11 March 2011

சுகமான சுகப்பிரசவம்

Posted by Gunalan Lavanyan 11:32 PM, under | No comments

‘பெண்ணின் திருமண வயது 21’ என்று எல்லா ஆட்டோக்களின் முதுகிலும் பார்த்து இருப்பீர்கள். அதற்குக் காரணம், பெண் குழந்தை பெறுவதற்கான தகுதியை எட்டுவது இந்த 21 வயதில்தான் என்பது நாம் அறிந்ததே! ‘‘அதேபோல, 35 வயதுக்கு மேல் குழந்தை பெறுவதும் சில நேரங்களில் ஆபத்தை விளை விக்கலாம். எனவே, சுகப்பிரசவத்துக்கு கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளும் உணவு முறைகளும் நிறைய இருக் கின்றன’’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த, பிரபல மகளிர் நோய் மருத்துவர் கே.பாலகுமாரி.

தாய்மையின் வயது

‘ ‘ ஒரு பெண், தாய்மை அடைவதற்கான சரியான பருவம் 21 வயதிலிருந்து 35 வயதுக்குள்தான். 21 வயதுக்கு முன்போ அல்லது 35 வயதுக்குப் பின்போ தாய்மை அடைவதால், பிறக்கப்போகிற குழந்தையும் சரி,  தாய்மை அடைகிற பெண்ணும் சரி பல சிக்கல்களையும், நோய்களையும் சந்திப்பதற்கான ஆபத்து அதிகம். இருபத்தியோரு வயதுக்குப்பின் குழந்தை பெறுவதால், பிறக்கும் சிசுவுக்கு நோய்த் தாக்குதல்கள் குறைவு. அதனால், சிசுவியின் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும். சில நேரங்களில் இப்படி மருத்துவ விதியை மீறி குழந்தை பெறும்போது தாயும் சேயும் நல்ல ஆரோக்கியத்தோடும் இருந்திருக் கிறார்கள்.

ஆனால், இது விதிவிலக்கு மட்டுமே. எல்லோருக்கும் இப்படி நேரும் என்று சொல்லமுடியாது. அதனால்தான், அரசாங்கமே பெண்ணின் திருமண வயதை வரையறுத்திருக்கிறது. எதனால் வயது வரையறுத்து வைத்திருக்கிறார்கள் என்றால், அந்தப் பருவத்தில்தான் ஒரு பெண், தாம்பத்திய வாழ்க்கையை எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தை அடைகிறாள். அப்போது தாம்பத்தியம் வைத்துக்கொள்ளும்போது கரு முட்டைகளும் வீரியத்தோடு வளர்ச்சியடைந் திருக்கும். கருமுட்டையின் வளர்ச்சியில்தான் குழந்தையின் ஆரோக்கியமே அடங்கியிருக்கிறது. அதேபோல பிரசவமும் நார்மலாக இருக்கும். சிசேரி யனைத் தவிர்க்கமுடியும். குழந்தையை வளர்ப்பதற்கு தாய் நல்ல சக்தியோடு திடகாத்திரமாக இருப்பாள்.

சராசரியாக 21 வயதுக்குப் பிறகு திருமணம் செய்துகொண்டு, குழந்தை பெற்றுக் கொள்கிற பெண்ணுக்குப் பிறக்கிற குழந்தை, வளர்ந்து அதே 21 வயது அடையும் போது, தன் வாழ்க்கையைத் தானே கவனித்துக் கொள்கிற பக்குவத்தை அடைந்துவிடும். அப்போது, தாய்க்கும் 42 வயது ஆகியி ருக்கும். அந்த நடுத்தர வயதிலேயே அவளும் தன் பிள்ளைக்குத் திருமணத்தை நடத்தி வைத்துவிட்டால், தன்னுடைய வாழ்க்கைச் சுமையை ஓரளவுக்குக் குறைத்துக் கொள்ள முடியும். இளைய வயதில் ஓடியாடி வேலை பார்த்தது மாதிரி 50 வயதுக்குப் பிறகு அவளால் செயல்படமுடியாமல் போவதற் கான வாய்ப்பு அதிகமாக இருப்பதால், ஒரு பெண் 21 வயதிலிருந்து 35 வயதுக்குள் குழந்தை பெற்றுக்கொள்வது அறிவியல் பூர்வமாக நல்லது என்றே சொல்வேன்.

கர்ப்பகால உணவு முறைகள்

அடுத்து, கர்ப்பகாலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் உணவு முறைகள் பற்றி பார்க்கலாம். குழந்தை வயிற்றில் இருக்கும்போது, எடை அதிகமாக உள்ள பெண்கள் 5 முதல் 7 கிலோ வரை எடை கூடலாம். அதுவே ஒல்லியானவர்களாக இருந்தால், 12 முதல் 15 கிலோ வரைகூட எடை ஏறலாம். தவறில்லை. அதேநேரத்தில், முதல் 3 மாதங்களுக்கு எடை கூடவேண்டும் என்ற அவசியம் இல்லை. வாந்தி எடுப்பதால் சிலர் எடை குறைவார்கள்; அதுவும் தவறில்லை. அடுத்து, 3-ல் இருந்து 5 மாதங்களுக்கு 2 முதல் 3 கிலோ வரை ஏறலாம். அதன்பிறகு, 5-ல் இருந்து 10 மாதங்களுக்கு 5 முதல் 7 கிலோவரை எடை கூடலாம். முதல் 5 மாதங்களுக்கு உணவு அளவை அதிகப்படுத்தவேண்டிய அவசியம் இல்லை. ஐந்தாவது மாதத்துக்குப்பிறகு, 1 வேளைக்கு 300 கலோரி கொண்ட உணவை எடுத்துக்கொண்டால் போதுமானது. உதாரணத்துக்கு 1 இட்லி, 1 வாழைப் பழம், 1 டம்ளர் பால். இதில் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ற உணவை 300 கலோரி அளவுக்கு மாற்றியும் உட்கொள்ளலாம். சில பெண்கள், ‘குழந்தைக்கும் சேர்த்து சாப்பிடுகிறேன்’ என்று, அளவுக்கு அதிகமாக சாப்பிடுவார்கள். இதனால், அதிக குண்டாகி சிசேரியன் செய்வதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன.

ஒல்லியாக இருப்பவர்களைவிட குண்டாக இருக்கும் பெண்கள்தான் உணவு விஷயத்தில் கூடுதல் ஜாக்கிரதையோடு இருக்க வேண்டும். முதலில் நிறைய சாப்பிடக் கூடாது. கட்டாயம் சர்க்கரை கலந்த உணவையோ, அதிக எண்ணெய் கலந்த பதார்த்தத்தையோ உட்கொள்வதைத் தவிர்க் க வேண்டும். சாதாரண மாக, எல்லாப் பெண்களும் எண்ணெய், சர்க்கரை, பொரித்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஒல்லியானவர்கள் எந்த பழங்கள், காய்கறிகளை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், குண்டானவர்கள் அதிக சர்க்கரை உள்ள வாழை, பலா, மாம்பழத்தைக் கட்டாயம் தவிர்த்துவிட வேண்டும். அதேமாதிரி கிழங்கு வகைகள், கொட்டைகள், மாமிசங்களையும் தவிர்க்க வேண்டும். இரும்புச்சத்து நிறைந்த பேரிச்சம்பழத்தை தேனில் நனைக்காமல் சாப்பிடலாம்.

ஒரே வரியில் சொல்வதென்றால் கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகளைத் தவிர்த்தால், சுகமான சுகப்பிரசவம்தான்!’’

- சா.இலாகுபாரதி

நம் தோழி, பிப்ரவரி 2011

0 comments:

Post a Comment