கிரஸின் மக்கள் விரோதப் போக்குகளை தி.மு.க. வன்மையாகக் கண்டித்தது. பேரணிகள், கூட்டங்கள், துண்டறிக்கைகள் வழியாக அண்ணா மக்களைச் சந்தித்தார். அதேநேரத்தில், காங்கிரஸ் எதிர்ப்பு மக்களுக்கு பாதகத்தை விளைவித்துவிடக் கூடாது என்பதிலும் அவர் கண்ணாக இருந்தார்: ‘காங்கிரஸ் எதிர்ப்பு என்ற பெயரில் பொது சொத்துகளை பாழ்படுத்தக்கூடாது. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு தேவை’ என்று, தன் தம்பிகளுக்கு அண்ணா அறிவுரை வழங்கினார். இந்த நிலையில் 1952-ல் பாராளுமன்றத்துக்கும் சென்னை மாகாணத்துக்கும் தேர்தல் வந்தது. அண்ணாவுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருந்தது. ஆனாலும், கட்சி ஆரம்பித்து அப்போதுதான் மூன்று ஆண்டுகள். அதனால், ஆழம் தெரியாமல் காலை விட அவர் விரும்பவில்லை. அதேநேரத்தில், அன்றைய அரசியல் சட்டம் திராவிடர்களின் கருத்துகளுக்கு மதிப்பு அளிக்கவில்லை. ஆகவே, அத்தகைய ஒரு சட்டத்தின் கீழ் நடைபெறும் தேர்தலை புறக்கணிப்பதாக அண்ணா அறிவித்தார். எதிர்பார்த்தது போலவே காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடித்தது.

இதைத் தொடர்ந்து, அடுத்த தேர்தலுக்குள் தி.மு.க-வை பலப்படுத்தவேண்டும் என்று அண்ணா தீவிர முயற்சியில் இறங்கினார். அதன் முதல்கட்டமாக 1956-ல் தி.மு.க-வின் மாநில மாநாடு திருச்சியில் கூடியது. மாநாட்டுக்கு வந்தவர்களை இரண்டு பெட்டிகள் வரவேற்றன. ஒன்று, சிவப்பு. மற்றொன்று கறுப்பு. தி.மு.க. தேர்தலில் போட்டியிடலாம் என்று விரும்பம் கொண்டவர்கள் தங்களுடைய வாக்குகளை சிவப்புப் பெட்டியில் போடவேண்டும். போட்டியிடத் தேவையில்லை என்று கருதுபவர்களின் வாக்கு கறுப்பு பெட்டியில் போய்ச் சேரவேண்டும். சிவப்புப் பெட்டியில் வாக்குகள் அதிகரித்தன. தி.மு.க. தேர்தலில் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டது.

தேர்தலில்  தி.மு.க.
இதைத்தொடர்ந்து, 1957-ல் காங்கிரஸை எதிர்த்து தி.மு.கழகம் களம் கண்டது. அண்ணா காஞ்சிபுரத்தில் போட்டியிட்டார். தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் 112 வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். தேர்தலில் தி.மு.க.-வுக்கு உதயசூரியன் சின்னம் ஒதுக்கப்பட்டது. முதல் தேர்தல் முடிவிலேயே 15 இடங்களை தி.மு.க. பிடித்தது. காஞ்சியில் அண்ணாவுக்கே வெற்றி! மீண்டும் காங்கிரஸ் கட்சியே தமிழகத்தில் ஆட்சி அமைத்தபோதிலும், முழுமையான வெற்றி காங்கிரஸுக்கு கிடைக்காமல் போனது, அந்த இயக்கத்தில் ஓர் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. கட்சி தொடங்கிய எட்டு ஆண்டுகளில் தி.மு.க. தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சியாக உருவெடுத்தது.


சட்டமன்றத்தில் மக்கள் பிரச்னைகளுக்கு முன்னுரிமை அளித்து அண்ணா பேசினார். அவருடைய பேச்சில் ஆழ்ந்த கருத்துகள் இருந்தன. எதிர்கட்சிக்காரர்களும் அவருடைய பேச்சுக்கு மயங்கினர். சிந்தனையை தூண்டக்கூடிய வகையில் அண்ணா பேசினார்.

தி.மு.க. தமிழகமெங்கும் வெற்றிக்கொடி கட்டியிருந்த நேரத்தில், 1959 - சென்னை மாநகராட்சிக்கு தேர்தல் வந்தது. தி.மு.க. பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றது. மேயர் பதவியும் தி.மு.க-வுக்கே! இந்த வெற்றி தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தது. தம்பிகள் கட்சியின் வளர்ச்சிக்கு அண்ணாவோடு சேர்ந்து அதிகமாக உழைத்தார்கள்.

20 March 2010

பேரறிஞர் அண்ணா (1909 - 1969) - தொடர் - 3

Posted by Gunalan Lavanyan 2:27 AM, under | 2 comments

திராவிடர் கழகம் உதயம்
சேலத்தில் நீதிக்கட்சி மாநாடு கூடியது. மாநாட்டில் அண்ணா சில தீர்மானங்களைக் கொண்டுவந்தார்: பிரிட்டிஷ் ஆட்சியில் வழங்கப்பட்ட சர், ராவ்பகதூர், திவான் பகதூர், ராவ் சாகிப் போன்ற பட்டங்களைப் பெற்றவர்கள் அவற்றை ஒதுக்கித்தள்ள வேண்டும். இனி அத்தகைய பட்டங்களை யாரும் பெறக்கூடாது. ‘நீதிக் கட்சி’ என்ற பெயருக்கு பதிலாக ‘திராவிடர் கழகம்’ என்று பெயர் மாற்ற வேண்டும் - இப்படி பல தீர்மானங்களை அண்ணா முன்மொழிந்தார். இந்தத் தீர்மானங்களுக்கு ‘அண்ணா தீர்மானங்கள்’ என்று பெரியார் பெயர் வைத்தார்.

பட்டம் பதவிகளைத் துறக்க விரும்பாதவர்கள் அண்ணாவின் தீர்மானங்களுக்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்புகளையெல்லாம் மீறி பெரியாரின் ஆதரவோடு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நீதிக்கட்சி என்ற பெயர் மறைந்தது. திராவிடர் கழகம் மலர்ந்தது.

மாநாடு முடிந்தபிறகு, திராவிடர் கழகத்துக்கு மாவட்டங்கள் தோறும் கிளைகள் தொடங்கப்பட்டன. தி.க-வின் செயல்பாடுகளை மக்கள் கவனிக்கத் தொடங்கினர். திராவிடர் கழகம் செல்வாக்குப் பெற்ற இயக்கமாக வளர்ந்தது. இந்த வளர்ச்சிக்காக அண்ணா அயராது உழைத்தார்.

பெரியார் – அண்ணா அறிக்கைப் போர்
இந்த சந்தர்ப்பத்தில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளடக்கிய திராவிடநாடு கோரிக்கையை திராவிடர் கழகத்தினர் முன்வைத்தனர். தி.க.வின் இந்தக் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்கவில்லை. 1947, இந்தியாவுக்கு சுதந்திரம் தருவதென்று முடிவு செய்யப்பட்டிருந்த நேரம். 1947 ஆகஸ்ட் 6 ‘விடுதலை’ இதழில் பெரியார் ஓர் அதிர்ச்சிகரமான அறிக்கை விடுத்தார்: ‘திராவிட நாடு கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. அதனால், சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ம் தேதியை துக்க தினமாக கடைப்பிடிக்க வேண்டும்’ என்பதுதான் பெரியாரின் அந்த அறிக்கை. பெரியாரின் இந்த முடிவில் அண்ணாவுக்கு உடன்பாடு இல்லை. அதனால், பெரியார் அறிக்கைக்கு தன்னுடைய திராவிடநாடு பத்திரிகையில் அண்ணா எதிர் அறிக்கை விட்டார்: ‘ஆகஸ்ட் 15-ம் தேதி பிரிட்டிஷ் ஆட்சி ஒழியும் நாள். உலகமே பேசக்கூடிய நாள். வரலாற்றில் இடம்பெறும் நாள். ஆகவே, அந்தத் திருநாளைக் கொண்டாடவேண்டும்’ என்று அண்ணா அறிக்கையில் கூறினார்.

சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்த அண்ணா எதிர்ப்பாளர்கள், அண்ணாவைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லி பெரியாரை திசை திருப்பினர். கழகத்தில் அண்ணா எதிர்ப்புக் குரல்கள் அதிகரித்தன. இந்த எதிர்ப்பை அண்ணா எதிர்பார்த்தார். எதிர்ப்பு வரும் என்பதற்காக, அகில இந்தியாவே கொண்டாடக்கூடிய திருநாளை துக்க நாளாக ஏற்றுக்கொள்ளமுடியுமா? அண்ணாவின் அறிக்கை பெரியாரை கோபம் கொள்ளச் செய்தது. இதன்பிறகு அண்ணாவின் கழகப் பணிகள் சற்று ஓயத்தொடங்கின. அதனால், தி.க-வில் உற்சாகம் குறைந்தது.

இந்தநிலையில் அண்ணாவை சமாதானப்படுத்தும் விதமாக 1948 அக்டோபர் 23 அன்று ஈரோட்டில் சிறப்பு மாநாட்டை பெரியார் கூட்டினார். மாநாட்டில் பேசிய பெரியார், ‘நான் பொதுத்தொண்டில் ஈடுபட்டு நாற்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. எனக்கோ வயது எழுபதுக்கும் மேல். எத்தனை நாட்களுக்குத்தான் என்னால் உழைக்க முடியும்? எனக்குப் பின் அண்ணாதுரையால்தான் கழகத்தை சரியான பாதையில் கொண்டு செல்ல முடியும். எனவே பெட்டிச் சாவியை அண்ணாவிடம் கொடுத்துவிடுகிறேன். இதன்மூலம் தந்தையாகிய யான் என் கடமையைச் செய்துவிட்டேன். இனி தனயனாகிய அண்ணா தன் கடமையைச் செய்ய வேண்டும்’ என்று பேசினார். பெரியார் - அண்ணா கருத்து வேறுபாடு தணிந்தது என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால், திடீரென்று நடந்த ஒரு சம்பவம் பெரியார் - அண்ணாவுக்கு இடையில் விரிசலை அதிகப்படுத்தியது.

1949-ம் ஆண்டு பெரியார், மணியம்மையை இரண்டாவது திருமணம் செய்தார். ‘திராவிடர் கழகத்தின் இளம் தலைவர்கள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை; அதனால்தான், கழகத்தையும், கழகத்தின் சொத்துகளையும் பாதுகாக்க இந்த வயதில் இன்னொரு திருமணம் செய்துகொள்கிறேன்’ என்று குறிப்பிட்டார். முன்னதாக அண்ணாவால் மட்டும்தான் கழகத்தைச் சிறப்பாக வழிநடத்த முடியும் என்று கூறியிருந்த பெரியார், இப்போது இப்படிக் கூறுவது கழகத் தொண்டர்கள் மத்தியிலும், அண்ணா ஆதரவாளர்கள் மத்தியிலும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. பெரியார் எதிர்ப்புக் குரல்கள் ஒலித்தன. அவர்களை அண்ணா அமைதிப்படுத்தினார். ‘ஆவேசமும் ஆத்திரமும் கொண்டால், மக்கள் மத்தியில் கழகத்துக்குத்தான் அவப்பெயர். அதனால், பொறுத்திருங்கள் முடிவெடுப்போம்’ என்று ஆறுதல்படுத்தினார்.

16 March 2010

பேரறிஞர் அண்ணா (1909 - 1969) - தொடர் - 2

Posted by Gunalan Lavanyan 10:10 PM, under | No comments

தொடர்கிறது... (முதல் அத்தியாயம் படிக்கா தவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்து படிக்கலாம்:                                                                                                             http://doordo.blogspot.com/2010/03/1909-2009.html) 1935-ம் ஆண்டு தமிழக வரலாற்றில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. இந்த ஆண்டு திருப்பூரில் செங்குந்தர் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில்தான் மிகப்பெரிய சந்திப்பு ஒன்று நிகழ்ந்தது. மாநாட்டுக்கு வந்திருந்த அண்ணாவும் பெரியாரும் நேருக்கு நேர் சந்தித்தார்கள். முன்னதாக மாநாட்டில் அண்ணா பேசினார். அவருடைய வசீகரமான பேச்சு பெரியாரை ஈர்த்தது. அண்ணாவை எப்படியாவது சுயமரியாதை இயக்கத்துக்குள் கொண்டுவர வேண்டும் என்று பெரியார் விரும்பினார். பெரியாரின் விருப்பம் நிறைவேறியது. அண்ணா சுயமரியாதை இயக்கத்தில் இணைந்தார். அண்ணாவின் பேச்சும் எழுத்தும் - விடுதலை, குடியரசு பத்திரிகைகளின் துணையாசிரியர் பொறுப்பை அவருக்குப் பெற்றுத் தந்தது.

‘விடுதலை’யில் அவர் எழுதிய தலையங்கங்கள், கட்டுரைகள் பரபரப்பாகப் பேசப்பட்டன. ‘ரிப்பன் கட்டடத்துச் சீமான்கள்’ என்ற தலையங்கத்தை பெரியார் படித்தார். அண்ணாவின் எழுத்து, மேலும் பெரியாரை ஈர்த்தது. படித்த பெரியார் தரை தளத்தில் இருந்தார். எழுதிய அண்ணா மூன்றாவது மாடியில். மாடிக்குச் செல்லும் பாதையோ குறுகலானது. அந்த படிகளில் ஏறி மாடிக்குச் செல்வது பெரியாருக்கு சற்று சிரமம்தான். ஆனால், எதையும் பொருட்படுத்தாமல், ‘அண்ணா... அண்ணா...’ என்று அழைத்தவாறு மாடி ஏறிவிட்டார்.

பெரியார் வந்தவுடன் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தார் அண்ணா. ‘இவ்வளவு கஷ்டப்பட்டு நீங்கள் ஏன் வரவேண்டும். சொல்லி அனுப்பியிருந்தால் நானே வந்திருப்பேனே’ என்று சொல்லிக்கொண்டிருந்தார் அண்ணா. பெரியார் அதைப் பொருட்படுத்தாமல், ‘அண்ணாதுரை, நீங்கள் எழுதிய ரிப்பன் கட்டடத்துச் சீமான்கள், பிரமாதம்... பிரமாதம்...’ என்று பாராட்டினார். பெரியாருக்கு யாரையும் பாராட்டும் வழக்கம் இல்லை. ஆனால், அண்ணாவின் தலையங்கம் அவரை மூன்றாவது மாடியே ஏறவைத்துவிட்டது. அண்ணாவின் எழுத்தாற்றல் பெரியாரையே மாற்றியது.

இந்தி எதிர்ப்பு
இந்தச் சூழலில் 1937-ம் ஆண்டு சென்னை மாகாணத்துக்கு தேர்தல் வந்தது. காங்கிரஸ் அமோக வெற்றி. ராஜாஜி மாகாண முதலமைச்சர் ஆனார். 1938-ம் ஆண்டு தமிழக வரலாற்றில் போராட்டங்கள் நிறைந்த ஆண்டாக இருந்தது. இந்த ஆண்டு ராஜாஜி இந்தி மொழியை கட்டாயப் பாடமாகக் கொண்டுவந்தார். 6, 7, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தி கட்டாயம் ஆக்கப்பட்டது. இந்தி கட்டாயத்தை தமிழ்நாடே எதிர்த்து போராட்டம் நடத்தியது. இந்தப் போராட்டத்தில் பெரியார், அண்ணா, மறைமலையடிகள், சோமசுந்தர பாரதியார், மு.சி.பூரணலிங்கம் பிள்ளை, தெ.பொ.வேதாசலம், அழகிரிசாமி, கி.ஆ.பெ.விசுவநாதம், ஈழத்து சிவானந்த அடிகள் போன்றோர் தீவிரம் காட்டினர்.

‘எப்பக்கம் வந்து புகுந்துவிடும் இந்தி, எத்தனை பட்டாளம் கொண்டு வரும்’ என்று அண்ணா முழங்கினார். ‘இப்படை தோற்கின், எப்படை வெல்லும்’ என்று தமிழர்களை உணர்ச்சி வெள்ளத்தில் மிதக்க வைத்தார். பள்ளிக்கூடங்கள் முன் மறியல்கள் நடந்தன. இந்தி எதிர்ப்பைத் தூண்டிவிட்டதாகக் கூறி பெரியார், அண்ணா உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். பெரியாருக்கு 18 மாதம் கடுங்காவல் தண்டனை. அண்ணாவுக்கு நான்கு மாதம் சிறை தண்டனை. இந்தி திணிப்புக்கு எதிராக எழுதிய பத்திரிகைகள் மீது வழக்கு தொடுக்கப்பட்டன. பத்திரிகை ஆசிரியர்கள் சிறை வைக்கப்பட்டனர். இந்தி எதிர்ப்பு கூட்டங்களுக்கு தடை! ‘இந்தி எதிர்ப்பு இயக்கத்தை அடக்க காங்கிரஸ் அரசு மேற்கொண்ட முயற்சிகளால் காங்கிரஸ் தன் புனிதத்தை இழந்துவிட்டது’ என்று மகாகவி ரவீந்திரநாத் தாகூர், ஜின்னா, அயத்கான் போன்றோர் குற்றம் சாட்டினர்.

ராஜாஜி பின்வாங்கினார். இந்தி எல்லாப் பள்ளிகளிலும் இல்லை. சில பள்ளிகளில் மட்டும்தான் என்று அறிவித்தார். அப்படியும் போராட்டம் ஓயவில்லை. 1939-ல் இரண்டாம் உலகப் போர் மூண்டது. பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவின் அனுமதி இல்லாமலேயே இந்தியாவையும் போரில் ஈடுபடுத்தியது. இதைக் கண்டித்து மாகாண காங்கிரஸ் அரசுகள் பதவி விலகின. ராஜாஜி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். ஒருவழியாக இந்தி கட்டாயம் கதை முடிந்தது.

‘சாமி’யார்? அண்ணா
1940-ம் ஆண்டு வட இந்தியா முழுவதும் பெரியார் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அவரோடு அண்ணாவும் சென்றார். இந்தப் பயணத்தின்போது வெண்தாடியுடன் கங்கை நதிக்கரையில் பெரியார் நடந்துச் செல்வார். அவரோடு அண்ணாவும் நடப்பார். பெரியாரின் தாடியையும் அவர் அணிந்திருந்த மஞ்சள் நிற சால்வையையும் பார்த்த பலர், ‘பெரிய சாமியாராக இருக்கிறார்’ என்று பெரியார் காலில் விழுந்து கும்பிட்டார்கள். ‘சாமியாருடன் வருகின்றவர் அவருக்குச் சீடராக இருப்பார். அதனால், அவருக்கும் சக்தி இருக்கும்’ என்று நினைத்து அண்ணாவின் காலிலும் விழுந்து கும்பிட்டார்கள். இந்தச் சம்பவம் பெரியாருக்கும் அண்ணாவுக்கும் மக்கள் மேல் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

'தேவதாசி முறை' ஒழிப்பில் நீதிக் கட்சி பல சாதனைகள் புரிந்திருந்தது. ஆனால், உட்கட்சி பூசலால் கட்சி வீழ்ந்துகொண்டு இருந்தது. பொப்பிலி அரசர் நீதிக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலகினார். பி.டி.ராஜன், குமாரராஜா முத்தையா செட்டியார் என்று யாரும் தலைமைப் பொறுப்பை ஏற்க முன்வரவில்லை. இந்த நிலையில் தமிழகத்தையே கலக்கிக் கொண்டிருந்த பெரியாரால்தான் நீதிக் கட்சியை கட்டிக்காக்க முடியும் என்று கட்சியின் செயற்குழு தீர்மானித்தது.


அதுவரை நீதிக்கட்சியின் ஆதரவாளராக இருந்த பெரியார், 1940 ஆகஸ்ட் 2-ல் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். நீதிக்கட்சி புத்துயிர் பெறவேண்டுமானால் கட்சியின் பெயரை மாற்றவேண்டும் என்று முடிவு செய்தார். பெரியாரின் இந்த முடிவுக்கு கட்சியின் மூத்த தலைவர்கள் சம்மதிக்கவில்லை. அவரை தலைமைப் பதவியிலிருந்து வீழ்த்த நினைத்தனர். ‘பெரியார் சர்வாதிகாரம் செய்கிறார்’ என்று சொல்லி, பொதுச்செயலாளராக இருந்த கி.ஆ.பெ.விசுவநாதன், பதவியை ராஜினாமா செய்தார். கட்சியின் செயற்குழு அண்ணாவை பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுத்தது. (தொடரும்...)

09 March 2010

வன்கொடுமைக்கு எதிராக ஓர் அறிக்கை!

Posted by Gunalan Lavanyan 10:59 PM, under | No comments

சென்னை கவின் கலைக் கல்லூரியின் முதல்வராக ஓவியர் சந்ரு இருந்தவரைக்கும் மாணவர்கள் கல்லூரி முதல்வரை எளிதாக அனுக முடிந்தது. மாணவர்களி்ன் தேவைகள் சரியாக உணரப்பட்டன; புரிந்துகொள்ளப்பட்டன. அவர்களின் வேண்டுகோள்கள் அங்கீகரிக்கப்பட்டன; நிறைவேற்றப்பட்டு வந்தன.  ஆனால், தற்போது புதிதாக தற்காலிக முதல்வராகப் பதவியேற்று இருப்பவரால் மாணவர்கள் மத்தியில் சர்ச்சைகளும், அமைதியின்மையும், சாதிய துவேஷமும் நிகழ்ந்து வருவதாகத் தெரிகிறது. அதற்குத் தூண்டுகோலாகவும், அடிகோலாகவும் கல்லூரியின் முதல்வரே இருந்து வருகிறார் என்றும் தெரிகிறது. இதுகுறித்து கவின்கலைக் கல்லூரியின் இந்நாள் – முன்னாள் மாணவர்கள் வெளியிட்டுள்ள துண்டு அறிக்கை: (ஓர் பார்வையாளனாகவும், மாணவச் சமுதாயம் சாதிப்படிநிலைகளில் சிக்கிக்கொள்ளக் கூடாது என்ற அக்கறைக் கொண்ட ஒரு சமூகவாதியாகவும் மட்டுமே இருந்து இந்த அறிக்கையை முழுமையாக  உங்களுக்கு அளிக்கிறேன். உங்கள் கருத்துகளை பின்னூட்டம் இட்டு, மாணவர் சமுதாயத்துக்கு துணை நில்லுங்கள்… சாதிய அடக்குமுறையை எதிர்த்து குரல் கொடுங்கள்…)

சென்னை அரசு கவின்கலைக் கல்லூரியில் மாணவர் மீது
நிகழ்ந்துள்ள மனித உரிமை மீறல், வன்கொடுமை குறித்து
உங்கள் கவனத்திற்கு...

தமிழக கலைப்பாரம்பரியத்தில் தனக்கென ஒரு தனித்த அடையாளம் கொண்டது சென்னை அரசு கவின்கலைக்கல்லூரி. இக்கல்லூரியில் மாசு மருவற்ற பல கலை ஆளுமைகள் முதல்வர்களாகவும் முதல்வர் பொறுப்பில் இருந்தும் ஓய்வு பெற்றிருக்கிறார்கள்.

தற்சமயம் தற்காலிக முதல்வராகப் பொறுப்பில் இருக்கும் ‘அடியாள்’ என்றும் ஜாதி வெறி செயல்பாடுகளுக்குப் பலசமயம் துறை ரீதியான தண்டனை அனுபவித்தவர் என்று பெயரெடுத்தவர் திரு.மனோகரன். ஓவியக் கல்லூரியில் பயிலும் சசிக்குமார் என்கின்ற முதுகலை முதல் ஆண்டு மாணவர் சுய ஆர்வத்தால் தமிழின் பெருமை மிகு அய்யன் திருவள்ளுவரின் 1330 திருக்குறளையும் சுடுமண் சிற்பமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு முடித்துள்ளார். மேலும், இத்திருக்குறள் சுடுமண் சிற்பங்களை செம்மொழி மாநாட்டு நேரத்தில் காட்சிப்படுத்தவும் திட்டமிட்டு இருந்தார். எழுதி முடிக்கப்பட்ட அனைத்து சிற்ப குறள் பலகைகளையும் சுடும் முயற்சிக்கு கல்லூரியில் ‘சூளை’ அமைத்துத்தர கல்லூரி முதல்வரை அணுகி இருக்கிறார். மாணவர்களுக்கு அவசியமான ‘சுடுமண் சூளை’ கல்லூரியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தி ரு.மனோகரன் அவர்கள் ‘சூளை’ அமைத்துத் தருவதாகவும் சிற்பம் செய்ய களிமண் வாங்கித் தருகிறேன் என்று கூறி ஏமாற்றியதால் மன உளைச்சலுக்கு ஆளான சசிக்குமார் என்ற மாணவர் 26.2.2010 மாலை மனோகர் அவர்களின் வாகனத்தை சேதப்படுத்தியதாகத் தெரிகிறது.

இச்சூழலில் மாணவர்களின் உரிமையை கேட்கும் கமல்ஹாசன், எஸ்வேந்திரன் என்ற இரண்டு மாணவர்களை (சம்பவம் நடந்த அன்று கல்லூரிக்கு எஸ்வேந்திரன் வரவில்லை, கமலஹாசன் அந்த இடத்திலேயே இல்லை) இச்சம்பவத்தை காரணமாக வைத்து இந்த சம்பவத்தில் எந்த வகையிலும் தொடர்பில்லாத அம்மாணவர்களின் மீது புகார் கொடுத்த கல்லூரி முதல்வர், தன்னுடைய சமுதாயம் சார்ந்து இயங்கும் காவல்துறை அதிகாரிகளின் துணைகொண்டு தன் அதிகாரத்தை பயன்படுத்தி அம்மாணவர்கள் மீது பிணையில் வெளிவரமுடியாத வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளார்.

பொய் வழக்கில் பாதிக்கப்பட்ட எஸ்வந்திரன் தமிழக கலைச்சூழலில் கடந்த பத்து வருடங்காலமாக இயங்கிவரும் ஓவியரும் சிற்பியுமாவார். இவரது கைது அப்பட்டமாக பழிவாங்கும் நோக்கத்துடன் நடந்துள்ளது. இவர் உடன் பிறந்த தம்பி ஆனந்தகுமார் சிற்பக்கலை இறுதியாண்டு படித்து வருகிறார். சம்பவம் நடந்த இரவு சுமார் 11 மணி அளவில் சிற்பப்பணியில் ஈடுபட்டிருந்த மாணவர் ஆனந்தகுமாரை பெரியமேடு காவல்துறை ஆய்வாளர் ‘முருகேசன்’ தலைமையில் வந்த காவல் துறையினர் கல்லூரியிலிருந்து வலுக்கட்டாயமாக அடித்து இழுத்துச் சென்றுள்ளனர். இது சக மாணவர்களின் முன்னிலையில் நடந்துள்ளது.
இழுத்துச் செல்லப்பட்ட மாணவர் ஆனந்தகுமாரை பெரியமேடு காவல் நிலையத்தில் வைத்து அடித்து துன்புறுத்தி தன்னுடைய அண்ணன் எஸ்வந்திரன்தான் வாகனத்தை சேதப்படுத்த உடந்தையாக இருந்தார் என்று எழுதி வாங்கிக்கொண்ட காவல்துறை இரவு முழுவதும் காவல்நிலையத்தில் சங்கிலியால் கட்டி வைத்திருந்தனர். வெள்ளிக்கிழமை இரவு சுமார் 1 மணியளவில் தன்னுடைய அறையிலிருந்து இழுத்துச் செல்லப்பட்ட எஸ்வந்திரன், பெரியமேடு காவல் நிலையத்தில் வைத்து, கொலை மிரட்டல் விடுத்து, சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டிருந்தார். மறுநாள் சனிக்கிழமை காலை அங்குவந்த மனோகரன், ஆசிரியர் செந்தமிழ்ச்செல்வன், காவல் நிலைய ஆய்வாளர் முருகேசன், துணை ஆய்வாளர் நடராஜன் ஆகியோருடன் கலந்து ஆலோசித்து பொய் புகார் எழுதிக்கொடுத்தனர். அச்சமயம் அங்கிருந்த மாணவர் ஆனந்தகுமாரை மனோகரன் மேற்படி காவலர்களின் முன்னிலையில் கடுமையாக கொலை மிரட்டல் விடுத்துச் சென்றார். தற்காலிக முதல்வர் மனோகரன், சாதி ரீதியாகவே எப்போதும் செயல்படுபவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பணிபுரிந்த குடந்தை அரசு ஓவியக் கல்லூரி, சென்னை அரசு ஓவியக்கல்லூரி ஆகிய இரண்டு இடங்களிலும் மாணவர்களை சாதி ரீதியாக மிரட்டி, அச்சுறுத்தியதன் காரணமாக துறை ரீதியாக விசாரிக்கப்பட்டு பணியிடமாற்றம் செய்து தண்டிக்கப்பட்டவர் என்பது யாவரும் அறிந்தது.

பாதிப்பிற்குள்ளான மாணவர் எஸ்வந்திரன், ஆனந்தகுமார், கமலஹாசன் மூவரும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். கல்லூரி தற்காலிக முதல்வர் மனோகரனும் காவல்துறையினரும் கைகோர்த்து நிகழ்த்திய வன்கொடுமையான மனித உரிமை மீறலுக்கும் வன்முறைக்கும் பின்புலமாய் இருப்பது மனோகரனின் சமூகத்தைச் சார்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி (செயலர், சுற்றுலா மற்றும் கலைப் பண்பாட்டுத் துறை) என்பது தெரிய வருகிறது. தனக்கு மூத்த ஆசிரியர்கள் பலர் முதல்வராக வருவதை மீறி, தன் இனம் சார்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி துணையுடன் முதல்வர் பொறுப்புக்கு வந்ததும் தன்னை இனி எவரும் கேள்வி கேட்க முடியாது என மாணவர்களை பலசமயம் மிரட்டும்போது குறிப்பிட்டுள்ளார். அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சாதிப்பற்றாளர் என்பதற்கு சான்றாக சென்னை மற்றும் கும்பகோணம் ஓவியக் கல்லூரிகளில் முதல்வர் பொறுப்புகளில் உள்ள அவரின் இனத்தைச் சார்ந்த மனோகரன் (சென்னை), சந்திரசேகரன் (கும்பகோணம்) ஆகியோர் சாதி ரீதியான வன்முறைகளை நிகழ்த்தி இருப்பது கலைக்கல்லூரி வரலாற்றில் அதிர்ச்சியளிக்கு இருண்ட காலமாகும். இச்சூழல் தொடர்ந்தால் வளரும் மாணவர் சமுதாயம், இதுவரை சாதி பாகுபாடு பார்க்காமல் இருந்த ஓவியக்கல்லூரிகளின் நிலைமாறி சாதியக் குழுக்களாக, பிரிந்து வன்முறை சூழலுக்குத் தள்ளப்படும் அவலம் நிகழும். இவ்வன்முறைச் சம்பவங்களுக்குப் பின்புலமாக இருந்து காவலர்களை ஏவிய ஐ.ஏ.எஸ். அதிகாரி மீதும் அவரின் அடி வருடிகளாக செயல்படும் மனோகரன், சந்திரசேகரன் ஆகியோரின் சாதிய செயல்பாடுகளை தடுத்து நிறுத்திடவும் மாணவர்களின் பல்லாண்டுகால நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவாக கைகோர்க்க அழைக்கிறோம்.
மேலும், இந்திய கலைச்சூழலில் மிக முக்கிய ஆளுமையான ஓவியர் சந்ரு அவர்களையும் இச்சம்பவத்தில் உள்நோக்கத்துடன் காவல்துறையினரால் அவமானப்படுத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டுள்ளார். இது சம்பந்தமாக படைப்பாளிகளும் மனித உரிமை ஆர்வலர்களும் தங்களின் கருத்துகளை பதிவுசெய்ய தோழமையுடன் அழைக்கிறோம்.
இவண்
அரசினர் கவின்கலைக் கல்லூரிகளின்
இந்நாள் மற்றும் முன்னாள் மாணவர்கள்

06 March 2010

பேரறிஞர் அண்ணா (1909 - 1969) - தொடர் - 1

Posted by Gunalan Lavanyan 5:34 PM, under | No comments



சென்னை மெரினா கடற்கரையில் அணையா விளக்கு எரிய தூங்கிக்கொண்டிருக்கும் அண்ணா, வரலாற்று சிறப்புகளுக்குரிய காஞ்சி மாநகரில் 1909 செப்டம்பர் 15 அன்று பிறந்தார். அவருக்கு பெற்றோர் வைத்த பெயர் அண்ணாதுரை. தந்தை நடராஜன் - தாய் பங்காரு அம்மாள். நடுத்தர நெசவாளர் குடும்பத்தில் பிறந்த அண்ணாவுக்கு ராஜாமணி என்கிற சித்தி இருந்தார். இவருக்கு அண்ணா என்றால் அளவுகடந்த பிரியம். இவர்தான் அண்ணாவை வளர்த்தார். அண்ணா இவரை அன்போடு ‘தொத்தா’தான் என்று அழைப்பார்.


கல்வி
காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆரம்பப்பள்ளியில் ஆறு வயதில் அண்ணா சேர்க்கப்பட்டார். அந்தக்காலத்தில் ஆண் பிள்ளைகளுக்கும் குடுமி வைத்து, காது குத்தி, கடுக்கன் போடுவார்கள். அண்ணா குடுமியுடன்தான் பள்ளிக்குச் செல்வார். மாணவர்கள் எல்லோரும் கிராப்பு வெட்டி வரும்போது, தான் மட்டும் குடுமி வைத்திருப்பது அவருக்குப் பிடிக்கவில்லை. இந்த விஷயத்தை எப்படியாவது தொத்தாவிடம் சொல்ல வேண்டும். தானும் கிராப்பு வெட்டிக்கொள்ள வேண்டும் என்று துடியாகத் துடித்தார். அவரின் ஆசை ஒருநாள் பலித்தது. தொத்தாவிடம் சொன்னார். தொத்தா தலையாட்டினார். மாணவன் அண்ணாதுரை கிராப்புத் தலையுடன் பள்ளிக்குச் செல்லத் தொடங்கினார்.

காஞ்சிபுரத்தில் பள்ளிப் படிப்பை முடித்த அண்ணா சென்னை வந்தார். 1928-ம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்தார். அப்போது பச்சையப்பன் கல்லூரி அமைந்தகரையில் இருந்தது. கல்லூரி படித்துக்கொண்டு இருக்கும்போதே 1930-ல் ராணி அம்மாவை திருமணம் செய்தார். இடைநிலை (இன்டர் மீடியட்) வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்றார். அதிக மதிப்பெண் பெற்றும், மேல் படிப்பு படிக்க அண்ணாதுரைக்கு வசதி இல்லை. கல்லூரி முதல்வர் சின்னத்தம்பி அண்ணாவின் நிலையை அறிந்தார். அண்ணாவின் மேல்படிப்புக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் தான் செய்து தருவதாகக் கூறினார். அண்ணாதுரை பி.ஏ. ஹானர்ஸ் படிக்க வழிவகுத்துக் கொடுத்தார்.

பேச்சாளர்
1931-லிருந்து மூன்று ஆண்டுகள் அண்ணா மேற்படிப்பு படித்தார். அந்த நாட்களிலேயே சமூகச் சிந்தனைகள் அவருக்கு வரத்தொடங்கியிருந்தன. கல்லூரி நாட்களில் பாடப்புத்தகங்களோடு சமூகச் சிந்தனை அளிக்கும் புத்தகங்களையும் அண்ணா படித்தார். கன்னிமரா நூலகமே கதியென்றுக் கிடந்தார். கட்டுரைகள் எழுதினார். வாய்ப்பு வரும்போதெல்லாம் தமிழிலும், ஆங்கிலத்திலும் உரையாற்றினார். அன்றைய நாட்களில் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்த சொற்பொழிவுக் கூட்டங்களில் அண்ணா பேசினார். அவர் பேச்சு மக்களை ஈர்த்தது. மாணவர்கள் அண்ணாவின் பேச்சை பற்றி பேசத்தொடங்கினர். அண்ணா பேசுகிறார் என்றால், கூட்டம் அலைமோதியது. இப்படி கல்லூரி நாட்களிலேயே எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் வளர்ந்த அண்ணா 1935-ம் ஆண்டு எம்.ஏ. பட்டம் பெற்றார்.

மொழிபெயர்ப்பாளர்
அந்தக்காலத்தில் நீதிக் கட்சியைச் சேர்ந்தவர்கள் மேடைகளில் ஏறிவிட்டால் ஆங்கிலத்திலேயே பேசுவார்கள். சர்.ஏ.ராமசாமி முதலியார், தொழிலாளர் தலைவர் பாசுதேவ் போன்றோர் சரளமாக ஆங்கிலத்தில் பேசும்போது அவர்களின் மொழி ஏழை மக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் புரியாது. அதனால், ஒரு மொழிபெயர்ப்பாளர் தேவைப்பட்டார். அதுபோன்ற கூட்டங்களில் மொழிபெயர்ப்பாளராக இருக்கும் வாய்ப்பு அண்ணாவுக்கு வந்தது. காலப்போக்கில் பாசுதேவ் பேசுகிறார் என்றால், அங்கு அண்ணாதுரையும் இருப்பார் என்று மக்கள் புரிந்துகொண்டனர். கடல்மடை திறந்த அண்ணாவின் தமிழைக் கேட்க மக்கள் அலையலையாகக் கூடினர். நாளடைவில் நீதிக் கட்சியோடு அண்ணாவுக்கு நெருக்கம் அதிகமானது.

அந்தநேரத்தில் சென்னை நகரசபைக்கு தேர்தல் வந்தது. நீதிக் கட்சி அண்ணாவை வேட்பாளராக அறிவித்தது. பெத்து நாயக்கன் பேட்டையில் அண்ணா போட்டியிட்டார். காங்கிரஸ் தரப்பில் மா.சுப்பிரமணியம் நிறுத்தப்பட்டார். பலத்த போட்டி. காங்கிரஸ் சார்பாக சத்தியமூர்த்தி, திரு.வி.க., சீனிவாசராவ் என்று காங்கிரஸின் பிரசார பீரங்கிகள் அனல் பறக்கும் பிரசாரத்தில் இறங்கினர். அவர்களுக்கு ஈடுகொடுத்து அண்ணா மக்களிடம் பிரசாரம் செய்தார். தான் வெற்றிபெற்றால் மக்களுக்கு என்னவெல்லாம் நன்மைகள் கிடைக்கும் என்று எடுத்துச் சொன்னார்.

ஒரு பிரசாரக் கூட்டத்தில், ‘சேரிகளில் மின்சார விளக்குகள் இல்லை. ஆனால், நகரசபைக் கோயில்களில் இரண்டு அலங்கார விளக்குகள் போடுவது ஏன்?’ என்று அண்ணா கேள்வி எழுப்பினார். ஏழை மக்களின் நலனுக்காக அண்ணா பேசிய இந்தப் பேச்சை காங்கிரஸ்காரர்கள், ‘அண்ணாதுரைக்கு ஓட்டுப் போட்டால், கோயில்களின் முன் இருக்கும் அலங்கார விளக்குகளை எடுத்துவிடுவதாக பேசியிருக்கிறார். அதனால், அவருக்கு வாக்களிக்காதீர்கள்’ என்று மக்களிடம் திரித்துப் பிரசாரம் செய்து, துண்டு பிரசுரங்கள் வெளியிட்டனர். காங்கிரஸ்காரர்களின் இத்தகைய சூழ்ச்சிகளில் மக்கள் சிக்கிவிட்டார்கள். அதனால், தேர்தலில் அண்ணா தோல்வி கண்டார். (தொடரும்...)

02 March 2010

சுவாமி நித்யானந்தாவின் காமக் களியாட்டம்!

Posted by Gunalan Lavanyan 9:47 PM, under | No comments

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பக்தகோடிகளுக்கு அருளாசி வழங்கி வந்த சுவாமி நித்யானந்தாவின் காமக் களியாட்டைத்தை அம்பலப்படுத்தி இருக்கிறது சன் நியூஸ் தொலைக்காட்சி. குருக்கள், குருஜிக்கள் வரிசையில் மற்றொரு நபராக சேர்ந்திருக்கிறார் இந்த செக்ஸ் ஆசை ‘சாமி’யார்?

செவ்வாய் (02.03.2010) அன்று இரவு 9 மணி அளவில் சன் நியூஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட நேரடிக் காட்சிகள் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. தமிழ்த்திரைப்பட நடிகை, R என்ற முதல் எழுத்தை பெயராகக் கொண்ட ஒரு நடிகையுடன் நித்யானந்தா சல்லாபித்துக்கொண்டு இருந்தார் அந்தக் காட்சியில். (சுவாமியின் லீலையை பார்க்காதவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்யவும்.... http://www.envazhi.com/?p=16649)

பெண்கள், குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் பார்க்கவே முடியாத அளவுக்கு அருவெறுப்பும் அபாசமும் நிறைந்த அந்தக் காட்சிகள் நித்யானந்தாவின் பக்தகோடிகளுக்கு ஒரு பேரதிர்ச்சி என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

இந்த வேடதாரியின் காம ரூபம், இந்த ஒரு நடிகையோடு மட்டும்தானா? இன்னும் எத்தனைப் பேரோ… எத்தனை பக்தைகளோ… ஆண்டவனுக்கே வெளிச்சம்!
பாவங்களைப் போக்குபவர்கள்… ஞானத்தையும் (அறிவையும்), அருளையும் வழங்குபவர்கள், துறவு பூண்டவர்கள் இப்படி துறவறத்தைத் துறந்து சல்லாபக் கோலம் பூணுவது என்ன முறையோ… நீங்களே பதில் சொல்லுங்கள்…

சாதாரண மனிதரைப் போன்ற ஆசையும் ஆசாபாசமும் இருப்பின் இந்தத் துறவுக்கோலமும் காவி வேஷமும் எதற்கு..?

இப்படி குருக்கள், குருஜிக்களின் குட்டும், காமக் கூத்தும் வெளிவந்துகொண்டே இருந்தாலும் அவர்களைத் தேடி போகிறவர்களின் (பக்தர்களின்) எண்ணிக்கை குறைந்தபாடு இல்லை. எப்போதுதான் திருந்தப்போகிறது இந்த மூடநம்பிக்கைச் சமூகம்…