06 February 2010

காதல் தூது போன எம்.ஆர்.ராதா

Posted by Gunalan Lavanyan 12:08 AM, under | No comments

‘காதல்ல எல்லாம் குயில் விடு தூது, கிளி விடு தூதுன்னுவாங்க. இந்த ஜீவா, என்னைப் பிடிச்சாரு பாரு. அப்ப எவ்வளவு முரட்டுக் காதல் பாருங்க.’
- எம்.ஆர்.ராதா

அவசரநிலைப் பிரகடனப்படுத்தப்பட்டு, கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்த காலத்தில், கட்சி ஊழியர்கள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். அப்போது, ஜீவாவுக்கு நடிகவேள் எம்.ஆர்.ராதாதான் அடைக்கலம் கொடுத்து, அவரைப் பாதுகாத்து வந்தார். அந்தநாட்களில் ஜீவா, ராதாவிடம் தொடர்ந்து கடிதங்களைக் கொடுத்து, அதைக் கொண்டுபோய் ஒரு பெண்ணிடம் கொடுத்துவிட்டு, அதேபோல் அந்தப் பெண் கொடுக்கும் கடிதங்களையும் கொண்டுவந்து தன்னிடம் கொடுக்கும்படி கேட்டுக்கொள்வது வழக்கம். ராதாவும் எந்தத் தயக்கமும் இன்றி இருவருக்கும் இடையே கடிதப் பரிமாற்றம் செய்துவந்தார். இந்தக் கடிதப் போக்குவரத்து ஏதோ புரட்சிக்கு வித்திடப் போகிறது என்று நினைத்திருந்த ராதா, அது குறித்து ஜீவாவிடம் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. ஆனால், தொடர்ந்து கேள்விகேட்காமல் அவரால் இருக்கவும் முடியவில்லை.
ஒருநாள் ஜீவாவைப் பார்த்து, ‘‘புரட்சி எப்போது வெடிக்கும்’’ என்று ராதா கேட்க, அதற்கு ஜீவா ‘‘பொறுத்திருந்து பார்’’ என்று பதில் சொல்ல, ராதாவும் ‘ஏதோ கட்சி ரகசியமாக இருக்கும்போல் இருக்கிறது; அதனால்தான் அண்ணன் நம்மிடம் சொல்லத் தயங்குகிறார்’ என்று தனக்குத்தானே நினைத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
பின்னர் கம்யூனிஸ்ட் கட்சி மீதிருந்த தடை நீங்குகிறது. இப்போது ராதா, ஜீவாவிடம் அந்தச் சம்பவத்தை நினைவுபடுத்தி, ‘‘அந்தக் கடிதங்களினால், புரட்சி வெடித்ததா?’’ என்று கேட்கிறார்.
அதற்கு ஜீவா, ‘‘ஆம் ஏற்பட்டது’’ என்று பதில் சொல்கிறார். ராதாவின் வியப்பு கலைவதற்குள்... ‘‘ஆனால், நீங்கள் நினைப்பது போல் அவை கட்சி சம்பந்தப்பட்ட கடிதங்களல்ல... அனைத்தும் காதல் கடிதங்கள். அதனால், எனக்கும் பத்மாவதி என்ற அந்தப் பெண்ணுக்கும் ‘காதல் புரட்சி’ ஏற்பட்டது’’ என்று ஜீவா சொல்ல, அப்போது ராதா, சந்தோஷக் கிளர்ச்சியால் தன் ஆரவாரமிக்க சிரிப்பால் பொங்கிவழிந்திருக்கிறார்.
- சா.இலாகுபாரதி

0 comments:

Post a Comment

கோப்பு

கோப்பு