04 November 2008

தில்லுமுல்லு... தில்லுமுல்லு...

Posted by Gunalan Lavanyan 1:59 PM, under | No comments



நீண்ட நாட்களுக்குப் பிறகு 3.11.2008 திங்களன்று சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களைச் சந்தித்தார்.
தலைவர் கட்சியைத் தொடங்குவாரா..? தொடங்கினால் அதில் தமக்கு ஒரு 'வால்' பதவியாவது கிடைக்குமா? என்ற ஏக்கங்களோடும், முகத்தில் பல கேள்விக் குறிகளோடும் ஆயிரக்கணக்கான ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் திடீரென்று ரஜினி கூட்டிய கூட்டத்திற்கு வந்திருந்தனர்.
இந்தக் கூட்டத்தில் வழக்கத்திற்கு மாறாக ரசிகர்களை (ஒரு துண்டுச் சீட்டில் எழுதி கொடுத்து) கேள்வி கேட்கச் சொல்லி அந்தக் கேள்விகளுக்கு ரஜினி பதில்களை குழப்பினார்; மன்னிக்கவும் வழங்கினார். இந்தக் கூட்டத்தில் ஒரு ஆச்சரியமும் நடந்தது. எப்போதும் ரஜினி தான் சொன்ன கருத்துக்கு எதிராக ஒரு கருத்து எழும்போது தன்னுடைய கருத்துக்கு ஆதரவாகவே பேசி எதிர் கருத்தை மழுப்பிவிடுவார். மீண்டும் மன்னிக்கவும் மறுத்துவிடுவார். அல்லது தான் சொன்னது தப்பு என்று ஜகாவாங்கிவிடுவார். ஆனால், இந்தக் கூட்டத்தில் நடந்தது வேறு. ரஜினி தொடர்ச்சியாக தனது அரசியல் பிரவேச விஷயத்திலும், தமிழர் பிரச்சினைகளிலும் (குறிப்பாக கர்நாடகம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளில்) குழப்பமான அறிக்கைகளையும் தனது நிலைப்பாட்டையுமே அறிவித்து வருகிறார். இந்த விஷயத்தில் சில பத்திரிகைகளும் சில தனிநபர்களும் அப்பட்டமாகவே அவரை குழப்பவாதி என்று கூறிவருகின்றனர். இது சம்பந்தமான மகா ரசிகர் ஒருவரின் கேள்வி: 'எல்லோரும் உங்களை குழப்பவாதி என்கிறார்களே இதற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?'
ரஜினி: குட்டையை குழப்பி அதுசரிதான் என்று ஒப்புக்கொண்டார்.
மற்றொரு மகா ரசிகர்: கடந்த 30 ஆண்டு காலமாக நாங்கள் உங்களோடேயே இருந்து வருகிறோமே நீங்கள் எங்களுக்காக என்ன செய்திருக்கிறீர்கள்? (கட்சியை எப்போது தொடங்கப் போகிறீர்கள் என்று மறைமுகமாக கேட்கிறார்)
ரஜினி: (கட்சியைப் பற்றி எதுவும் பேசாமல்) நான் ஆரம்பத்துல குணச்சித்திர வேடங்கள்ல நடிச்சிட்டு வந்தேன். நீங்க, குடும்பப் படங்கள்ல நான் நடிக்கணும்னு கேட்டீங்க, நானும் நடிச்சேன். அப்புறம், நீங்க ஃபைட் பண்ணா நல்லா இருக்கும்னு சொன்னீங்க, நானும் செஞ்சேன். அப்புறம், தொடர்ந்து நீங்க காமெடி செஞ்சாதான் நல்லா இருக்கும்னு சொன்னீங்க நானும் பண்ணேன். மறுபடியும் டான்ஸ் ஆடுனா உங்களுக்கு நல்லா இருக்கும்னு சொன்னீங்க நான் டான்ஸும் ஆடினேன். இதுவரைக்கும் நீங்க சொன்னதையெல்லாம் செஞ்சிருக்கேன். (அரசியல் கட்சி தொடங்காம ஏமாத்துறீங்களே தலைவரே?). நீங்க என்கிட்ட வேற என்ன எதிர் பார்க்குறீங்க. பேசிக்கலா நான் ஒரு நடிகன். என் ரசிகர்களோட ஆசையை அந்தவகையில பூர்த்தி செஞ்சிட்டு வரேன். (அப்படின்னா ரசிகர்கள்தான் தங்களைக் குழப்பிக் கொள்கிறார்களோ!) அதே சமயத்துல நான் ஒரு குடும்பத் தலைவன் என்கிற முறையில என் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்துட்டு வரேன். இந்த விஷயத்துல அதையேதான் உங்களுக்கும் சொல்றேன். முதல்ல உங்க குடும்பத்தை கவனிங்க... ரசிகர் மன்றம், நற்பணி மன்றம் அதெல்லாம் அப்பறம். கடமையை செய்யுங்க பலனை எதிர்பாருங்க! என்று தன்னுடைய ஸ்டைலிலேயே தன் தெளிவான முடிவை ரஜினி குழப்பமான தொனியில் தெரிவித்தார்.
இப்போதாவது அரசியல் ஆசை கொண்ட ரசிகர்கள் திருந்துவார்களா என்று தெரியவில்லை. ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்ல ஜனநாயக நாட்டில் யாருக்கும் உரிமையில்லை; அதே நேரத்தில் அவர் அரசியலுக்கு வந்துதான் தீரவேண்டும் என்று ரசிகர்கள் கோருவதும் நியாயமில்லை. அரசியல் ஆசையும் மக்கள் சேவையும் நினைப்பு வைத்திருக்கிற ரசிகர்கள் அரிதாரக்காரரின் பின்னால் சுற்றித் திரிந்து தங்களுடைய வாழ்க்கையை இழந்துகொண்டிருப்பதும் சரியில்லை. இனியொரு முறை ரஜினியை அரசியலுக்கு இழுப்பதும், அவர் பெயரை பயன்படுத்தி அவர் கட்சி ஆரம்பிக்கப்போவதாகவும், ஆரம்பித்துவிட்டதாகவும் வதந்திகளைப் பரப்புவதும் ரசிகர்களுக்கும் நல்லது அல்ல. ரஜினிக்கும் நல்லது அல்ல.

0 comments:

Post a Comment