13 January 2010

எனக்குப் பிடித்த கவிதை: சென்னை சங்கமம் நிகழ்ச்சியில் வைரமுத்து பேச்சு!

Posted by Gunalan Lavanyan 12:20 AM, under | No comments

செவ்வாயன்று (12.01.2010) சென்னை பிலிம் சேம்பரில் தொடங்கிய சென்னை சங்கமத்தின் 'தமிழ்ச்சங்கமம்' நிகழ்ச்சியில் 'கவிதைக் குற்றாலம்' நூல் வெளியிடப்பட்டது. இது 2009 தமிழ்ச்சங்கமத்தில் படிக்கப்பட்ட சில கவிதைகளின் தொகுப்பு. நூலின் முதல் படியை கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட கவிஞர் கனிமொழி பெற்றுக்கொண்டார். திருமதி இராஜாத்தி அம்மையார் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கிவைத்தார். செய்தித் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி தலைமை வகித்தார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார். முன்னதாக கவிஞர் இளையபாரதி வரவேற்க, நிகழ்ச்சியின் முடிவில் கவிஞர் முத்தமிழ் விரும்பி நன்றி கூறினார்.
விழாவில் பேசியவர்கள் சென்னை சங்கமத்தின் ஒருங்கிணைப்பாளர் கனிமொழியை பாராட்டு மழையிலும் வாழ்த்து மழையிலும் நனைத்துவிட்டார்கள்.
நூலை வெளியிட்டுப் பேசிய கவிஞர் வைரமுத்து புத்தகத்தில் உள்ள இரண்டுமூன்று கவிதைகளை மேற்கோள் காட்டி பாராட்டியும் பொருள் குற்றம் உள்ள கவிதையைச் சுட்டிக்காட்டியும் பேசினார்.

பாராட்டிய கவிதை:

புளி இருந்த பாணை

எனக்கு நன்றாய்
நினைவிருக்கிறது.
அந்த வீட்டுக்குப்
போகும்போதெல்லாம்
ஆச்சர்யத்தோடு பார்ப்பேன்.
வரிசையாய் இருக்கும்
பெரிசாய் பானைகள்.
பழம்புளிக்கு இரண்டு.
இனிப்புக்கு ஒன்று.
உருட்டி உருட்டி,
புளி எடுத்து
ஊரே மணக்க
அந்த அம்மாள்
புளிக் குழம்பு வைத்தால்
அதற்காகவே
ஒரு தட்டுச் சோறு
அதிகம் சாப்பிடலாம்.
ரசம்
இனிப்பாய் இருந்தால்தான்
இளையவனுக்கு பிடிக்குமென்று
தனியாய்ச் செய்வாள்.
மகன்
மறு வீடு போன அன்று
கட்டிக்கொடுத்த
புளிசாதம் சாப்பிட
சம்பந்தி வீட்டாரிடையே
சண்டையே நடந்ததாம்.
புருஷன் செத்துப் போக
பிள்ளைகள் கைவிட்டுப்போக
வீசியெறிந்த
புளிச் சக்கையாய் அவள்.
உள்ளூர்க் கோயிலின்
உற்சவத்தில்
இலவசமாய் வழங்கும்
புளிசாதப் பொட்டலங்களை
நடுங்கும் கைகளோடு
அவள்
வாங்குவதைப் பார்க்கையில்
மனசுக்குள்ளொரு கேள்வி.
‘‘அந்தப் பானைகள்
இப்போது
பரண்மேல் கிடக்குமோ?''
- ஜீவி

பொருள் குற்றம் உள்ள கவிதை:

கண்ணகி

ஏ பாண்டிய மன்னா!
பிழைப்புத் தேடி மதுரை வந்தேன்
இழந்துவிட்டேன் உன்னால்
என் கணவனை.
உயிரோடு ஒருத்திக்கு
ஒப்படைத்தேன் கணவனை
கட்டின தாலியோடு கன்னி கழியாமல்.
பொருளையெல்லாம் தொலைத்துவிட்டு
பெண்டாட்டியிடம் வந்தான்;
தருதலையை ஏற்றேன் சகிப்புத்தன்மையால்
அகமும் புறமும் அவலத்தில் ஓலமிட
அடக்கினேன் உணர்வுகளை.
ஆறுதல் அவனுக்குச் சொல்லி
காற்சிலம்பை விற்றுவா
கஞ்சியாவது குடிக்கலாம் என்று
கடைவீதி அனுப்பினேன்.
செய்யாத குற்றத்துக்கு
சாக அடித்துவிட்டாய்!
மாறாத மனதோடு மாதவி வீட்டில்
மாண்டிருந்தால்
ஊருக்காக ஒருகுரல் அழுதுவிட்டு
சுகம்தரா தாலியைத்
தூக்கி எறிந்துவிட்டு
சும்மாயிருந்திருப்பேன்.
மனம் மாறி வந்தவனை
மதுரையில் பறிகொடுத்து
துடியாய்த் துடிக்கிறேன்.
என்
துயர் நெருப்பு
சுட்டெரிக்கட்டும்
உன்னையும் உன் ராஜ்ஜியத்தையும்!
- பூரணி

இந்தக் கவிதையில் வரும் 'கன்னி கழியாமல்' என்ற வரிதான் பொருள் குற்றம் என்று கவிஞர் சுட்டினார்.
கண்ணகி கன்னி கழியாமல் இல்லை. இளங்கோவடிகள் கன்னகியையும் கோவலனையும் பற்றி குறிப்பிடும்போது அவர்கள் இருவரும் பாம்பைப் போல் பின்னிப் பிணைந்து இருந்தனர். 'நாளை விடியுமோ விடியாதோ விடிந்தால் இருப்போமோ இல்லாதிருப்போமோ என்று நினைத்து அப்படி பிணைந்திருந்தார்கள்' என்று இளங்கோவடிகள் கூறுகிறார் என்று வைரமுத்து சுட்டினார்.
இந்தமாதிரி பொருட்பிழையைத் தவிர்க்க இலக்கியத்தில் பரிட்சயம் அதிகம் வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசும்போது, "பகுத்தறிவு பாசறையிலிருந்து வந்திருக்கும் கவிஞர் கனிமொழி தலைமை தாங்கி வழி நடத்துகின்ற சென்னை சங்கமம் ஈரோட்டுப் பாதையில் செல்கிறது" என்று கூறினார். "தமிழரின் பாரம்பரியக் கலைகள் காணாமல் போய்விடுமோ ஒழிந்துவிடுமோ என்று வேதனையில் இருந்தபோது சென்னை சங்கமம் அதை மீட்டெடுத்து வருகிறது" என்று அவர் மேலும் கூறினார். வடமொழி பண்டிதர்கள் தமிழை எப்படியெல்லாம் அழிக்கப்பார்த்தார்கள் என்றும் சுட்டிகாட்டினார். மு.வ. எழுதிய 'தமிழ் இலக்கிய வரலாறு' நூலிலிருந்து அதை மேற்கோள் காட்டினார்.

கனிமொழி பேசும்போது, தமிழ்ச்சங்கமத்தை ஒருங்கிணைக்கும் கவிஞர் இளையபாரதிக்கு பாராட்டு தெரிவித்தார்.

முன்னதாக பரிதி இளம்வழுதி பேசும்போது, "நான் தலைவர் கலைஞர் வழி நடப்பவன். சொன்னதைத்தான் சொல்வேன்; செய்வதைத்தான் சொல்வேன். அதனால் சுருக்கமாக என் பேச்சை முடித்துக்கொள்கிறேன்" என்று கூறி தன் பேச்சை முடித்துக்கொண்டார். அதற்குமுன், கவிஞர் கனிமொழியை தங்கை என்று அன்புகாட்டி பாராட்டினார்.
கவிஞர் கனிமொழியை எத்தனை முறைவேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் பாராட்டலாம், மக்கள் கலைகளை மீட்டெடுக்க இப்படியொரு திட்டத்தை செயல்படுத்தி வெற்றி கண்டிருப்பதற்காகவே...
நாமும் அவருக்கு வாழ்த்து தெரிவிப்போம்.
பாராட்டும் வாழ்த்தும்தான் கலைஞனை தீவிரமாக செயல்பட வைக்கும்!

நொறுக்ஸ்:

  • பிலிம் சேம்பர் மைக் அடிக்கடி மக்கர் செய்துகொண்டே இருந்தது. பேசுகிறவர்களைவிட கேட்டுக்கொண்டு இருந்தவர்களுக்கு அது பெரும் தொல்லையைத் தந்தது.
  • "நிகழ்ச்சியில் தமிழைப் பற்றி பேசியதைவிட கனிமொழியை பற்றி பேசியதுதான் சற்று தூக்கலாக இருந்தது" - இது ஒரு கவிஞரின் குரல். இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா!

0 comments:

Post a Comment

கோப்பு

கோப்பு