இறக்க நேரிட்டால்...
காலம் சென்ற
என் நண்பரின் படத்திற்கு
பூவும் பொட்டும்
வைத்தார்கள்.
கணவனை இழந்த
அடையாளம் என்று சொல்லி
அவர் இணை
இனி அவையெதுவும்
இல்லாமல் வெறுமனேயே
இருக்கவேண்டும் என்றார்கள்.
நானும்கூட
ஒருநாள் இறக்க நேரிட்டால்
என் படத்திற்கான
பூவையும் பொட்டையும்
என் இணைக்கு
கொடுங்கள்...
அவையெதுவும்
நான் அவளை
மணந்ததற்கான
அடையாளச் சின்னங்கள் அல்ல.
அதற்கு முன்பாகவே
அவையாவும் அவளின்
பயன்பாட்டுப் பொருட்கள்.
- சா.இலாகுபாரதி
2004-ல் எழுதிய கவிதை.
அப்போது எனக்கு திருமணம் ஆகவில்லை.
ஆனால், இப்போது திருமணத்துக்குப்பின்னும்
இதே கருத்தில்தான் இருக்கிறேன்.
1 comments:
//நானும்கூட
ஒருநாள் இறக்க நேரிட்டால்
என் படத்திற்கான
பூவையும் பொட்டையும்
என் இணைக்கு
கொடுங்கள்...//
மனதை நெருடும் கவிதை...
Post a Comment