16 March 2010

பேரறிஞர் அண்ணா (1909 - 1969) - தொடர் - 2

Posted by Gunalan Lavanyan 10:10 PM, under | No comments

தொடர்கிறது... (முதல் அத்தியாயம் படிக்கா தவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்து படிக்கலாம்:                                                                                                             http://doordo.blogspot.com/2010/03/1909-2009.html) 1935-ம் ஆண்டு தமிழக வரலாற்றில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. இந்த ஆண்டு திருப்பூரில் செங்குந்தர் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில்தான் மிகப்பெரிய சந்திப்பு ஒன்று நிகழ்ந்தது. மாநாட்டுக்கு வந்திருந்த அண்ணாவும் பெரியாரும் நேருக்கு நேர் சந்தித்தார்கள். முன்னதாக மாநாட்டில் அண்ணா பேசினார். அவருடைய வசீகரமான பேச்சு பெரியாரை ஈர்த்தது. அண்ணாவை எப்படியாவது சுயமரியாதை இயக்கத்துக்குள் கொண்டுவர வேண்டும் என்று பெரியார் விரும்பினார். பெரியாரின் விருப்பம் நிறைவேறியது. அண்ணா சுயமரியாதை இயக்கத்தில் இணைந்தார். அண்ணாவின் பேச்சும் எழுத்தும் - விடுதலை, குடியரசு பத்திரிகைகளின் துணையாசிரியர் பொறுப்பை அவருக்குப் பெற்றுத் தந்தது.

‘விடுதலை’யில் அவர் எழுதிய தலையங்கங்கள், கட்டுரைகள் பரபரப்பாகப் பேசப்பட்டன. ‘ரிப்பன் கட்டடத்துச் சீமான்கள்’ என்ற தலையங்கத்தை பெரியார் படித்தார். அண்ணாவின் எழுத்து, மேலும் பெரியாரை ஈர்த்தது. படித்த பெரியார் தரை தளத்தில் இருந்தார். எழுதிய அண்ணா மூன்றாவது மாடியில். மாடிக்குச் செல்லும் பாதையோ குறுகலானது. அந்த படிகளில் ஏறி மாடிக்குச் செல்வது பெரியாருக்கு சற்று சிரமம்தான். ஆனால், எதையும் பொருட்படுத்தாமல், ‘அண்ணா... அண்ணா...’ என்று அழைத்தவாறு மாடி ஏறிவிட்டார்.

பெரியார் வந்தவுடன் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தார் அண்ணா. ‘இவ்வளவு கஷ்டப்பட்டு நீங்கள் ஏன் வரவேண்டும். சொல்லி அனுப்பியிருந்தால் நானே வந்திருப்பேனே’ என்று சொல்லிக்கொண்டிருந்தார் அண்ணா. பெரியார் அதைப் பொருட்படுத்தாமல், ‘அண்ணாதுரை, நீங்கள் எழுதிய ரிப்பன் கட்டடத்துச் சீமான்கள், பிரமாதம்... பிரமாதம்...’ என்று பாராட்டினார். பெரியாருக்கு யாரையும் பாராட்டும் வழக்கம் இல்லை. ஆனால், அண்ணாவின் தலையங்கம் அவரை மூன்றாவது மாடியே ஏறவைத்துவிட்டது. அண்ணாவின் எழுத்தாற்றல் பெரியாரையே மாற்றியது.

இந்தி எதிர்ப்பு
இந்தச் சூழலில் 1937-ம் ஆண்டு சென்னை மாகாணத்துக்கு தேர்தல் வந்தது. காங்கிரஸ் அமோக வெற்றி. ராஜாஜி மாகாண முதலமைச்சர் ஆனார். 1938-ம் ஆண்டு தமிழக வரலாற்றில் போராட்டங்கள் நிறைந்த ஆண்டாக இருந்தது. இந்த ஆண்டு ராஜாஜி இந்தி மொழியை கட்டாயப் பாடமாகக் கொண்டுவந்தார். 6, 7, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தி கட்டாயம் ஆக்கப்பட்டது. இந்தி கட்டாயத்தை தமிழ்நாடே எதிர்த்து போராட்டம் நடத்தியது. இந்தப் போராட்டத்தில் பெரியார், அண்ணா, மறைமலையடிகள், சோமசுந்தர பாரதியார், மு.சி.பூரணலிங்கம் பிள்ளை, தெ.பொ.வேதாசலம், அழகிரிசாமி, கி.ஆ.பெ.விசுவநாதம், ஈழத்து சிவானந்த அடிகள் போன்றோர் தீவிரம் காட்டினர்.

‘எப்பக்கம் வந்து புகுந்துவிடும் இந்தி, எத்தனை பட்டாளம் கொண்டு வரும்’ என்று அண்ணா முழங்கினார். ‘இப்படை தோற்கின், எப்படை வெல்லும்’ என்று தமிழர்களை உணர்ச்சி வெள்ளத்தில் மிதக்க வைத்தார். பள்ளிக்கூடங்கள் முன் மறியல்கள் நடந்தன. இந்தி எதிர்ப்பைத் தூண்டிவிட்டதாகக் கூறி பெரியார், அண்ணா உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். பெரியாருக்கு 18 மாதம் கடுங்காவல் தண்டனை. அண்ணாவுக்கு நான்கு மாதம் சிறை தண்டனை. இந்தி திணிப்புக்கு எதிராக எழுதிய பத்திரிகைகள் மீது வழக்கு தொடுக்கப்பட்டன. பத்திரிகை ஆசிரியர்கள் சிறை வைக்கப்பட்டனர். இந்தி எதிர்ப்பு கூட்டங்களுக்கு தடை! ‘இந்தி எதிர்ப்பு இயக்கத்தை அடக்க காங்கிரஸ் அரசு மேற்கொண்ட முயற்சிகளால் காங்கிரஸ் தன் புனிதத்தை இழந்துவிட்டது’ என்று மகாகவி ரவீந்திரநாத் தாகூர், ஜின்னா, அயத்கான் போன்றோர் குற்றம் சாட்டினர்.

ராஜாஜி பின்வாங்கினார். இந்தி எல்லாப் பள்ளிகளிலும் இல்லை. சில பள்ளிகளில் மட்டும்தான் என்று அறிவித்தார். அப்படியும் போராட்டம் ஓயவில்லை. 1939-ல் இரண்டாம் உலகப் போர் மூண்டது. பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவின் அனுமதி இல்லாமலேயே இந்தியாவையும் போரில் ஈடுபடுத்தியது. இதைக் கண்டித்து மாகாண காங்கிரஸ் அரசுகள் பதவி விலகின. ராஜாஜி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். ஒருவழியாக இந்தி கட்டாயம் கதை முடிந்தது.

‘சாமி’யார்? அண்ணா
1940-ம் ஆண்டு வட இந்தியா முழுவதும் பெரியார் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அவரோடு அண்ணாவும் சென்றார். இந்தப் பயணத்தின்போது வெண்தாடியுடன் கங்கை நதிக்கரையில் பெரியார் நடந்துச் செல்வார். அவரோடு அண்ணாவும் நடப்பார். பெரியாரின் தாடியையும் அவர் அணிந்திருந்த மஞ்சள் நிற சால்வையையும் பார்த்த பலர், ‘பெரிய சாமியாராக இருக்கிறார்’ என்று பெரியார் காலில் விழுந்து கும்பிட்டார்கள். ‘சாமியாருடன் வருகின்றவர் அவருக்குச் சீடராக இருப்பார். அதனால், அவருக்கும் சக்தி இருக்கும்’ என்று நினைத்து அண்ணாவின் காலிலும் விழுந்து கும்பிட்டார்கள். இந்தச் சம்பவம் பெரியாருக்கும் அண்ணாவுக்கும் மக்கள் மேல் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

'தேவதாசி முறை' ஒழிப்பில் நீதிக் கட்சி பல சாதனைகள் புரிந்திருந்தது. ஆனால், உட்கட்சி பூசலால் கட்சி வீழ்ந்துகொண்டு இருந்தது. பொப்பிலி அரசர் நீதிக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலகினார். பி.டி.ராஜன், குமாரராஜா முத்தையா செட்டியார் என்று யாரும் தலைமைப் பொறுப்பை ஏற்க முன்வரவில்லை. இந்த நிலையில் தமிழகத்தையே கலக்கிக் கொண்டிருந்த பெரியாரால்தான் நீதிக் கட்சியை கட்டிக்காக்க முடியும் என்று கட்சியின் செயற்குழு தீர்மானித்தது.


அதுவரை நீதிக்கட்சியின் ஆதரவாளராக இருந்த பெரியார், 1940 ஆகஸ்ட் 2-ல் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். நீதிக்கட்சி புத்துயிர் பெறவேண்டுமானால் கட்சியின் பெயரை மாற்றவேண்டும் என்று முடிவு செய்தார். பெரியாரின் இந்த முடிவுக்கு கட்சியின் மூத்த தலைவர்கள் சம்மதிக்கவில்லை. அவரை தலைமைப் பதவியிலிருந்து வீழ்த்த நினைத்தனர். ‘பெரியார் சர்வாதிகாரம் செய்கிறார்’ என்று சொல்லி, பொதுச்செயலாளராக இருந்த கி.ஆ.பெ.விசுவநாதன், பதவியை ராஜினாமா செய்தார். கட்சியின் செயற்குழு அண்ணாவை பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுத்தது. (தொடரும்...)

0 comments:

Post a Comment