30 January 2010

காதலர் தினக் கொண்டாட்டம்

Posted by Gunalan Lavanyan 10:11 PM, under | No comments

வலைப்பூ உலகில் ஒரு புதிய முயற்சி - பிப்ரவரி 1 (திங்கள்) முதல் பிப்ரவரி 15 வரை காதல் ஸ்பெஷல்.



காதலித்து திருமணம் செய்தவர்கள் - இப்போது காதலித்துக்கொண்டு இருப்பவர்களுக்கு காதலில் வெற்றி பெறுவது எப்படி? காதலர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும். எப்படி காதலை வெளிப்படுத்த வேண்டும் என்று பல்வேறு டிப்ஸ்களை தர இருக்கிறார்கள். தினம் ஒரு ஜோடியாக 15 நாட்களுக்கும் 15 ஜோடிகள் காதல் டிப்ஸ் அளிக்க இருக்கிறார்கள்... இன்னும் காதல் கவிதைகள்... காதல் கடிதங்கள்... கஜிராஹோ சிற்பங்கள், காதலர்களின் புகைப்படங்கள்... மறைந்த பிரபலங்களின் உன்னதமான காதல் சங்கதிகள்... இன்னும் இன்னும் ஏராளமான பதிவுகளை பதிவேற்ற இருக்கிறேன். காதலர்கள், காதல் மணம் புரிந்தவர்கள், காதலிக்க பிரயத்தனப்படுவர்கள் எல்லோரும் நம் வலைப்பூவில் பதிவேற்றம் செய்யப்படும் பதிவுகளை படித்து உங்களது கருத்துகளை பின்னூட்டம் இடுங்கள்... விமர்சனங்கள், பாராட்டுகள், ஆலோசனைகளை வரவேற்கிறேன்...
காதலைக் கொண்டாடுங்கள்!

மிகுந்த அன்புடன்
சா.இலாகுபாரதி

28 January 2010

காதல் நதி

Posted by Gunalan Lavanyan 7:33 AM, under | No comments

பூத்த நாள்முதலாய்
வண்டுகளே மொய்க்காத
மலரைப்போல் இருந்தாய்.
நான் வந்து மொய்த்துவிட்டேன்.



உன்
மகரந்தத்திலிருந்து உறிஞ்சுகிறேன்...
ஆனாலும்,
வாற்றாது சுரக்கிறது
தேன்.

ஒரு கணம்
கண்களைப் பார்த்தேன்.
உன் கண்கள் சொன்னது...
‘நமது காதல் ஜீவநதி’ என்று...
என் கண்கள் நதியாகிவிட்டன...

என்ன செய்யப் போகிறாய்..?
முடிந்தால் கட்டிக்கொள்...
அல்லது
ஆனந்தப் பெருநதியை வழியவிடு...

26 January 2010

காதல் தோய்ந்த மனது

Posted by Gunalan Lavanyan 10:19 PM, under | No comments

கோப்பை நிறைய ஊற்றிப் பருகிய
தேனீரைப்போல்
வண்ணங்களைப் பார்க்கும்போதெல்லாம்
மனம் சப்புக்கொட்டி
சுவை கொள்கிறது.
மனதின் ஆழத்தில் ஊற்றாய்
மகிழ்ச்சி பிரவாகம் எடுக்கும்போதெல்லாம்
காட்சிக்கடலில்
வண்ணங்கள் பேரலையாய்
துள்ளி எழுகின்றன.
வாழ்க்கைப் பந்தயத்தில்
சக்கரங்களைப் பூட்டி
இளமைப் பெருவண்டியை ஓட்டுகிறபோது
வண்ணங்கள் குதிரைகளாய்
பாய்ந்தோடுகின்றன.
வண்ணங்களாலான வெளியின்
காதல் தோய்ந்த மனதில்
உயிர் அணுக்களாய்
பரிணமித்துக்கொண்டிருக்கின்றன
வண்ணங்கள் அனுதினமும்...

இந்தியாவுக்கு வெற்றி!

Posted by Gunalan Lavanyan 6:53 AM, under | No comments

3,20,61,600 மணித்துளிகள், 5,34,360 மணிகள், 22,265 நாட்கள், 3,172 வாரங்கள், 732 மாதங்கள், 61 ஆண்டுகள் (1950 - 2010)!

இந்தியாவுக்கு வெற்றி.



இந்தியா குடியரசு நாடாகி 60 ஆண்டுகள் நிறைவுபெற்ற தினம் இன்று.
இந்த குடியரசு தினத்தில் இந்தியச் சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட நமது முப்பாட்டன்களுக்கு வீரவணக்கம்!

இனியொருமுறை இந்திய மண்ணை அடிமைப்படுத்த எவனையும் அனுமதியோம் என்று உறுதிகொள்வோம்.

நாம் அனைவரும் இந்தியர்கள்.
இந்திய தேசம் நமது தாய்நாடு.
நமது தாய்நாட்டை காக்கவும்,
நம் தேசத்தின் ரகசியங்களை பாதுகாக்கவும்
நாம் அனைவரும் ஒன்றுபட்டு பாடுபடுவோம் என்று
இந்தியத் தாயின் மடியில் நின்று
இந்தியர்கள் அனைவரும் உறுதிகொள்வோம்.
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்!
வெற்றி நமதே!
இந்தியாவுக்கு வெற்றி!

24 January 2010

மழை வந்துவிட்டது இதயத்தில்!

Posted by Gunalan Lavanyan 7:54 PM, under | No comments


  • மழை வந்துவிட்டது இதயத்தில்
  • மெல்லிய இசை எழுப்பி
  • சில்லென்று பெய்கிறது...
  • தென்றல் விசும்புகிறது
  • குளிர் நடுங்குகிறது
  • செடிகளில் பூக்கள் சிரிக்கின்றன...
  • பச்சைப் பச்சையாய் புல்வெளிகள்
  • கால்களை வருடி சிலிர்க்கின்றன.
  • தெரு ஓடையில் மிதக்கிறது
  • காகிதக் கப்பல் - காதல் கடிதம்.
  • பறவைக் குஞ்சுகள்
  • சிறகுகளில் ஒளிந்துகொண்டு
  • கீச்ச்... கீச்ச்... கீச்ச்...
  • முளைக்கத் தொடங்கியிருந்தன
  • மழைக் குடைகள்...
  • டீசல் வழிந்த சாலைகளில் வானவில்
  • நெப்பந்தஸ் மழைத்துளிகளை
  • ஜீரணித்து ஏப்பம் விட்டது & டப்
  • ஆர்மோன் மாற்றத்தால்
  • மழை விட்டுவிட்டு பெய்தாலும்
  • தூவானம் இருக்கும்.
  • இதயம் நின்றுபோகும்சமயம்
  • ஓய்ந்தாலும்
  • வேறு இதயத்தில் பெய்யும்
  • மழை

சாவுக்கு அஞ்சுபவர்கள் சத்தியமாக படிக்க வேண்டாமே!

Posted by Gunalan Lavanyan 12:58 AM, under | No comments

மரணக் குறிப்புகள்...

நேற்று காலை முழுக்க
என் வீட்டு
தோட்டத்தையே
சுற்றிச்சுற்றி வந்த
பட்டாம்பூச்சி
இன்று அந்த
அடர்ந்த முட்புதரில் சிக்கி
உயிர் நீத்துக் கிடந்தது.

சாலையின்
குறுக்கும் நெடுக்குமாய்
போய் வந்துகொண்டிருந்த
நாய்க் குட்டி
ஏதோ வாகனத்தின்
டயர் பதிந்த
அடையாளத்தோடு
நசுங்கிக் கிடந்தது.

சிலந்தி பின்னிய
வலையின் இடையே
ஈயின் மரணம்.
பிறிதொரு நாளில்
வீட்டை ஒட்டடை அடித்ததில்
நசிங்கிப்போனது
ஈயும் வலையும்.

சாலையோர மரத்தை
வெட்டிச் சாய்ந்ததில்
கூடு உடைந்து
சிதறிப்போனதிலிருந்து
செத்துக் கிடந்தது
காக்கைக்குஞ்சு.

மகுடியின் நாதத்திற்கு
படமெடுத்து ஆடும் பாம்பு
ஒரு நாளில்
மரக்கிளையில் தொங்கியபடி
நாதமில்லாது ஆடிக்கொண்டிருந்தது
காற்றோடு.

இப்படி
எல்லா நேரங்களிலும்
எல்லா இடங்களிலும்
ஏதோவொரு வகையில்
நிகழ்ந்துவிடுகிறது
மரணம்
யாருக்காகவும் எதற்காகவும்
காத்திருப்பது இல்லை.
நாம் எல்லோரும்
காத்திருக்கிறோம்
மரணத்திற்காக.

- சா.இலாகுபாரதி

2005-ல் 'கூட்டாஞ்சோறு' சிறுபத்திரிகை நடத்திய பரிசுப் போட்டியில் தேர்வு பெற்ற கவிதை.

23 January 2010

திருமணம் முடித்த ஆண்கள் கவனத்துக்கு...

Posted by Gunalan Lavanyan 7:25 AM, under | 1 comment

இறக்க நேரிட்டால்...

காலம் சென்ற
என் நண்பரின் படத்திற்கு
பூவும் பொட்டும்
வைத்தார்கள்.
கணவனை இழந்த
அடையாளம் என்று சொல்லி
அவர் இணை
இனி அவையெதுவும்
இல்லாமல் வெறுமனேயே
இருக்கவேண்டும் என்றார்கள்.




நானும்கூட
ஒருநாள் இறக்க நேரிட்டால்
என் படத்திற்கான
பூவையும் பொட்டையும்
என் இணைக்கு
கொடுங்கள்...

அவையெதுவும்
நான் அவளை
மணந்ததற்கான
அடையாளச் சின்னங்கள் அல்ல.
அதற்கு முன்பாகவே
அவையாவும் அவளின்
பயன்பாட்டுப் பொருட்கள்.

- சா.இலாகுபாரதி

2004-ல் எழுதிய கவிதை.

அப்போது எனக்கு திருமணம் ஆகவில்லை.
ஆனால், இப்போது திருமணத்துக்குப்பின்னும் 
இதே கருத்தில்தான் இருக்கிறேன்.

22 January 2010

புத்தகம் படிப்பவர்கள் ஜாக்கிரதை! மருத்துவர் தரும் எச்சரிக்கை டிப்ஸ்...

Posted by Gunalan Lavanyan 4:01 PM, under | 3 comments

மனிதனின் கற்றல் அறிவு நாள்தோறும் புதிய புதிய வாசிப்பை நோக்கி முன்னேறிக்கொண்டே இருக்கிறது. அதனால் சிலர், அதீதமான
ஆர்வக்கோளாறினால் புத்தகத்தைப் பிரித்தால் கடைசி அட்டை வரை படித்தே தீருவது என்று 'புத்தகமும் கையுமாக' தங்கள் வாசிப்புத்
தாகத்தைக் தணிக்க முயல்கிறார்கள்.
அவர்கள்தான், பயணத்தின்போது வாசித்தல், படுத்துக்கொண்டே வாசித்தல், சாப்பிடும்போது வாசித்தல், தொலைக்காட்சி பார்க்கும்போது
வாசித்தல் என்று இயல்பை மீறின நிலைக்குப் போய்விடுகிறார்கள்.
இதனால் அறிவுப் பெருக்கம் ஒருபுறம் நடந்தாலும் இப்படி 'புத்தகப்புழு'வாக இருப்பவர்களுக்கு நாளடைவில் கண்கோளாறுகள் ஏற்படும்
வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவ அறிவியல் தெரிவிக்கிறது.
சுவர் இருந்தால்தானே சித்திரம் வரையமுடியும். கண் இருந்தால்தானே படைப்புகளை நாம் பார்க்கமுடியும்.
'ஆரோக்கியமான வாசிப்பு முறை எப்படி இருக்கவேண்டும்?' என்பது குறித்து சென்னை, ராஜன் கண் மருத்துவமனையின் மருத்துவ
இணை இயக்குநர் டாக்டர் சுஜாதா மோகன் கூறுகிறார்.


''சாப்பிட்டுக்கொண்டே படிப்பது
படுத்துக்கொண்டே படிப்பது
பயணத்தின்போது படிப்பது
கண்களுக்கு ஆரோக்கியமா?"

"நிச்சயமாக ஆரோக்கியம் அல்ல!" என்று ஆரம்பித்தார் டாக்டர் சுஜாதா மோகன்.

"அதுமட்டுமல்ல... இந்தப் பழக்கவழக்கங்கள் எல்லாம் உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது அல்ல என்றுதான் சொல்வேன்!

பெரும்பாலும் பள்ளி/கல்லூரி மாணவர்கள்தான் படுத்துக்கொண்டே படிப்பது, சாப்பிட்டுக்கொண்டே படிப்பது என்று ஈடுபடுகிறார்கள்.
அந்த வயதுக்காரர்களுக்குத்தான் கண் பார்வை தெளிவாக சீராக இருக்கும். அவர்களால் எப்படியும் படிக்கமுடியும்... பார்க்கமுடியும். இது
டீன் ஏஜ்காரர்களுக்கு இயற்கை அளித்த வரம்.

ஆனால், குப்புறப் படுத்துக்கொண்டும் மல்லாந்து படுத்துக்கொண்டும் படிப்பதால் கண்களுக்கு அயர்ச்சி ஏற்பட்டு, தூக்கம் கண்களை
முட்டும். அப்போது கண்கள் அசாதாரண நிலையில் இருக்கிறது என்பதை உணரவேண்டும். தொடர்ந்து அதே வழக்கத்தை அவர்கள்
பின்பற்றினார்கள் என்றால், கண்களில் ஈரப்பதன் குறைந்து DRY EYES என்ற நிலை ஏற்படும். கண் சோர்வடைதல், தலைவலி
முதலான பிரச்னைகள் ஆரம்பமாகும். பிற்காலத்தில் கண்ணாடி இல்லாமல் எந்த எழுத்தையும் படிக்கமுடியாத நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.


படுத்துக்கொண்டே படிப்பதால், உடல் ஆரோக்கியம் குறையும் வாய்ப்பு உள்ளது. கழுத்து வலி, இடுப்பு வலி, முதுகு வலி போன்ற பல
இன்னல்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். இந்த மாற்றம் உடனே தெரியாது. போகப் போக பார்வையில் கோளாறு ஏற்பட்டு, நாற்பது
வயதுக்குப் பிறகு, கண்ணாடியின் துணையின்றி இயங்கமுடியாத நிலைக்கு பாதிப்பு அடைவார்கள்.

அதேமாதிரி, பொழுதுபோக வேண்டுமே என்று சிலர் பஸ், ஆட்டோ, ரயில் பயணத்தின்போது புத்தகம் வாசிக்கும் பழக்கம்
வைத்திருக்கிறார்கள். அப்படிப் படிக்கும் சூழ்நிலையில் சீரான வெளிச்சமும் இருக்காது. பிரயாணக் குலுக்கலால் புத்தகத்துக்கும்
கண்களுக்கும் தேவையான இடைவெளியை நிரந்தரமாக வைத்திருக்க முடியாது. எழுத்துகள் ஒன்றன்மேல் ஒன்று விழுந்து,
விழித்திரையிலும் அந்த எழுத்துகள் அலைபாய்ந்து, ஒரே இடத்தில் குவியாமல் காட்சிப்பிழை ஏற்பட்டு, மூளை தடுமாற்றம் அடையும்.
அதையும் மீறி வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு, விரைவில் பார்வைத் தடுமாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்
இருக்கின்றன.

பயணத்தின்போது படிக்கிறவர்களுக்கு தலைவலி, கழுத்துவலி, வயிற்றைப் பிறட்டுதல், வாந்தி, மயக்கம் போன்ற அறிகுறிகள்
தென்படும். அப்போது, மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று தகுந்த சிகிச்சையை மேற்கொள்வது நல்லது.

சில குழந்தைகள் டி.வி. பார்த்துக்கொண்டே படிப்பார்கள்; சாப்பிட்டுக்கொண்டே படிப்பார்கள். இளைய வயதினரும் இந்தப் பழக்கத்துக்கு
விதிவிலக்கு அல்ல. அப்படிப் படிப்பவர்கள் இருபத்து ஐந்து வயதுக்கு உட்பட்டவர்களாக இருப்பார்கள்.

இப்படி 'வாயில் சாப்பாடு, கையில் புத்தகம்' தவறான பழக்கம் என்று பெரியவர்கள் பிள்ளைகளுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும்.
இல்லையென்றால் பின்னால் நிகழப்போகும் இடர்ப்பாடுகளை சந்திக்கப்போவது பெற்றோர்கள் இல்லை; பிள்ளைகள்தான்! இந்தப்
பழக்கம் உள்ளவர்களுக்கு, நாற்பது வயதைக் கடக்கும்போது, மெதுவாக கவனச் சிதைவு ஏற்பட்டு, பார்வைத் தெளிவு இழந்து 'ரீடிங்
கிளாஸ்' போடவேண்டிய கட்டாயம் ஏற்படும்!

தொடர்ந்து புத்தகம் படிக்கும் ஆர்வம் உள்ளவர்கள், சீரான வெளிச்சத்தில் படிக்கவேண்டும். டியூப் லைட் வெளிச்சமே போதுமானது.
அந்த வெளிச்சம் நமக்கு இடது புறத்திலிருந்து வருவது மாதிரி பார்த்துக்கொள்ள வேண்டும். அது ஆரோக்கியமான வாசிப்புக்கும், சீரான
கண்பார்வைக்கும் நல்லது. நீண்டநேரம் படிப்பவர்கள் 'டேபிள் லைட்' உபயோகிப்பது சரியாக இருக்கும்.

ஜன்னல் வழியாக வரும் சூரிய வெளிச்சத்தோடு, மின் விளக்கையும் எரியவிட்டு புத்தகத்தின் மேல் தேவைக்கு அதிகப்படியான
ஒளியையும் உண்டாக்குவது கூடாது. வயது கூடக்கூட கண்ணுக்குத் தேவையான வெளிச்சத்தில்தான் படிக்க வேண்டும். காலை
அல்லது மாலை நேர சூரிய வெளிச்சத்தில் வாசிப்பது கண்களுக்கு ஆரோக்கியம். கண்களில் ஈரப்பதன் குறைந்து வறட்சி ஏற்படும்
சமயங்களில் கண் மருத்துவரின் ஆலோசனை பெற்று சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இவையெல்லாம் சரியாக நிகழும்பட்சத்திலும்கூட உணவு முறைகளில் சத்தான காய்கறிகளைச் சேர்த்துக்கொண்டால்தான் சிறுசிறு
பார்வைக் குறைகளையும் தவிர்க்க முடியும். நாள்தோறும் நாம் சாப்பிடுகின்ற உணவில், ஐந்து நிறங்களில் காய்கறிகளை
சேர்த்துக்கொள்ள வேண்டும். கேரட், பீட்ரூட், கீரை, மீன், பால், முட்டை, பப்பாளி போன்ற A வைட்டமின் சத்துள்ள உணவுப்
பொருட்கள் கண் பார்வைக்கு நல்லது. இந்த உணவுமுறையைக் கடைபிடித்து வந்தால் 'கற்றல் அறிவு'க்குச் சுவைகூடும்!" என்று
சொல்லிவிட்டு நம்மிடமிருந்து விடைபெற்றார் டாக்டர் சுஜாதா மோகன்.

- சா.இலாகுபாரதி

காதலிப்பவர்கள் மட்டும் கவனியுங்கள்...

Posted by Gunalan Lavanyan 6:30 AM, under | 2 comments

அந்த ஓடைக்குப் போனால்
அதில் நான் இறங்குவதேயில்லை...
கால்களால் எப்படி இறங்குவது
அது தேவதை குளித்த தீர்த்தம்!

தேவதை ஓடுகிறாள்
காற்சலங்கை கழன்று வீழ்கிறது
செத்துவிட்டது இசை.

அரிசிமாவில் கோலம் போட்டு
எறும்புக்கு காட்டுகிற கரிசனத்தில்
கொட்டும் பனியில்
ஒளிந்திருந்து பார்க்கிற
எனக்கு கொஞ்சம் காட்டக்கூடாதா?
கடைக்கண் பார்த்து...



அவள் ஆண் சாமி
கோயில்களுக்குப் போவதில்லை!
‘என் புருஷனை மயக்கிவிடாதே’ என்று
பெண் சாமிகள்
சண்டைக்கு வருகின்றன
ஆதலால்...

பழத்திலேயே
தக்காளிதான் அழகு!
அதுதான்
அவளைப் போலவே இருக்கிறது...

- சா.இலாகுபாரதி

21 January 2010

சினிமா பார்க்கப் போகிறவர்கள் ஒரு நிமிடம் இதைப் படித்துவிடுங்கள்!

Posted by Gunalan Lavanyan 9:53 PM, under | 1 comment

ஐனாக்ஸ் – மயிலாப்பூர்
(சினிமா பார்க்கப் போகிறவர்கள் ஒரு நிமிடம் இதைப் படித்துவிடுங்கள்!)

இந்தியாவிலேயே மிக அதிகமான திரைகளைக் கொண்ட நிறுவனம் ஐனாக்ஸ் லீஸுர் லிமிடெட் (Inox leisure ltd). இந்தியா முழுக்க 19 நகரங்களில் 101 திரைகளை ஐனாக்ஸ் கொண்டிருக்கிறது. மிக அதிகமான ஐனாக்ஸ் தியேட்டர்கள் ஷாப்பிங் மால்களில்தான் இருக்கின்றன. சென்னையிலும் சிட்டி சென்டர் ஷாப்பிங் மாலில்தான் ஐனாக்ஸ் இருக்கிறது. மொத்தம் நான்கு ஸ்க்ரீன்கள். முக்கியமான எல்லா மொழிப் படங்களும் காட்சியிடப்படுகின்றன.

ஐனாக்ஸில் பிலிம் சுருள்களின் மூலம்தான் படங்கள் திரையிடப்படுகின்றன. டிஜிட்டல் முறையைவிட பிலிமில் ஓடும் படங்கள்தான் கிளாரிட்டியாக இருப்பதாக ஐனாக்ஸ் நிறுவனம் கூறுகிறது. பிலிம் மூலம் படம் திரையிடுவதால் தயாரிப்பாளர்களுக்கு செலவு சற்று அதிகம் என்றாலும், பார்வையாளர்களுக்கு துல்லியமான காட்சியை இதனால் தரமுடிகிறது என்று கூறுகிறார் சென்னையின் பொது மேலாளர் விவேக் வெட்டாத் (Vivek vettath). தவிர துல்லியமான ஒலி எழுப்பும் DDs சவுன்ட் எஃபெக்ட்ஸ் இங்கு உள்ளது.

லாபியிலிருந்து தியேட்டர் வரை முழுக்க கார்பெட், ஏசி. ஐனாக்ஸுக்கே சொந்தமான கான்டீன் என்று உயர்தரமான ஒரு தியேட்டராக ஐனாக்ஸ் திகழ்கிறது.

ஐனாக்ஸ் பிட்ஸ்
  • ஐனாக்ஸ் வருபவர்கள், சிட்டி சென்டரில் ஃபுட் கோர்ட், லேன்ட்மார்க், வியர்ஸ் ஷாப்பிங் என்று போகும் வசதி.
  • தியேட்டருக்கு வருபவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள்.
  • அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட கிரிஸ்ட்டி புரொஜக்டர்தான் மூலம்தான் இங்கு படங்கள் திரையிடப்படுகின்றன.
  • சர்வதேச ஆலோசகர்களின் பரிதுரைப்படி அமைக்கப்பட்ட ஆடிடோ ரியம்.
  • நான்கு தியேட்டர்களிலும் ஒரே நேரத்தில் மொத்தம் 900-க்கும் அதிகமானவர்கள் அமர்ந்து படம் பார்க்க முடியும்.
  • வென்டர் டிக்கெட் புக்கிங் வசதி இந்தியாவிலேயே ஐனாக்ஸில் மட்டுமே இருக்கிறது. தவிர ஆன்லைன் புக்கிங், டிக்கெட் ஹோம் டெலிவரி வசதியும் இருக்கிறது.

டிக்கெட் ரேட்: ரூ.10, ரூ.120

- சா.இலாகுபாரதி

சென்னைக்கு வருகிற சுற்றுலா பயணிகளுக்கு பெஸ்ட் ஸ்பாட்!

Posted by Gunalan Lavanyan 8:09 AM, under | 2 comments

மாயாஜால் - கிழக்கு கடற்கரைச் சாலை



திருவான்மியூரிலிருந்து 30 கிலோமீட்டர் தூரத்தில், கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கிறது. இந்தியாவிலேயே முதன்முறையாக மேற்கத்திய பாணியில் பல வசதிகளுடன் கூடிய முதல் திரையரங்கம்; 10 ஸ்க்ரீன்கள். எந்த நேரத்திலும் படம் பார்க்கக்கூடிய வசதி. டிஜிட்டல் கியூப் டெக்னாலஜியில் திரையிடப்படும் படங்கள். டிடிஎஸ் சவுன்ட் சிஸ்டம். ஸ்டெப்ஸ் டைப்பில் வசதியான இருக்கைகள் என்று நவீன ‘மாயலோகம்’தான் மாயாஜால்.

தமிழ், மலையாளம், இந்தி, ஆங்கிலம் என மக்கள் அதிகமாகப் பார்க்கிற மொழிப் படங்கள் ஸ்க்ரீன் செய்யப்படுகின்றன. இந்தியாவில் முதன்முறையாக போனிலேயே டிக்கெட் புக் செய்யும் வசதி இங்கிருக்கிறது. இது மொபைல் கஸ்டமர் கேருக்கு கால் செய்வதுபோல மிகச் சுலபம். 044-43436565 என்ற நம்பரை டையல் செய்தால் கம்யூட்டரில் பதிவுசெய்யப்பட்ட குரல் டிக்கெட் புக்கிங்குக்கு வழிசொல்லும். தவிர, ஆன்லைன் புங்கிங், ஹோம் டெலிவரி வசதியும் உண்டு.



ஸ்க்ரீனிங்ஸ், ப்ளேயிங்ஸ், ஷாப்பிங்ஸ், ஈட்டிங்ஸ், ஸ்விம்மிங்ஸ், டிரிங்கிங்ஸ், ஸ்லீப்பிங்ஸ் என்று வாழ்க்கையைக் கொண்டாட நினைப்பவர்களுக்கு இவை அத்தனையும் இங்கு உண்டு. சுருக்கமாக ஒரு சொர்க்கபுரிதான் மாயாஜால்.
நாள்முழுக்க இங்கேயே செலவழிக்கும் அளவுக்கு நிறைய பொழுதுபோக்கு அம்சங்கள். இன்டோர் கேம்ஸ், கிரிக்கெட் கிரவுன்ட், ஷூட்டிங் ஸ்பாட், ரிசார்ட் என்று
27 ஏக்கரில் ஒரு வளர்ந்த நவீன கிராமம். 1500 கார்கள் வரை பார்க்கிங் செய்யும் வசதி.



செட்டிநாடு முதல் சைனீஸ் புட்ஸ் வரை எல்லா வகையான உணவும் கிடைக்கும் புட்கோர்ட்டும் இருக்கிறது. சென்னைக்கு வருகிற சுற்றுலாப் பயணிகளுக்கு பெஸ்ட் ஸ்பாட்.

மாயாஜால் பிட்ஸ்
  • கமல் நடித்த ‘தசாவதாரம்’ படம் தினமும் 48 காட்சிகள் மாயாஜாலில் திரையிடப்பட்டிருக்கிறது.
  • எந்திரன் படத்தின் சில காட்சிகள் இங்கு படமாக்கப் பட்டிருக்கின்றன.
  • சர்வதேச அளவில் விளையாடப்படும் ‘பெயின்ட்பால்’ கேம் இங்கு ஸ்பெஷல்.
  • 100க்கும் மேற்பட்ட விளையாட்டுகள் உள்ளன.
  • மாயாஜால் ரிசார்ட்டில் உள்ள பாருக்குள் நுழைந்தால் காட்டிற்குள் நுழைந்த ஒரு ஃபீலிங்கோடு மது அருந்த முடியும்.
  • வீட்டுக்குத் தேவையான ஹவுஸ் ஹோல்ட் திங்க்ஸும் இங்கு பர்ச்சேஸ் செய்யலாம்.


டிக்கெட் ரேட்: ரூ.10, ரூ.120 

20 January 2010

இதய நோயாளிகள் இதைப் படிக்கவேண்டாம் ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்!

Posted by Gunalan Lavanyan 10:12 PM, under | 1 comment

அபிராமி மெகா மால் – புரசைவாக்கம்


தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக அபிராமி மாலில்தான் படுத்துக்கொண்டே படம் பார்க்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. சீட்டிலிருந்தே பட்டன் அழுத்தினால், தேடி வந்து ஸ்னாக்ஸ், டிரிங்க்ஸ் ஆர்டர் எடுப்பார்கள். இந்தியாவிலேயே முதன்முறையாக இங்குதான் டிஜிட்டல் புரொஜக்ஷன் கொண்டுவரப்பட்டது. மொத்தம் 4 தியேட்டர்கள். இதில் ஸ்ரீ அன்னை அபிராமி, சீன கலாசார பாரம்பரியத்தோடு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தியேட்டருக்குள் நுழைந்தாள் முழுக்கமுழுக்க சீனாவிலேயே படம் பார்க்கும் மனநிலை வந்துவிடும். இதேபோல் சொர்ண சக்தி, எகிப்திய பாரம்பரிய முறைப்படி அமைக்கப்பட்ட திரையரங்கம். இப்படி கலாசார முறைப்படி தியேட்டர் அமைக்கப்பட்டு இருப்பது இந்தியாவிலேயே இங்குதான் முதன்முறை. தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக காருக்கு லிஃப்ட். இப்படி நிறைய முதன்முறை சிறப்புகள் அபிராமியில் உண்டு.



மாலுக்கு ஷாப்பிங் வருபவர்கள் படம் பார்க்கலாம். படம் பார்க்க வருபவர்கள் ஷாப்பிங் செய்யலாம். இங்கு உள்ள ஃபுட் கோர்ட்டில் எல்லாவித உணவுகளும் கிடைக்கும். கிஸ்ஸிங் கார்; கிட்ஸ் வேர்ல்ட், ஃபிஷ் வேர்ல்ட், ஸ்னோ வேர்ல்ட் என அல்டிமேட் என்டர்டெய்ன்மென்ட் இங்கு உண்டு. மெகா ஸ்னோ வேர்ல்டில் நுழைந்தால் இடி, மின்னல், புயல், ஐஸ் மழை என குளிர் பிரதேசங்களில் மட்டுமே ஏற்படும் அபூர்வக் காட்சிகளைப் பார்க்கமுடியும். ப்யூரிஃபை செய்யப்பட்ட மினரல் வாட்டரால் தயாரிக்கப்பட்ட ஐஸ் வேர்ல்ட் இந்த ஸ்னோ வேர்ல்ட். இந்த ஐஸை சாப்பிடவும் செய்யலாம். அவ்வளவு சுத்தம்.



மெகா மாலின் மற்றுமொரு ஸ்பெஷல் Horror House இது திட்டமிடப்பட்ட திகில் வீடு. குழந்தைகளுக்கும், இதய நோயாளிகளுக்கும் இந்தப் பேய் வீட்டுக்குள் அனுமதி இல்லை. உள்ளே போய் வருபவர்கள் பேய் அறைந்த மாதிரிதான் வெளியே திரும்புவார்கள். அவ்வளவு திகில். உண்மையைப் போல அமைக்கப்பட்ட பொய்தான் இந்த Horror House. சாகஸக்காரர்களுக்கு சரியான இடம்.

அபிராமியில் இன்னொரு ஸ்பெஷல், 4D தியேட்டர். 2D, 3D கேள்விப்பட்டு இருக்கிறேன். அது என்ன 4D என்கிறீர்களா? இந்தத் தியேட்டரில் திரையிடப்படும் படங்கள் மொத்தம் 18 நிமிடங்கள்தான் ஓடும். படத்தில் ஹீரோ வில்லனை
ஒரு குத்து விட்டால் படம் பார்க்கும் நமக்கும் குத்து விழும். அழகான தேவதை ஒருத்தி ஜாஸ்மீன் சென்ட் அடித்துக்கொண்டால் நம்முடைய மூக்கை மல்லிகை வாசனை துளைக்கும். படத்தில் மழை வந்தால் நாம் நனைந்துவிடுவோம். இதுதான் 4D. இந்தப் படங்களை இஸ்ரேலிலிருந்து வரவழைக்கிறோம் என்கிறார் தியேட்டர் உரிமையாளர் அபிராமி ராமநாதன்.

அபிராமி மெகா மால் பிட்ஸ்
  • நுழைவாயில் முதல் டாய்லெட் வரை எங்கு திரும்பினாலும் ஏசி மயம். சென்டர்லைஸ்டு செய்யப்பட்ட ஏசி.
  • அபிராமியில் இரண்டு தியேட்டர்கள் 5 ஸ்டார் வசதிகள் கொண்டது.
  • இந்தியாவிலேயே முதன்முறையாக (1992-ல்) ஆன்லைன் டிக்கெட் புக்கிங் அறிமுகப்படுத்தப்பட்ட தியேட்டர்.
  • மால் முழுக்க சுற்றிப்பார்க்கவும் சாப்பிடவும் பேக்கேஜ் வசதி இருக்கிறது.
  • அபிராமி தியேட்டர் ஆரம்பித்த 33 வருடங்களில், திரையிடப்பட்ட படங்களில் 240 படங்கள் 100 நாட்களைக் கடந்து வெற்றிபெற்ற படங்கள்.


டிக்கெட் ரேட்: ரூ.10, ரூ.70, ரூ.90, ரூ.120

‘உம்மா உம்மம்மா’வுக்கு ஜாலி!

Posted by Gunalan Lavanyan 6:01 AM, under | No comments





சத்தியம் காம்ப்ளெக்ஸ் – ராயப்பேட்டை

தியேட்டருக்குள் நுழைந்தால் ஸ்டார் ஹோட்டலில் கால் வைப்பதுபோல் பிரமிப்பு. ‘குளுகுளு’ சென்டர்லைஸ்ட் ஏசியோடு, திரும்பிய பக்கமெல்லாம் எல்.சி.டி. டிஸ்ப்ளேவில் அப்டேட்டாகும் சினிமா விளம்பரம். டாய்லெட்டில்கூட சின்னச் சின்ன டிஸ்ப்ளேஸ். இப்படி விளம்பரத்திலும் பல புதுமைகளைக் கையாள்கிற சத்தியம், நவீன வசதிகளோடு இயங்கும் இந்தியாவின் முன்னணி திரையரங்கம்.


சென்னையின் பிரதான இடமான அண்ணா சாலையிலிருந்து மிக அருகாமையில் இருப்பது தியேட்டரின் ப்ளஸ். இது ஒரு மல்டிப்ளக்ஸ் தியேட்டர் என்பது கூடுதல் சிறப்பு. ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட், டோ லிவுட் என்று எல்லா மொழிப் படங்களும் ரிலீஸாகும் அதே தினத்திலேயே திரையிடப்படுவது அடிஷனல் ப்ளஸ்.

சத்தியமில் உள்ள 6 தியேட்டர்களும் ஃப்லிம் சுருள் இல்லாமல், 2D டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இயங்குகின்றன. இங்கு 3D-Rdx அனிமேஷன் படங்கள் திரையிடக்கூடிய அளவில் நவீன வசதிகள் செய்யப்பட்டு இருக்கின்றன. சவுண்ட் எஃபெக்ட்ஸில் DDsஸைவிட அட்வான்ஸ் டெக்னாலஜியை சத்தியம் கையாள்கிறது.

சத்தியமில் டிக்கெட்டுக்காக கியூவில் நிற்கவேண்டிய அவசியமே இல்லை. ஆன்லைன் புக்கிங், போன் புக்கிங் மூலம் வீட்டிலிருந்தபடியே முன்பதிவு செய்யமுடியும். எந்த சீட் வேண்டும் என்பதைக்கூட ஆன்லைனில் தீர்மானிக்கமுடியும். அப்படியே சூடாக ஸ்னாக்ஸ், ஹாட் டிரிங்ஸ், ஜில்லென்று கூல்டிரிங்ஸ்கூட ஆன்லைனில் ஆடர் செய்யலாம். படம் ஓடிக்கொண்டு இருக்கும்போது இவையெல்லாம் இருக்கையைத் தேடி வந்துவிடுவது கதையைவிட்டு வெளியே போகாமல் இருக்க பார்வையாளர்களுக்கு சூப்பர் சாய்ஸ்.

 

தியேட்டருக்கு எந்த நேரம் வேண்டுமானாலும் போகலாம். படம் ஆரம்பிப்பதற்கு ஒரு மணிநேரம் முன்பாகவே போனால்கூட கவலையில்லை. அந்த ஒருமணி நேரத்தை விளையாடியே கழிக்கலாம். ஆமாம்! ‘ப்ளர்’ என்ற கேமிங் இங்கு உண்டு. இதில், ஸ்னோ பவுலிங், இன்டர்னெட் கேம்ஸ், வீடியோ கேம்ஸ், கார் ரேஸ், ஷூட்டிங் என்று குட்டீஸ் முதல் தாத்தாஸ் வரை யாரும் விளையாடலாம். குழந்தைகளுக்கு ஸ்பெஷலாக ‘மேஜிக் ஹேட்’. உம்மா குழந்தை, உம்மம்மா குழைந்தைக்கெல்லாம் இது ஜாலி டைம்பாஸ்.

விளையாடிவிட்டு அசதியாக இருந்தால் ‘எக்ஸ்டஸி’க்கோ ‘ப்ளர் கஃபே’வுக்கோ போய் சாக்லேட், ஐஸ்கிரீம், ஸ்னாக்ஸ், டிஃபன் என்று எதையாவது வயிறு முட்டத் மேய்ந்துவிட்டு ஹாயாக சினிமா போகலாம்.

இனி, பொழுதுபோகவில்லை என்று யாராவது சொல்லமுடியுமா?

சத்தியம் பிட்ஸ்
  • ‘S’ - விளம்பரங்களுடன் வெளிவரும் சத்தியமின் இலவச மேகஸின்.
  • இலவச பார்க்கிங் வசதி இங்கு உண்டு.
  • விரைவில் ஏழாவது ஸ்க்ரீன் வரப்போகிறது.
  • சினிமா ரசிகர்களுக்காகவே டெபிட் கார்ட் மாதிரி fuel card.
  • ப்ளரிலும் கேமிங்குக்கு தனி ரீசார்ஜ் கார்ட்.

  டிக்கெட் ரேட்: ரூ.10, ரூ.100, ரூ.110, ரூ.120

- சா.இலாகுபாரதி

19 January 2010

காதலிக்காதவர்கள் படிக்கவேண்டாம்!

Posted by Gunalan Lavanyan 11:33 PM, under | No comments

அன்பிற்கினியவளே,

இப்போதும் நான் உன் கூந்தலைப் பற்றிதான் யோசித்துக்கொண்டிருக்கிறேன். அதுயெப்படி நான் பார்க்கிற ஒவ்வொரு முறையும் உன் பார்வையைப் போலவே, உன் ஸ்பரிஸத்தைப் போலவே, உன் சிரிப்பைப் போலவே உன் கூந்தலும் புதுப் பொலிவோடும் புது அழகோடும் எனக்குக் காட்சித் தருகிறது; தெரியவில்லை.

நக்கீரர் காலத்திலிருந்தே கேட்டுவருகிறார்கள், ‘வாசனை மிகுந்த பூக்களைச் சூடுவதால் கூந்தலுக்கு மணம் வருகிறதா..? அல்லது இயற்கையிலேயே கூந்தலிலிருந்து வாசனை வழிகிறதா?’ என்று.

இத்தனை நூறு ஆண்டுகளுக்குப் பிறகு நீ பிறப்பாய் என்று தெரிந்திருந்தால், ‘வாசனை மிகுந்த பூக்களைச் சூடுவதால்தான் கூந்தலில் மணம் கமழ்கிறது’ என்று நக்கீரர் சொல்லியிருப்பாரா?
உன் கூந்தலிலிருந்து வழியும் வாசனை எப்படி வருகிறது என்பதில் எனக்கும் சந்தேகம்தான். ஆனால், (ஷாம்)பூவால்தான் வருகிறது என்பது மட்டும் இல்லை என்று எனக்கு நிச்சயம் தெரியும்.


அன்றொருநாள் பார்த்தேன், வாசனையற்ற பூக்களைச்  சூடிக்கொண்டு தெருவலம் வந்துகொண்டிருந்தாய். தெருவில் இருப்பவர்களின் பார்வை மொத்தமும் உன் கூந்தலைச் சுற்றிதான் வட்டமடித்துக் கொண்டிருந்தது. இந்த மாதிரி ஒரு வாசனையை நான் வாங்கிய எந்த வாசனை திரவியங்களிலிருந்தும் நுகர்ந்தது இல்லை. பார்த்த எந்தப் பூக்களிலிருந்தும் சுகித்தது இல்லை. வாசனையற்ற பூ, கூந்தலிலோ இயற்கையிலேயே மணம் இல்லையாம்! பின் எப்படி மணங்கமழும் கூந்தல்?!

நீ பூக்காரியிடம் பூ வாங்கும்போது பார்த்திருக்கிறேன். உன் கூந்தலின் ஓரம், ஓர் இடம் கிடைக்காதா என்று பூக்களெல்லாம் பிரயாசைப்பட்டு பெருமூச்சு விடுவதை.
அப்படி எத்தனை வயதுதான் ஆகிறது உன் கூந்தலுக்கு..? பதினெட்டு வயதாகிய உன்னைப் போலவே உன் கூந்தலும் இன்னமும் வயதுக்கு வராதது போலவே இருக்கிறதே!

நான் முதன்முதலாய் உன் கூந்தலுக்குதான் அறிமுகம்! மழைநாள் ஒன்றில் குடையின்றி மரங்களடர்ந்த சாலையில் மழையோடு பேசிக்கொண்டு நடந்து வந்தாய். மெல்லிய காற்றில் உன் கூந்தல் மழைச்சாரலோடு கைகுலுக்கி கட்டியணைத்தபோதுதான் தெரிந்துகொண்டேன் உன் தோழிதான் மழை என்பதை.

அப்போதுதான் ரோஜா தோட்டத்திலிருந்து பூ பறித்துவிட்டு நான் வெளியே வந்துகொண்டிருந்தேன்... தோழியோடு இருந்த மகிழ்ச்சியில் சிரித்துக்கொண்டே தோட்டத்தின் வாசலைப் பார்த்தது உன் கூந்தல். நான் நின்றுகொண்டிருந்தேன். என் கையில் கூடை இருந்தது. கூடையில் ரோஜா இருந்தது. இப்போது நான் ரோஜாவைப் பார்த்தேன், உன் கூந்தலையும் பார்த்தேன். கூந்தல் ரோஜாவைப் பார்த்தது, ரோஜா கூந்தலைப் பார்த்தது. மழை சிரித்தது. ஒரு ரோஜாவை எடுத்து நீட்டினேன் உன் கூந்தல் பெற்றுக்கொண்டது. நானும் சிரித்தேன். தோழர்களாகிவிட்டோம் நான், மழை, உன் கூந்தல்.

பிறகொரு நாள் நீ கோலப் போட்டியில் மயில் கோலம் வரைந்து கொண்டிருந்தாய். உன் கூந்தல், உன் பின்னங்களில் தூரிகையாகியிருந்தது. உன் கூந்தல்தான் எத்தனை அழகாய் வரைகிறது தெரியுமா? இப்போதெல்லாம் நான் உன் கூந்தலைப் பார்க்கும்போது நிறைய பேசுகிறேன். அதிகமாய் உன்னைப் பற்றிதான். ஒருநாள் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம். இடையில் என் பேச்சை நிறுத்தி, நீ இவளை காதலிக்கிறாயா என்று என்னிடம் கேட்டுவிட்டது. மௌனமாகவே இருந்தேன். அதுவாகவே தெரிந்துகொண்டது. பிறகுதான் அந்தப் பேருந்துப் பயணத்தின்போது என் சட்டையில் சிக்குவதுமாதிரி சிக்கி உன்னை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தது.

அப்போதுதான் உன் முகத்தைப் பார்த்தேன். ஆயிரம் நட்சத்திரங்களை ஒரே நேரத்தில் பார்த்ததுபோல அத்தனைப் பிரகாசம் உன் கண்களில். நீ குறுநகை பூத்தாய். நான் சிறுநகை பொழிந்தேன். கூந்தல் சிரித்தது. உன் உதடுகளிலிருந்து வழிந்தது... ‘கொஞ்சம் இருங்களேன்...”
இப்போது நான் அதிகமாகவே இருக்கிறேன் உன் இதயத்தில்.
எப்போது சந்திப்போம்?

மிகுந்த அன்புடன்

சா.இலாகுபாரதி.

17 January 2010

ரெட் சல்யூட்

Posted by Gunalan Lavanyan 10:57 PM, under | No comments


தோழர் ஜோதிபாசு அவர்களுக்கு ரெட் சல்யூட்

இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியை,  அதன் மக்கள் ஆதரவுக் கொள்கைகளை, மக்கள் மனதில் விதைத்த தலைவர்களில் முக்கியமானவர் தோழர் ஜோதிபாசு. மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சி வேரூன்றி, இன்று ஆலமரமாக வளர்ந்து நிற்பதற்கு உரமிட்ட தலைவர். தொடர்ந்து மக்களுக்காக மக்களின் வாழ்வாதாரத் தேவைகளுக்காகக் குரல் கொடுத்தவர். அவற்றை நிறைவேற்றியும் வைத்தவர்.இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்கு காரணமானவர்களில் முதன்மையானவர். மேற்குவங்கத்தில் தொடர்ந்து 5 முறை 23 வருடங்கள் (1977 முதல் 2005 வரை) முதல் அமைச்சராக இருந்து மக்கள் பணி ஆற்றியவர். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும், வேறு எந்த நபரும், இதுவரை - இப்படி தொடர்ந்து ஐந்து முறை முதல்வராகப் பொறுப்பு வகித்தது இல்லை என்பது மக்கள் தலைவர் ஜோதிபாசு அவர்களுக்கு கிடைத்த மணிமுடி. அப்படிப்பட்ட தலைவரின் மரணச்செய்தி நம்மை நீங்காத துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது. மாபெரும் போராட்டக்காரர், மூத்த மார்க்சியவாதி, தோழர் ஜோதிபாசு அவர்களுக்கு நமது வலைப்பூ வீரவணக்கம் செலுத்துகிறது. கம்யூனிஸ்ட்டுகளுக்கும், கம்யூனிஸ்ட் ஆதரவாளர்களுக்கும், மேற்குவங்க மக்களுக்கும் மற்றும் தலைவரின் அனுதாபிகளுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறது.

- தலைவர் ஜோதிபாசு பற்றிய சிறப்புச்செய்திகள், புகைப்படங்கள் நாளை...

இனி நிம்மதியா சிரிங்க!

Posted by Gunalan Lavanyan 12:26 AM, under | 2 comments

ரமேஷ் ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினீயர். அவருக்குத் திருமணம் நிச்சயமானது. கல்யாணத்துக்கு ஒருமாதம் இருக்கும்போது மணமகளுக்குப் பிறந்தநாள் வர, ஊரிலிருக்கும் தமது வருங்கால மனைவியைப் பார்த்துப் பரிசு கொடுத்துவர, பைக்கில் புறப்பட்டார் ரமேஷ்.
கிழக்குக் கடற்கரைச் சாலையில், மகிழ்ச்சியுடன் 70 கிலோமீட்டர் வேகத்தில் அவர் பயணிக்க, ஒரு வளைவில் லாரியொன்று எதிர்பாராமல் முளைத்துத் திரும்ப, ரமேஷ் சுதாரிப்பதற்குள் விபத்து நடந்தேவிட்டது. அதிர்ஷ்டவசமாக ரமேஷ் சிற்சில காயங்களுடன் உயிர்தப்ப, அவரின் தாடை எலும்பு நொறுங்கி, முகம் வீங்கிவிட்டது. வாய் திறக்க முடியவில்லை. முகம் கோரமாகிவிட்டது. 'ஒரு மாதத்தில் திருமணத்தை வைத்துக்கொண்டு இப்படியாகிவிட்டதே... மகனது வாழ்க்கை அவ்வளவுதானா?' என்று கண்கலங்கிவிட்டனர் ரமேஷின் பெற்றோர்.
ஆனால், ''மருத்துவம் இன்றைக்கு அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டுள்ளதால் ரமேஷின் பெற்றோர் கண் கலங்க வேண்டிய அவசியமில்லை'' என்கிறார் சென்னை நந்தனத்தைச் சேர்ந்த முகச் சீரமைப்பு மருத்துவர் செந்தில் முருகன்.
'ரமேஷின் பிரச்னையை எப்படி சரிப்படுத்தலாம்' என்று அவரிடம் கேட்டால், மளமளவென்று வருகிறது பதில்.


''இதுபோன்று விபத்தில் அடிபட்டு முகம் காயமடையும்போது தாடை நொறுங்கியிருக்கும். வாய் திறக்க முடியாது; சாப்பிட முடியாது. மிகுந்த அவஸ்தையாக இருக்கும். இதற்கு முன்பெல்லாம் கம்பி கட்டி சிகிச்சையளித்து வந்தோம். பற்களுக்கு இடையே கம்பி விட்டு, மேல் தாடை, கீழ்த் தாடையை சேர்த்து வைத்துக் கட்டுவோம். இப்படிச் செய்வதால் நான்கைந்து வாரங்களுக்கு வாயைத் திறக்க முடியாது; உணவருந்த முடியாது.
ஆனால், ப்ளேட்டிங் என்றொரு நவீன முறை இருக்கிறது. டைட்டானியம் என்றொரு மினி பிளேட் கொண்டு உடைந்த எலும்புப் பகுதியைச் சேர்த்துவைத்து ஸ்க்ரூ செய்துவிடுவோம். இந்த சிகிச்சையில் எப்போதும் போல் வாய் திறக்கலாம்; மிக எளிதாகவும் குணம் பெறலாம். என்றாலும், இதிலும் ஒரு சின்னப் பிரச்னை உண்டு. இந்த சிகிச்சையில் பொருத்தப்படும் டைட்டானியம், மெட்டல் ஆதலால், இரண்டிலிருந்து நான்கு வருடங்களுக்குள் பொருத்தப்பட்ட இடத்திலிருந்து அதனை எடுக்க நேரிடலாம்.
இப்போது இன்னும் அட்வான்ஸாக ரிசார்பிள் பிளேட்ஸ் (Rechargeable plates) வந்துவிட்டன. இவற்றை வாயிலிருந்து எடுக்கத் தேவையில்லை. நம் உடம்பில் உள்ள fluids மூலமாகத் தானாகவே இவை கரையும் தன்மை வாய்ந்தவை"" என்ற மருத்துவரிடம்,
'முகச்சீரமைப்பு வேறு எதுயெதெற்கெல்லாம் செய்யப்படுகிறது' என்றோம்.
"குழந்தைகளுக்கு ஏற்படும் பிறவிக் குறைபாடான உதட்டுப் பிளவு, அண்ணப் பிளவு போன்றவற்றுக்கு முகச் சீரமைப்பு சிகிச்சைதான் அளிக்கப்படுகிறது. கருவுற்ற காலத்தில் தாய்க்குப் போதிய ஊட்டச்சத்து இல்லாதது, வயதான பிறகு குழந்தை பெற்றுக்கொள்வது, நெருங்கிய உறவுகளுக்குள் திருமணம் செய்துகொடுப்பது போன்ற காரணங்களால்தான் இந்த அண்ணப் பிளவு, உதடுப் பிளவு போன்றவை குழந்தைகளுக்கு ஏற்படுகின்றன. இதனால், குழந்தை தாய்ப்பால் குடிக்க முடியாது. பேச்சு சரியாக வராது. முகம் விகாரமாக இருக்கும். இதற்கான சிகிச்சையாக ஐந்தாறு அறுவை சிகிச்சைகள் செய்யப்படும். முதலில், உதடுப் பிளவுக்கு சிகிச்சை பிறகு அண்ணப் பிளவு. அப்புறம் இடுப்பெலும்பை எடுத்துப் பொருத்தும் ஒட்டறுவை சிகிச்சை என்று அறுவை பல நிலைகளில் நிகழ்த்தப்படும்.
ரிசல்ட் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகக் கவனமுடன் செய்யப்படும் இந்த சிகிச்சைகளால் குழந்தைக்கு அதன் எதிர்காலத்தைச் சிறப்பாக மீட்டுத்தர முடியும்" என்ற மருத்துவர் செந்தில் முருகன், "முகச்சீரமைப்பு இன்றைக்குப் பல பெண்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது" என்று பொடி வைத்துப் பேசினார்.
'எப்படி' என்றோம். சொல்லத் தொடங்கினார்.
"பெண்களுக்குத் திருமண வாழ்வு இன்றியமையாதது. இதில் முகம் பெரும் பங்கு வகிக்கிறது. பற்கள் சற்று எடுப்பாக இருந்தாலே சுயநல ஆண்களால் பெண்கள் நிராகரிக்கப்படும் நிலை இன்றைக்குக் காணப்படுகிறது. எடுப்பாக இருத்தல், தாடை சிறியதாக அல்லது பெரிதாக உள்ளது. முகம் கோணலாகக் காணப்படுவது என்று எந்தவொரு குறைபாட்டையும் சரி செய்து. பெண்களின் வாழ்வில் மகிழ்ச்சியை முகச்சீரமைப்பு நிபுணர்கள் கொண்டுவருகிறார்கள்.
களிப்பில் ஆரம்பிக்கும் சிகிச்சை, அறுவை வரை உள்ளது. யாருக்கு எது தேவையோ அதைச் செய்கிறோம். செலவும் மிகமிகக் குறைவுதான்" என்ற மருத்துவர், "இப்போது புதிதாக நோயாளிகளிடம் ஒரு பிரச்னையை நாங்கள் சந்திக்கிறோம். மேல் தாடை சிறியதாகவும் கீழ்த் தாடை பெரியதாகவும் இருக்கும்போது ஒருவருக்கு முகம் Dish face மாதிரி இருக்கும். இதற்கு Micrognathia என்று பெயர். இக்குறைபாட்டுக்கு எலும்பு விரிவாக்க சிகிச்சை மிகச் சிறந்தது. Distractor என்னும் கருவி கொண்டு தாடை எலும்பைத் தேவையான அளவுக்கு விரிவாக்கம் செய்து இக்குறைபாடு நிவர்த்தி செய்யப்படுகிறது. முன்பெல்லாம் இடுப்பிலிருந்து எலும்பு எடுத்து சிகிச்சை செய்யப்படும். இப்போது இந்த Distraction Osteogenesis என்கிற புதிய முறை வந்துவிட்டதால் எல்லாமே எளிதாகிவிட்டது. நோயாளிகள் இனி நிம்மதியாகச் சிரிக்கலாம்" என்றார்.

-சா.இலாகுபாரதி
2006, 9 ஜூலை கல்கி இதழில் வந்த கட்டுரை.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் 93வது பிறந்தநாள்

Posted by Gunalan Lavanyan 12:17 AM, under | 2 comments



புரட்சித்திலகம் எம்.ஜி.ஆருக்கு நமது வலைப்பூ 
அஞ்சலி செலுத்துகிறது

15 January 2010

அவளும் அவனும் மட்டும்...

Posted by Gunalan Lavanyan 10:57 PM, under | No comments





வானம் கறுத்து
கடற்கரையே காணாமல் போயிருந்த நேரம்.
மழைதான் வராமல் அடம்பிடித்தது.
அதைப் பார்த்து காற்று சும்மா இல்லை
வம்படியாக கைக்கொட்டிச் சிரிக்க,
அலையும் சேர்ந்துகொண்டு
கும்மாளமிட்டு பொங்கி நுரைத்தது.
இப்போது
வானம் சும்மா இல்லை
மின்னல் வேர் விட்டு வெடித்தது...
ஒளி, இடியுடன் கலந்து
பொத்துக்கொண்டு வந்தது
மழை.
காதல் பொருட்படுத்தாது
மையமிட்டிருந்தது கரையை...
மழைதான் என்ன செய்யும்..?
தூறல் குடை பிடித்துப் பார்த்துக்கொண்டது
காதலை.
அவளும் அவனும்
மழையின் குடையில் நின்று
இதழில் முத்தம் செய்யத் தொடங்கினர்...
இப்பவும் காற்று சும்மா இல்லை
குடையை வளைத்தது... நெளித்தது...
ஆனாலும், உடையவில்லை
குடை.
முத்தம் செய்தவர்கள்
இப்போது
விரல்களால் பேசத்தொடங்கினார்கள்...
அவள் இடை அவன் விரல்களோடும்
அவள் விரல்கள் அவன் கழுத்தோடும்
பேசிக்கொண்டிருந்தன...
வானம் மேகத்தோடும்
அலை கரையோடும்
காற்று மழையோடும் பேசி முடிந்தது.
இப்போது
காதல் காமம் பேசுகிறது...
யாரும் இல்லை கரையில்...
அவளும் அவனும் மட்டும்
குடை அந்தரத்தில் தொங்குகிறது...
மழை

தமிழ் சினிமா இழந்த பொக்கிஷம்! - எம்.ஆர்.ராதா வாழ்க்கைச் சுருக்கம்

Posted by Gunalan Lavanyan 10:29 PM, under | 2 comments

1907 ஏப்ரல் 14-ம் நாள், இந்திய ராணுவத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த மெட்ராஸ் ராஜகோபால் நாயுடுவுக்கும் ராஜம்மாளுக்கும் இரண்டாவது பிள்ளை பிறந்தது. ராஜகோபால் தன் தந்தை மீது கொண்டிருந்த அன்பின் காரணமாக, தனக்கு இரண்டாவதாகப் பிறந்த ஆண் பிள்ளைக்கு தந்தையின் பெயரான ராதாகிருஷ்ணன் என்பதையே சூட்டி மகிழ்ந்தார். ராதாகிருஷ்ணன் ரொம்பவும் சூட்டிகையான பையன். படிப்பைக்காட்டிலும் விளையாட்டின் மீதே அவனுக்கு அதிக ஆர்வம் இருந்தது.
அதற்கு ஒரு காரணம் உண்டு. குழந்தை ராதாகிருஷ்ணன் பள்ளிக்குச் செல்லும் வயது வந்ததும் பெற்றோர் அவனை பள்ளியில் சேர்த்தனர். ஆனால், பள்ளிக்குச் சென்றால் வாத்தியார் பிரம்பால் அடிக்கிறார்... என்ன செய்வது என்று யோசித்த ராதா... இனி, பள்ளிக்கு செல்வதாக வீட்டிலிருந்து கிளம்பிவிட்டு தனக்குப்பிடித்த பில் தோட்டத்தைச் சுற்றித்திரிவது’ என்று முடிவு செய்கிறான். ஒரு சைக்கிளையும் வாடகைக்கு எடுத்துக்கொண்டு ஜாலியாக சுற்றுகிறான். தோட்டத்தில் குஸ்தி கற்றுக்கொள்கிறான்.

ஒரு நாள் வீட்டை விட்டு ஓடி எழும்பூர் ரயில் நிலையத்தில் சுற்றிக்கொண்டிருக்கிறான் ராதா. ரயில் நிலையத்தில் அங்கும் இங்கும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த அவனை, பெரியவர் ஒருவர் அழைத்து, தனது பெட்டி படுக்கையை ரயிலில் கொண்டுவந்து வைக்கும்படி கேட்கிறார். பெரியவர் ஏதோ முடியாமல்தான் கேட்கிறார் என்று நினைத்த ராதா அவற்றைக் கொண்டுபோய் ரயில் பெட்டியில் வைத்துவிட்டு திரும்பும்போது, இந்தாப்பா...’ என்று பெரியவர் கையில் காலணாவைத் திணிக்கிறார்.
கையில் நயா பைசா இல்லாதிருந்த ராதாவுக்கு காலணாவைப் பார்த்ததும் முகத்தில் ரொம்பவும் பொலிவு... ராதா அப்போது நினைத்துக்கூட பார்த்திருக்கவில்லை; பின்நாட்களில் தாம் லட்சக் கணக்கில் சம்பாதிக்கப்போகிறோம் என்று.
சிறு பிராயத்தில் இருந்த ராதாவுக்கு நாடக உலகம் அறிமுகமாகிறது. ஜெகந்நாத ஐயர் நாடகக் கம்பெனியில் சேர்கிறான் ராதா.
1924-ல் ஐயரின் நாடகக் குழு கதரின் வெற்றி’ என்ற நாடகத்தை நடத்துகிறது. அந்த நாடகத்தைப் பார்ப்பதற்காக காந்திஜி தம்பதியரும், சீனிவாச ஐயங்கார், ராஜாஜி போன்றோரும் வருகின்றனர்.
நாடகத்தில் சிறுவன் ராதா, பாயசம்’ என்ற நகைச்சுவைப் பாத்திரமேற்று நடிக்கிறான். நாடகத்தைப் பார்த்த ராஜாஜி, ‘‘பாயசமாக நடித்த பையனைக் கூப்பிடுங்கள், நான் பார்க்க வேண்டும்’’ என்றார்.
சிறுவன் ராதா வந்ததும் முதுகில் தட்டிக் கொடுத்து, ‘‘பாயசம் மிகவும் நன்றாக இருந்தது’’ என்று பாராட்டினார். அப்போது ராதாவுக்கு பன்னிரெண்டு வயது இருக்கும்.
ஒருமுறை ஐயரின் கம்பெனி இலங்கைக்குச் சென்றிருந்தது. அங்கு நாடகத்துக்கான நோட்டீஸ் அச்சடிக்க வேண்டியிருந்ததால் ஓர் அச்சகத்தில் நோட்டீஸுக்கு ஆர்டர் கொடுத்தனர்.
ஆனால், நோட்டீஸ் அச்சடிக்கும் பிரஸ்ஸில் திடீரென்று மிஷின் பழுதாகிவிட்டது. அச்சக உரிமையாளர் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தார். தகவலை அறிந்ததும் கம்பெனி வாத்தியார் பொன்னுசாமிபிள்ளை ராதாவை அழைத்தார். விஷயத்தைச் சொன்னதும் ராதா அச்சகத்துக்கு விரைந்தார். பழுது சரி செய்யப்பட்டது. அச்சக உரிமையாளர் திகைத்துப்போய் நூறு ரூபாய் தாளை எடுத்து ராதாவிடம் நீட்டினார். அதுதான் ராதா பார்த்த முதல் நூறு ரூபாய். ராதா மெக்கானிக்காவும், எலக்ட்ரீஷியனாவும் டிரைவராகவும்கூட பணியாற்றியிருக்கிறார்.
1932-ம் ஆண்டு சென்னை பெரம்பூரில் யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை, மதுரை ஸ்ரீபாலகான சபா’ என்ற நாடகக் குழுவைத் தொடங்கினார். பால்ய கால நட்பின் காரணமாக ராதா அந்தக் குழுவிலும் தனது திறமைகளை வெளிப்படுத்தினார்.
1937-ம் ஆண்டு ராஜசேகரன்’ என்ற சமூகப் படத்தில் வில்லனாக நடிக்க ராதாவுக்கு வாய்ப்பு வந்தது. அதுதான் அவரது முதல் படம். அதே ஆண்டு சேலம் மார்டன் தியேட்டர்ஸ்’ கம்பெனியாரால் தயாரிக்கப்பட்ட சந்தனத் தேவன்’ என்ற திரைப்படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு வந்ததது. ஆனால், அப்படம் சரியாக ஓடவில்லை.
ராதாவின் நடிப்பைப் பார்த்து வியந்துபோன மார்டன் தியேட்டர்ஸ்’ உரிமையாளர் டி.ஆர். சுந்தரம் ராதாவுக்காக ஆங்கிலப் படத்தின் கதையை மையப்படுத்தி சத்திய வாணி’ என்ற படத்தை எடுத்தார். அதில் ராதாதான் கதாநாயகன். 1940-ல் வெளிவந்த அப்படமும் எதிர்பார்த்த அளவில் ஓடவில்லை. பார்த்தார் ராதா, தனக்கு திரைப்படம் சரிப்பட்டு வராது என்று நினைத்து மீண்டும் நாடக உலகிற்கே திரும்பினார்.
மெட்ராஸ் ராஜகோபால் நாயுடுவின் மகன் ராதாகிருஷ்ணனான எம்.ஆர்.ராதா, பெரியார் மீதும் திராவிட இயக்கத்தின் மீதும் மிகுந்த மரியாதை வைத்திருந்தார். ராதாவுக்கு பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகள் மீது நிரம்பவே நம்பிக்கையும் பற்றும் உண்டு. அதன்காரணமாக 1943-ம் ஆண்டு திராவிட மறுமலர்ச்சி நாடக மன்றம்’ என்ற நாடகக் கம்பெனியைத் தொடங்கினார்.
நாடக அரங்கில் வண்ணத் திரைச் சீலைகளையும் ஓவியத் திரைகளையும் தொங்கவிட்டால்தான் பார்வையாளர்களை வசீகரிக்க முடியும் என்ற நம்பிக்கை கொண்டிருந்தவர்கள் இருந்த காலகட்டத்தில், தனது நாடகக் கம்பெனி சார்பாக நடத்தப்பட்ட நாடகங்களில் கருப்பு, வெள்ளை திரையை தொங்கவிட்டு அந்த மூடநம்பிக்கையை உடைத்தவர் எம்.ஆர்.ராதா.
அன்றைக்கு, பொதுவுடமை இயக்கம் என்றாலே தெரித்து ஓடியவர்கள் மத்தியில் ராதா, உலக பாட்டாளிகளே ஒன்று சேருங்கள்’ என்ற வாசகத்தை தாங்கிய திரையைத் தொங்கவிட்டு நாடகங்களை நடத்தி வந்தார். அப்போது பெரியார் கம்யூனிசத்தை ஆதரித்துவந்த காலகட்டம். பெரியார் என்ன செய்கிறாரோ அதையே தானும் பின்பற்றுவார் ராதா.
அதேபோல ராதாவுக்கும் பொதுவுடமைத் தலைவர் ஜீவாவுக்கும் நெருங்கிய நட்பு இருந்தது.
அது ஜீவா தலைமறைவாக இருந்த சமயம். ஜீவாவுக்கு ராதாதான் அடைக்கலம் கொடுத்துவந்தார். அப்போது, ஜீவா ராதாவிடம் தொடர்ந்து கடிதங்கள் கொடுத்து, அதைக் கொண்டுபோய் ஒரு பெண்ணிடம் கொடுத்துவிட்டு வரும்படி கேட்டுக்கொள்வாராம். அதேபோல் அந்தப் பெண் கொடுக்கும் கடிதங்களையும் தன்னிடம் கொடுக்கும்படி சொல்வாராம். ராதாவும் எந்தத் தயக்கமும் இல்லாது அதைச் செய்துவந்தார். இந்தக் கடிதப் போக்குவரத்து ஏதோ புரட்சிக்கு வழிவகுக்கப் போகிறது என்று நினைத்திருந்த ராதா, அது குறித்து ஜீவாவிடம் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை.
ஆனால், தொடர்ந்து கேள்விகேட்காமல் இருக்கமுடியவில்லை. ஒரு நாள் ஜீவாவைப் பார்த்து, ‘‘புரட்சி எப்போது வெடிக்கும்’’ என்று ராதா கேட்க, அதற்கு ஜீவா ‘‘பொறுத்திருந்து பார்’’ என்று பதில் சொன்னார்.
கம்யூனிஸ்ட் கட்சி மீதிருந்த தடை நீங்கிய பின், ராதா ஜீவாவிடம் அந்த சம்பவத்தை நினைவுப்படுத்தி ‘‘அந்தக் கடிதங்களினால், புரட்சி வெடித்ததா?’’ என்று கேட்டிருக்கிறார்.
அதற்கு ஜீவா, ‘‘ஆம் ஏற்பட்டது’’ என்றாராம்.
ராதாவின் வியப்பு கலைவதற்குள்... ‘‘ஆனால், நீங்கள் நினைப்பது போல் அது கட்சி சம்பந்தப்பட்ட கடிதங்களல்ல... அனைத்தும் காதல் கடிதங்கள். அதனால், எனக்கும் பத்மாவதி என்ற அந்தப் பெண்ணுக்கும் ‘காதல் புரட்சி’ ஏற்பட்டது’’ என்றாராம்.
அப்போது ராதா, தன் ஆரவாரமிக்க சிரிப்பால் பொங்கிவழிந்தாராம்.
‘கலை கலைக்காக; கலை மக்களுக்காக’ என்று இரண்டு கோஷங்கள் எழுந்தபோது, கலை மக்களுக்காகத்தான் என்று தன் நாடகங்களின் வழி உரக்கச் சொன்னவர் எம்.ஆர்.ராதா.
அதேபோல், ‘‘நாடகம், சினிமா போன்றவை சிறந்த பிரச்சார சாதனங்கள். எனவே, என் எண்ணங்கள், கொள்கைகள், லட்சியங்கள் ஆகியவற்றை அவற்றின் வாயிலாக வெளியிட்டு வருகிறேன்’’ என்று சொன்னார் ராதா.
அவர், தரகு கலைஞர்களிடமிருந்து வேறுபட்டு இருந்தார். காசுக்காக கலையை அடகு வைப்பதை ஒருபோதும் அவர் செய்தது கிடையாது.
ராதாவின் நாடகங்களுக்கு கூட்டம் அதிகரிக்க அதிகரிக்க, நாடகத்தில் சமூக சீர்திருத்தக் கருத்துக்கள் சொல்வதை அவர் அதிகரித்தார். இதனால், நாடகம் நடக்கவிடாமல் சில விஷமிகள் கலவரத்தில் ஈடுபடுவர். அப்படி யாராவது கலவரத்தில் ஈடுபட்டால் ராதா மேடைக்கு வருவார்.
‘‘யார் கலாட்டா செய்றது..? நாடகம் உங்களுக்கு பிடிக்கலைன்னா உங்கள் பணத்தை திரும்ப வாங்கிக்கொண்டு போய்விடுங்கள். அனாவசியமாக மற்றவர்களுக்குத் தொல்லை கொடுக்காதீர்கள். டைம் வேஸ்ட் பண்ணாதீர்கள்.
உங்கள் பயமுறுத்தல்களுக்கெல்லாம் நான் பயப்படமாட்டேன். என் உயிருள்ள வரை நான் என் கருத்தைச் சொல்லிக்கொண்டே இருப்பேன்’’ என்று முழங்குவார்.
ராதா கொள்கையை விற்றவரல்லர் என்பதற்கு இதுபோன்ற நிகழ்வுகளைச் சொல்லலாம். ராதா நடத்திய பன்னிரெண்டு நாடகங்களிலேயே ‘ரத்தக் கண்ணீர்’தான் உலக நாடக வரலாற்றில் 60 ஆண்டுகாலமாக (இன்றும் ராதவின் மகன் ராதாரவி, பேரன் வாசு விக்ரம் போன்றவர்களால் நடத்தப்படுகிறது) நடந்துவருகிறது. அது நாடகங்களிலேயே உச்சத்தின் உச்சம். ராதாவாலேயே ‘ரத்தக் கண்ணீர்’ 3021 நாட்கள் அரங்கேற்றப்பட்டது. அதேபோல், ‘தூக்குமேடை’ 800 நாட்களும், ‘லட்சுமி காந்தன்’ 760 நாட்களும், ‘போர்வாள்’ 410 நாட்களும், ‘இழந்த காதல்’ 190 நாட்களும், ‘ராமாயணம்’ 170 நாட்களும், ‘தசாவதாரம்’ 110 நாட்களும் அரங்கேறி சாதனை படைத்தன.
‘தூக்கு மேடை’ நாடகம் மு.கருணாநிதியால் எழுதப்பட்டது. ‘போர்வாள்’ சிந்தனைச் சிற்பி சிற்றரசுவால் உருவாக்கப்பட்ட நாடகமாகும்.
ராதாவின் நாடகங்களில் கலகக்குரல் ஓங்கி ஒலித்ததால் ஏறக்குறைய அவரது பல நாடகங்கள் தடை செய்யப்பட்டன. அதற்கெல்லாம் ராதா அஞ்சியதே இல்லை. ‘ரத்தக்கண்ணீர்’ தடை செய்யப்பட்டபோது ‘மேல் நாட்டுப் படிப்பு’ என்ற பெயரில் அந்த நாடகத்தை அரங்கேற்றினார். ‘தூக்கு மேடை’ தடை செய்யப்பட்டபோது, ‘பேப்பர் நியூஸ்’, ‘காதல் பலி’, ‘நல்ல முடிவு’ என பல பெயர்களைக் கொண்டு அந்த நாடகம் அரங்கேறியது. ‘போர்வாள்’ நாடகம் ‘சர்வாதிகாரி’, ‘நண்பன்’, ‘சுந்தர லீலா’, ‘மகாத்மா தொண்டன்’ போன்ற பெயர்களில் அரங்கேற்றப்பட்டது.
எதிர்ப்புகள்தான் ராதாவை உச்சத்தை நோக்கி நகர வைத்தன. திராவிடர் கழக மாநாடு என்றால் கட்சியின் கொடியேந்தி வெள்ளைக் குதிரையில் மாநாட்டு திடல் வரைக்கும் ராதா கம்பீரமாக பவனி வருவாராம். ஒரு முறை அப்படி அவர் குதிரை மீது வந்தபோது, விஷமிகள் அவரை தாக்கினார்கள். அடிமொத்தம் வாங்கிக்கொண்ட ராதா அந்த விஷமிகளைப் பார்த்து, ‘‘போதுமா, திருப்தியா..? இப்போ போரியா..?’’ என்று கேட்டாராம்.
சீர்திருத்தத்தைப் பற்றி பேசவே பயந்த அன்றைய நிலையில் ‘விதவையின் கண்ணீர்’ என்ற சீர்திருத்த நாடகத்தை நடத்தினார் ராதா. பல எதிர்ப்புகளுக்கு உள்ளானது அந்த நாடகம்.
‘‘அது சாஸ்திர சம்பிரதாயத்துக்கு விரோதமானது. அதை நடத்தினால் சமூகத்தின் அமைதி கெட்டுவிடும்’’ என்று பிற்போக்குவாதிகள் நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அப்போது அந்த மன்றத்தின் நீதிபதி கணேசய்யர். ஆசாரமாக வாழ்ந்து வந்த நீதிபதி, நாடகத்தைப் பார்க்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.
‘இதோடு ராதாவின் ஆட்டம் அவ்வளவுதான்’ என்று பேச்சுகள் எழுந்தன. நீதிபதி நாடகத்தை தடை செய்துவிடுவார் என்று எதிர்பார்த்தனர். நாடகத்தை முழுவதுமாக பார்த்த நீதிபதி மேடை நோக்கி விரைந்தார்... ஒரு நிமிடம் ராதாவைப் பார்த்தார்; கை நீட்டினார்... ராதாவும் கை கொடுத்தார்... குலுக்கினார் நீதிபதி. அவருக்கு நாடகம் பிடித்துவிட்டது.
ராதாவைப் பார்த்துச் சொன்னார், ‘‘சாட்சாத் மார்க்கண்டேயன் மாதிரி என்னிக்கும் நீங்க சிரஞ்சீவியா இருக்கணும். இந்த மாதிரி நாடகம் இங்கே மட்டும் நடந்தால் போதாது; இந்தியா முழுக்க நடக்கணும். நீங்களும் உங்கள் நாடகமும் வெற்றிபெற நான் வாழ்த்துகிறேன்’’ என்று கூறினார். வழக்கு தொடுத்தவர்கள் பேச முடியாமல் போயினர். ராதா எதிர் கருத்து உடையவர்களையும் தனது ஆழமான கருத்தால் கவர்ந்துவிடுவார் என்பதற்கு இது ஒரு சான்று.
பெரியார், ஜீவாவைப் போல் ராதாவுக்கு காமராஜர் மீதும் கருணாநிதி மீதும் மிகுந்த அன்பு உண்டு. கருணாநிதியின் ‘தூக்கு மேடை’ நாடகம் பெரிய வெற்றிபெற்ற போது, ராதாவின் பெயர் பெரும் புகழ் அடைந்தது. கலைஞன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நினைத்திருந்த ராதா, அந்தப் புகழுக்குக் காரணமான கருணாநிதிக்கு, கலைஞர் என்று பட்டம் சூட்டி மகிழ்ந்தார். அதுவே இன்றுவரை நிலைத்து நிற்கிறது.
ஒரு கூட்டத்தில் பெரியார் பேசும்போது, ‘‘நாட்டில் எல்லாக் கலைஞர்களும் ரசிகர்கள் பின் செல்கிறார்கள். அவர்கள் மனம் திருப்திப்படும்படி எல்லாம் நடந்துகொள்கிறார்கள். நண்பர் ராதா அப்படிப்பட்டவர் அல்ல. தாம் ரசிகர் பின் செல்லாமல் ரசிகர் தம் பின்னால் வரவேண்டும். தன் பேச்சைக் கேட்க வேண்டும் என்று விரும்புபவர். மக்கள் தமது கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முற்பட்டாலும், முற்படாவிட்டாலும் நமது கருத்தை வலியுறுத்தி எடுத்துச் சொல்லத் தவறுவதே இல்லை’’ என்று பேசினார்.
தனது 85வது பிறந்தநாள் விழாவில் பேசிய அதே பெரியார், ‘‘அறிவு அற்றவர்கள் புராணக்கதைகளில் நடித்துக்கொண்டு அசிங்கத்தையே சொல்லி வருகிறார்கள். சிரிப்பின் மூலம் சிந்திக்கும்படி சட்டென்று சொல்லிவிடுகிறார் ராதா. மற்ற மடையர்கள் சொல்லவில்லை. ராதாதான் தைரியமாகச் சொல்கிறார். அதற்காக அவர் மிகவும் கஷ்டப்பட்டார். வண்ணான் துறையிலேயே படுத்துக்கொண்டு அங்கேயே வண்ணான் துணிகளை வாங்கி நாடகம் நடத்தினார். ரயில் கட்டணம்கூட இல்லாமல் திண்டாடினார். அதையெல்லாம் பொறுத்துக்கொண்டு கொள்கையை மறக்காமல் எடுத்துக்கூறி திருப்பத்தை உண்டாக்கினார்.
சுயமரியாதைக் கருத்துக்களை எடுத்துச் சொன்னதால் ராதா ஒழிந்துவிடவில்லை. வாழ முடியாமல் போனதுமில்லை. ஆகவே, மற்றவர்கள் திருந்தி அவரைப் பாராட்ட வேண்டும். ராதா வாழ்க. ராதாதாவைப் போல் மற்றவர்களுக்கும் புத்தி வரட்டும்’’ என்று சமூக சிந்தனையற்றவர்களைப் பார்த்து கடிந்துகொண்டார்.
ராதா, பெரியார் பேச்சை தட்டாதவர். அவர் கம்யூனிஸ்டுகளை ஆதரிக்கிறார் என்றால் அதை செய்வார். காங்கிரஸ்காரர்களை ஆதரிக்கிறார் என்று தெரிந்தால் அவரும் காங்கிரஸை ஆதரிப்பார்.
நடிகவேள் எம்.ஆர்.ராதா 1952-ம் ஆண்டு திருச்சி தேவர் மன்றத்தில் ‘போர்வாள்’ என்ற நாடகத்தை நடத்தினார். அப்போதுதான் பட்டுக்கோட்டை அழகிரிசாமி அவருக்கு நடிகவேள் என்ற பட்டத்தைச் சூட்டினார்.
சினிமாவில் நடித்து புகழடைந்துவந்த காலகட்டத்தில்கூட நடிகவேள் நாடகத்தை மறந்துவிடவில்லை. அவருக்கு சினிமா உடல் என்றால், நாடகம்தான் உயிர். உயிர் இன்றி உடல் அசையாது என்பதை உணர்ந்திருந்தார் ராதா.
சிறந்த நடிகன் என்பவன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு ஒரு முறை ராதா சொன்ன பதில், ‘‘நேராக சினிமாவில் சேர்ந்த எவனும் நடிகனாக மாட்டான். சிறந்த நடிகன் சினிமாவிலிருந்து வெளிவர முடியாது. ஒரு ரீடேக் இல்லாமல் மூன்று மணி நேரம் நாடகத்தில் நடித்து எவன் மக்களை தன்வசப்படுத்துகிறானோ அவனே சிறந்த நடிகன்.
அதல்லாமல் ஒருவனுக்கு வசனத்தைக் கொடுத்து அதே காட்சியை இரண்டாயிரம் மூவாயிரம் அடிகள் வரை பல கோணங்களில் எடுத்து எந்தக் கோணத்தில் எடுத்தக் காட்சி நான்றாக இருக்கிறது என்று பார்த்து சேர்க்கிறார்களோ அவனெல்லாம் சிறந்த நடிகனாக மாட்டான்’’ என்று நடிகனுக்கான வரையறையைச் தெளிவாகச் சொன்னார். சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்றில்லாமல், அதை தானே செயல்படுத்தவும் செய்தார். அதுதான் ராதா.
ராதாவின் நடிப்பு ஆங்கில நடிகர் டக்ளஸ் பேர்பாங்ஸுக்கு இணையாக இருந்ததால் அவர் நடித்து வெளிவரும் படங்களின் போஸ்டர்களில் ‘இண்டியன் டக்ளஸ்’ என்று விளம்பரப்படுத்தப்பட்டது.
‘ரத்தக்கண்ணீர்’ படமாக்கப்பட்டபோது இதற்குமுன் கே.பி.சுந்தராம்பாள் வாங்கிய ஒருலட்ச ரூபாயைவிட தனக்கு 25 ஆயிரம் ரூபாய் அதிகம் தர வேண்டும் என்று கேட்டு வாங்கினார் ராதா. பண விஷயத்தில் அவர் கரார் பேர்வழி. சினிமாவை அவர், ஒரு பணம் காய்க்கும் மரமாகத்தான் பார்த்தார். அதனால்தான் எந்தப் படமானாலும், தனது கேரக்டர் என்ன என்றுகூட கேட்காமல் சம்பளம் என்ன என்றுதான் கேட்பார். ஆனால், நாடக உலகில் அவர் அப்படியில்லை.
1978-ல் ‘தூக்குமேடை’ நாடகத்தைப் பார்த்த கலைஞர், ராதாவின் நடிப்பைப் பற்றி, ‘‘நடிப்பை, தலைமுடியின் ஆட்டத்திலேயே காட்டிய நடிகர் ஒருவர் இந்த நாட்டில் உண்டென்றால் அது ராதாதான்’’ என்று பேசினார்.
அத்தகைய நடிப்பின் உச்சத்தை தொட்ட ராதாவை இந்திய அரசு பெரிய அளவில் கௌரவிக்கவில்லை. தமிழக அரசு ‘கலைசிகாமணி’ என்ற விருதை மட்டும் வழங்கியது. அது இப்போது ‘கலைமாமணி’ விருதாக பெயர் மாற்றப்பட்டு கொடுக்கப்பட்டு வருகிறது.
நடிகர் திலகம் சிவாஜிகணேசனே தான் ராதாவைப் பார்த்துதான் நடிக்கக் கற்றுக்கொண்டதாக ஒருமுறை அவரது மகன் ராதாரவியிடம் கூறியிருக்கிறார்.
நடிப்பின் இமாலயமாக திகழ்ந்த நடிகவேள் எம்.ஆர்.ராதா, பெரியாரோடு 40 ஆண்டுகாலம் இருந்த ராதா, அவரது 101-வது பிறந்தநாளான 1979 செப்டம்பர் 17 அன்று தனது நடிப்பை பாதியிலேயே நிறுத்திக்கொண்டார். தமிழ் சினிமா ஒரு பொக்கிஷத்தை இழந்துவிட்டது.

- சா.இலாகுபாரதி

கோப்பு

கோப்பு