04 November 2008

தில்லுமுல்லு... தில்லுமுல்லு...

Posted by Gunalan Lavanyan 1:59 PM, under | No comments



நீண்ட நாட்களுக்குப் பிறகு 3.11.2008 திங்களன்று சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களைச் சந்தித்தார்.
தலைவர் கட்சியைத் தொடங்குவாரா..? தொடங்கினால் அதில் தமக்கு ஒரு 'வால்' பதவியாவது கிடைக்குமா? என்ற ஏக்கங்களோடும், முகத்தில் பல கேள்விக் குறிகளோடும் ஆயிரக்கணக்கான ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் திடீரென்று ரஜினி கூட்டிய கூட்டத்திற்கு வந்திருந்தனர்.
இந்தக் கூட்டத்தில் வழக்கத்திற்கு மாறாக ரசிகர்களை (ஒரு துண்டுச் சீட்டில் எழுதி கொடுத்து) கேள்வி கேட்கச் சொல்லி அந்தக் கேள்விகளுக்கு ரஜினி பதில்களை குழப்பினார்; மன்னிக்கவும் வழங்கினார். இந்தக் கூட்டத்தில் ஒரு ஆச்சரியமும் நடந்தது. எப்போதும் ரஜினி தான் சொன்ன கருத்துக்கு எதிராக ஒரு கருத்து எழும்போது தன்னுடைய கருத்துக்கு ஆதரவாகவே பேசி எதிர் கருத்தை மழுப்பிவிடுவார். மீண்டும் மன்னிக்கவும் மறுத்துவிடுவார். அல்லது தான் சொன்னது தப்பு என்று ஜகாவாங்கிவிடுவார். ஆனால், இந்தக் கூட்டத்தில் நடந்தது வேறு. ரஜினி தொடர்ச்சியாக தனது அரசியல் பிரவேச விஷயத்திலும், தமிழர் பிரச்சினைகளிலும் (குறிப்பாக கர்நாடகம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளில்) குழப்பமான அறிக்கைகளையும் தனது நிலைப்பாட்டையுமே அறிவித்து வருகிறார். இந்த விஷயத்தில் சில பத்திரிகைகளும் சில தனிநபர்களும் அப்பட்டமாகவே அவரை குழப்பவாதி என்று கூறிவருகின்றனர். இது சம்பந்தமான மகா ரசிகர் ஒருவரின் கேள்வி: 'எல்லோரும் உங்களை குழப்பவாதி என்கிறார்களே இதற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?'
ரஜினி: குட்டையை குழப்பி அதுசரிதான் என்று ஒப்புக்கொண்டார்.
மற்றொரு மகா ரசிகர்: கடந்த 30 ஆண்டு காலமாக நாங்கள் உங்களோடேயே இருந்து வருகிறோமே நீங்கள் எங்களுக்காக என்ன செய்திருக்கிறீர்கள்? (கட்சியை எப்போது தொடங்கப் போகிறீர்கள் என்று மறைமுகமாக கேட்கிறார்)
ரஜினி: (கட்சியைப் பற்றி எதுவும் பேசாமல்) நான் ஆரம்பத்துல குணச்சித்திர வேடங்கள்ல நடிச்சிட்டு வந்தேன். நீங்க, குடும்பப் படங்கள்ல நான் நடிக்கணும்னு கேட்டீங்க, நானும் நடிச்சேன். அப்புறம், நீங்க ஃபைட் பண்ணா நல்லா இருக்கும்னு சொன்னீங்க, நானும் செஞ்சேன். அப்புறம், தொடர்ந்து நீங்க காமெடி செஞ்சாதான் நல்லா இருக்கும்னு சொன்னீங்க நானும் பண்ணேன். மறுபடியும் டான்ஸ் ஆடுனா உங்களுக்கு நல்லா இருக்கும்னு சொன்னீங்க நான் டான்ஸும் ஆடினேன். இதுவரைக்கும் நீங்க சொன்னதையெல்லாம் செஞ்சிருக்கேன். (அரசியல் கட்சி தொடங்காம ஏமாத்துறீங்களே தலைவரே?). நீங்க என்கிட்ட வேற என்ன எதிர் பார்க்குறீங்க. பேசிக்கலா நான் ஒரு நடிகன். என் ரசிகர்களோட ஆசையை அந்தவகையில பூர்த்தி செஞ்சிட்டு வரேன். (அப்படின்னா ரசிகர்கள்தான் தங்களைக் குழப்பிக் கொள்கிறார்களோ!) அதே சமயத்துல நான் ஒரு குடும்பத் தலைவன் என்கிற முறையில என் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்துட்டு வரேன். இந்த விஷயத்துல அதையேதான் உங்களுக்கும் சொல்றேன். முதல்ல உங்க குடும்பத்தை கவனிங்க... ரசிகர் மன்றம், நற்பணி மன்றம் அதெல்லாம் அப்பறம். கடமையை செய்யுங்க பலனை எதிர்பாருங்க! என்று தன்னுடைய ஸ்டைலிலேயே தன் தெளிவான முடிவை ரஜினி குழப்பமான தொனியில் தெரிவித்தார்.
இப்போதாவது அரசியல் ஆசை கொண்ட ரசிகர்கள் திருந்துவார்களா என்று தெரியவில்லை. ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்ல ஜனநாயக நாட்டில் யாருக்கும் உரிமையில்லை; அதே நேரத்தில் அவர் அரசியலுக்கு வந்துதான் தீரவேண்டும் என்று ரசிகர்கள் கோருவதும் நியாயமில்லை. அரசியல் ஆசையும் மக்கள் சேவையும் நினைப்பு வைத்திருக்கிற ரசிகர்கள் அரிதாரக்காரரின் பின்னால் சுற்றித் திரிந்து தங்களுடைய வாழ்க்கையை இழந்துகொண்டிருப்பதும் சரியில்லை. இனியொரு முறை ரஜினியை அரசியலுக்கு இழுப்பதும், அவர் பெயரை பயன்படுத்தி அவர் கட்சி ஆரம்பிக்கப்போவதாகவும், ஆரம்பித்துவிட்டதாகவும் வதந்திகளைப் பரப்புவதும் ரசிகர்களுக்கும் நல்லது அல்ல. ரஜினிக்கும் நல்லது அல்ல.

25 October 2008

இயக்குனர் அமீரும் இயக்குனர் சீமானும் தீவிரவாதிகளா..?

Posted by Gunalan Lavanyan 9:16 AM, under | No comments



இலங்கையில் படுகொலை செய்யப்பட்டுவரும் தமிழ் இன மக்களுக்காக குரல் கொடுத்தால், காட்டு மிராண்டி ராஜபக்சேவுக்கு எதிராக குரல் கொடுத்தால், இந்திய காங்கிரசின் அக்கிரமத்தையும் அராஜகத்தையும் கண்டித்தால்... கண்டிக்கும் தமிழ் இன உணர்வாளன் மீது இந்திய பிரிவினை வாதச் சட்டம் பாய்கிறது... இது எந்தவிதத்தில் நியாயம்? தெரியவில்லை.


சிங்கள இன வெறி அரசுக்கு ஆயுத சப்ளை செய்யும் காங்கிரஸ் தியாகிகளை எதிர்த்துக் குரல் கொடுத்தால் மத்தியில் 'கூத்து' ஆட்சி புரியும் திராவிடர்கள்... இனத் தமிழனை சிறை பிடிக்கிறார்கள்..!


பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் கதையாக, ஒருபுறம் திரைப்பட இயக்குனர்களை ராமேஸ்வரத்துக்கு அனுப்பிவைத்துவிட்டு, பின்னிருந்து காங்கிரஸ் போடும் தூபத்துக்கும் தலையசைத்துவிட்டு, தமிழின உணர்வாளர்களை கைது செய்யும் உலகத் தமிழ் இனத் தலைவரை என்ன சொல்ல... அவரை ஏதாவது சொன்னால் மானமுள்ள திராவிடர்கள் பொங்கி எழுந்துவிடுகிறார்கள்.


இனியும் ஒருகணம் தாமதியோம் வரும் மத்திய பொதுத் தேர்தலில் காங்கிரசுக்கு பாடம் கற்பிப்போம்! பி.ஜி.பி. அல்லாத இடதுசாரி அணியான மூன்றாவது அணியை வெற்றி பெற செய்வோம். தமிழ் இனத்தை காப்போம்!

16 October 2008

தமிழில் கலை விமர்சன புத்தகங்கள் தனிநபர் துதிபாடிகளாக இருக்கின்றன

Posted by Gunalan Lavanyan 9:43 AM, under | No comments

ங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட தமிழகத்தின் மிகப் பழமையான கல்லூரி அது. சென்னையின் மிகப் பிரதான இடமான சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து நடந்து போகும் தூரத்தில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்திருக்கிறது. இது கலைகளை விதைத்து கலைகளை வளர்க்கிற -அரசு கவின் கலைக் கல்லூரி. சில ஆண்டுகளுக்கு முன் மிகவும் சிதிலமடைந்த நிலையில் தொய்ந்துப்போயிருந்த கல்லூரி, இன்று திரும்பிய பக்கமெல்லாம் பச்சைப் பசுமையாகவும், ஓவியமாகவும் சிற்பமாகவும் தென்படுகிறது. அதற்குக் காரணமானவர்களில் மிக முக்கியமானவர் கல்லூரியின் முதல்வர் ஓவியர் சந்ரு (எனப்படுகிற சந்திரசேகரன்). ஓவியராகவும், சிற்பியாகவும் தொடர்ந்து தனது கலைப் பயணத்தில் மாணவர்களோடு திசையெங்கும் சுற்றித் திரிந்து, புராதணமான கலைப் பொங்கிஷங்களைக் கண்டு, அவற்றை மக்களிடம் அடையாளப்படுத்தி வருபவர். பழங்குடிகளுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் எதையாவது செய்துவிட முடியாதா என்று எத்தனிப்பவர். தன்னை ஒரு எழுத்தாளனாகவும் அடையாளம் கண்டவர். அதேநேரத்தில் கலை மீதும், கலை மீது தான் வைத்திருக்கிற கருத்தின் மீதும் தீராத நம்பிக்கை கொண்டவர். அவரிடம் புத்தகங்கள் குறித்தும், கவின்கலை விமர்சனம், அதன் போக்கு குறித்தும் உரையாடியதிலிருந்து சில பகுதிகள் வலைப்பூ வாசகர்களுக்கு...
சந்திப்பு: சா.இலாகுபாரதி

கலைகளில் ஓவியத்தை நுண்கலை என்று சொல்கிறார்களே எப்படி?
சமூகம் & பாதுகாப்பு, மனித குல மேம்பாடு என பலவகை தொழில் துறைகளைக் கொண்டுள்ளது. உற்பத்தியாளர், உற்பத்திப்பொருள் என்பது அந்தந்த தொழில் துறைகளின் இயக்கம். இதில் உற்பத்தியாளரின் அனுபவம், உற்பத்திப் பொருளின் செய்நேர்த்தி என்பவை சார்ந்து அனைத்துத் தொழில் துறைகளும் ஑கலைஒ என்ற சொல்லை கொண்டுள்ளன.பிற துறைகளின் உற்பத்திப் பொருள் தகவலுக்கு உரியவை என்றும், கலை துறையாகக் கருதப்படும் மொழி, நடிப்பு, ஓவியம் என்பன தகவல் பரப்புக்கு உரியவை என்றும் வகைப்படுத்தப் படுகிறது. இதில் மொழி, நடிப்பு என்பவை யதார்த்த வகை பயிற்சிக்கு உரியது. ஓவியம் சிறப்பு வகை பயிற்சிக்கு உரியதாக மாறி ஑நுண்கலைஒ என்ற சொல்லை பெறுகிறது.
கலை அனுபவம் எது?
சைக்கிள் ஓட்ட பழகிய பின், சைக்கிளில் நாம் போய் சேர வேண்டிய இடம் நோக்கி பயணிக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். நாம் (நாம் என்றால் உடல்) அந்த இடத்துக்குப் போய் சேர்வதற்கு முன், நமது மனம் & அங்கு போய்விடுகிறது. சென்றபிறகு நாம் செய்யவேண்டிய பணிகள் குறித்து திட்டமிடத் தொடங்கிவிடுகிறது. இவை இரண்டில் கண்ணால், மனதால் கண்ட காட்சிகளை சித்திரமாக்கும் திறன் வலுப்பெற்ற நிலையில், காட்சி ஒரு தளத்தில் விரிந்து கொண்டிருக்க, நமது மனம் ஑நான்ஒ, ஑படைப்புஒ என அகப் புறங்களின் ஆழத்தில் பயணிக்கிறது. இதை சித்திரம் எழுதுவதிலிருந்து விடுபட்ட மன சஞ்சாரத்தை பாவனையாகக் கொள்ளும் வழித்தடமாகக் கருதலாம்.தன் நிலை & முன் நிலை & சார்பு நிலையாக நம்முடைய தகுதி பற்றிய கேள்வி ஒரு பூவை பார்த்து ஑நீ யார்?ஒ என கேட்கும்போது, நம்மில் ஏற்படும் விந்தையும், பயமும், நமது செயல் ஊக்கமும் ஆழ்ந்த அமைதியுடன் ஒரு தளத்தின் மீது ஑பூஒ காட்சியாக விரிவதே கலை அனுபவம்.
நவீன கலை -அதன் வளர்ச்சிப் போக்கு குறித்து கூறுங்கள்...
நவீன கலை படைப்புகள் வியாபாரம், விளம்பரம், அதிகாரம் என்பவைகளை முன்வைத்து சென்றுகொண்டிருக்கின்றன. அதனால், நவீன படைப்பாளிகள் கோரும் மனித உரிமை, படைப்புச் சுதந்திரம் என்பவை கேள்விக்கு உள்ளாக்கி இருக்கிறது. இதன் காரணமாக, நவீன கருத்து வடிவத்தை மதம் என்றும், படைப்பாளிகளை மதவாதிகள் என்றும் விமர்சிக்கிறார்கள். இந்தச் சூழலில் நவீன கலைமரபு தனி நபர் சுதந்திரத்தை கோருகிறது. ஆகவே, நிற்பது, நடப்பது, கீறுவது அனைத்தும் கவின்கலை படைப்புகள் என்று இன்றைய நவீன கலைவித்தகர்களாக தங்களை தம்பட்டம் அடித்துக்கொள்பவர்கள் கூறுகிறார்கள். இது முழுக்க முழுக்க வர்த்தக உலகமய கூத்தே தவிர கலை வளர்ச்சிக்கான வழியாக தெரியவில்லை.
உங்களுக்குப் பிடித்தமான ஓவியர், சிற்பி யார்?
ஓவியர் சந்தானராஜ், மறைந்த சிற்பி கன்னியப்பன் இருவரும் என் ஆதர்சமான படைப்பாளிகள்.
ஓவியராக இருந்துகொண்டு எப்படி எழுத்திலும் கவனம் செலுத்துகிறீர்கள்...
஑சித்திரமும் கை பழக்கம்ஒ என்பதைப் போலவே மொழியின் வரிவடிவமும் (எழுத்தும்) பழக்கம் சார்ந்ததே. நாம் பழகிக் கொண்ட ஊடகங்கள் வாயிலாக யாவற்றின் பேரிலும் நட்பும் தயையும் வெளிப்படும் வழி வகைகளில் கலை - இலக்கியங்களை காண்கிறேன்.எனவே வரைவதைப் போலவே எழுதவும் செய்கிறேன்.
கவிதை எழுதுவதில் எப்படி நாட்டம் வந்தது?
காட்சி (ஓவியம் & சிற்பம்) ஊடகங்கள் அதனதற்குரிய பலம் மற்றும் பலகீனங்களோடு விளங்குகின்றன. இதில் கவின் கலைகள் மௌடீகத் தன்மை கொண்டதாக விமர்சிக்கப்படுவதில் உலக சந்தையும், படோ டோ பங்களும், மாய்மாலங்களும் கோலோச்ச ஏதுவாக இருக்கிறது. அத்தகைய போக்கை விமர்சிக்கவே கவிதையை ஓர் மாற்று ஊடகமாக கையாள்கிறேன்.
உங்களின் வெளிவந்த புத்தகங்கள், வர இருக்கிற புத்தகங்கள் என்னென்ன...
என்னுடைய நேர்காணல்கள் தொகுக்கப்பட்டு முதலில் இரண்டு நூல்களாக வெளிவந்தன. அதில் ஒன்று, ஑செப்படி தப்படிஒ, மற்றொன்று ஑உருவெளிஒ அதேபோல இன்னும் சில நேர்காணல்கள் தொகுக்கப்பட்டு நூலாக வர இருக்கிறது.அதேபோல, ஑ஓவியம் என்றொரு மொழிஒ என்ற தலைப்பில் மற்றொரு கலை விமர்சன நூலும் வெளிவர இருக்கிறது. இவற்றிலிருந்து மாறுபட்டு, ஑முறிந்த கிளையிலிருந்து பறக்கும் குருவிஒ என்ற தலைப்பில் என்னுடை வேறு சில அனுபவங்கள், விமர்சனங்களை கவிதைகளாக எழுதியிருக்கிறேன்.
கலை சார்ந்தே அதிகம் பயணிக்கிறீர்கள். பிறகு எப்படி வாசிக்கவும் எழுதவும் நேரம் ஒதுக்குகிறீர்கள்?
பருவச் சூழல் சார்ந்து அம்புலி மாமா, ஆனந்த விகடன், அம்பேத்கர், அன்னியன் என்று என்னை ஈர்த்த எழுத்துகள் ஏராளம். மீண்டும் மீண்டும் நொடிக்குள் நொடியாக அந்த விந்தையை தேடி நடப்பதும், படுத்து உறங்குவதும், பொழுதும் புத்தகமும் கிடைக்கும்போதெல்லாம் படிப்பதும் என் தொடர் நிகழ்வு.
விரும்பிப் படித்து வியந்த எழுத்தாளர்கள் யார்? என்ன புத்தகங்கள்?
அப்படி, நான் வியந்த புத்தகங்கள் பல உண்டு. அதில் தமிழ் சிறு கதைகளின் தந்தை புதுமைப்பித்தன் எழுதிய ஑கயற்றாறுஒ சிறுகதை என்னை மிகவும் ஈர்த்தது. அதேபோல உலக எழுத்தாளர்களில் காஃப்காவினுடைய ஑தீர்ப்புஒ (தி ஜட்ஜ்மென்ட்), சீன எழுத்தாளன் லூசூவினுடைய ஑பைத்தியக்காரனின் டைரிஒ, ரஷ்ய எழுத்தாளன் கார்க்கியின் ஑கிளவி இஸர்கிஒ இவையெல்லாம் நான் வியந்து படித்த எழுத்து தச்சர்களின் கைவண்ணங்கள். அதேநேரத்தில் ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் பிரமிளின் கவிதைகளையும் படிப்பதுண்டு. என்னை வியக்க வைத்த கவிஞர்களில் பிரமிள் மிக முக்கியமானவர்.

ஓவிய மாணவர்களை ஓவியம் பழக்குவிப்பதைத் தவிர வாசிப்பு பழக்கத்துக்கு எப்படி அழைத்துச் செல்கிறீர்கள்?
கவின்கலை (ஓவியம்) & இலக்கியம் இரண்டும் வெவ்வேறு தடங்கள் என்றபோதும் அவற்றின் இலக்கு என்ற வகையில் ஒப்பு நோக்கு, விமர்சனம் என கவின்கலையும் இலக்கியமும் ஒன்றை ஒன்று சார்ந்து விளங்குகின்றன.எனவே, ஓவியம் பயிலும் மாணவர்களுக்கு வாசிப்பு பழக்கம் என்பது அவசியமானது என்று உணர்கிறேன். ஆகவே, நேரம் கிடைக்கும் போதெல்லாம் அது சார்ந்த விவாதத்தை அவர்களோடு நிகழ்த்திக் கொண்டுதான் இருக்கிறேன்.
கலை - கவின்கலை குறித்து தெரிந்து கொள்வதற்கு எப்படிப்பட்ட புத்தகங்கள் தமிழில் வந்திருக்கின்றன?
ஓர் உற்பத்திப் பொருள் அதன் உற்பத்தியாளரின் தேவை, நோக்கம், செய்திறன் மற்றும் சமூக கட்டமைப்புகளின் அடையாளமாக விளங்குகிறது. அத்தகைய தடையங்கள் தமிழ்ச் சூழலில் வரலாறு, மதம் என்ற அளவிலேயே ஆய்வுகளும் அதற்கான வெளியீடுகளும் நிகழ்கின்றன.ஆனால், படைப்பு - படைப்பாளி என்ற வகையில் மனோநிலை, மூலப் பொருள், பரப்பின் தன்மை, உருவத் தோற்றங்களின் அமைதி, அவற்றின் பின்புல அமைதி போன்ற நிலைகள் பரவலாக ஆய்வு செய்யப்படவில்லை.மேலும், இன்றைய சூழ்நிலையை விஸ்தரிக்கும் கலை விவரனை, கலை விமர்சன புத்தகங்கள் தனி நபர் துதிபாடிகளாகவும், பிற மொழி விஸ்தரிப்புகளை தமிழ் மொழியில் மறு பிரதி செய்ய முற்படுபவையாகவுமே அமைந்துள்ளன.ஆகவே, இங்கு ஒரு மிகப்பெரிய வெற்றிடம் இருக்கிறது. கவின்கலை மரபு, உலகு தழுவிய பல்வேறு முனைப்புகளில் ஆய்வு ரீதியாக விவரனைகளும், விமர்சனங்களும், வெளிவர வேண்டியது மிக அவசியமானது என கருதுகிறேன்.
காந்தியை நவீனமாக சித்திரம் வரைவதை, ஑சிதைவுஒ என்று தொடர்ந்து விமர்சித்தி வருகிறீர்களே அதற்கு என்ன காரணம் - அதை விளக்கமுடியுமா..?
கவின் கலையில் ஑சிதைவுஒ என்பதை காட்சி தோற்றச் சிதைவு - உருவத் தோற்றச் சிதைவு என வகைப்படுத்துகிறார்கள்.உதாரணத்துக்கு, பெரியாரிடமிருந்த பிள்ளையார் சிலைகள் வீதிகளில் உடைந்து சிதரின. இச்செயலில் நியா&அநியாய தற்கங்களுக்கு அப்பால், ஒரு உருவத் தோற்றத்தைச் சிதைப்பது என்பது அது சார்ந்த கருத்தியலை சிதைப்பது என்பது விளங்குகிறது.அதேபோல, மகாத்மா காந்தியின் உருவத் தோற்றத்தைச் சிதைத்து சித்தரித்தார்கள்; சித்தரிக்கிறார்கள். அப்படி சித்தரிப்பது என்பது காந்தியையும், காந்தியத்தையும் சிதைப்பதாக அல்லது மறுப்பதாக விளங்குகிறது.அப்படிப்பட்ட அந்தச் சித்திரங்கள், காந்தி - காந்தியம் அற்ற ஒரு வயோதிக உருவத் தோற்றம் என்ற அளவில் கவின் கலைக்கே உரிய ஆய்வு வழி உற்பத்திகளைச் செய்யும்.விலக்காக, பொழுதும் காரியமுமாக உற்பத்தியான பதிவுகளை ஒரு வயோதிக உருவ தோற்றமாகவோ அல்லது காந்தி உருவத் தோற்றமாகவோ அடையாளப்படுத்தலாம்.அதேநேரத்தில், 'work of art' என்பது தகவல் பதிவுக்கானது. அப்படி இருக்கையில் தகவலையே தவறாக பதிவு செய்வது எப்படி சரியாக இருக்கும்.ஒருவர் ஒரு ரோஜாப்பூ வரைகிறார் என்று வைத்துக்கொல்வூம். அவர், ரோஜாப்பூவை கருப்பாக போட்டுவிட்டு, அதை ரோஜாப்பூ என்றும், நான் ரோஜாப்பூவை வரைந்துவிட்டேன் என்றும் சொன்னால் எப்படி மடத்தனமோ, அப்படித்தான் காந்தியைப் போன்ற சாயலில்ஒரு முகத்தை கோணல் முகமாக போட்டுவிட்டு நான் நவீன வடிவில் காந்தியை வரைந்துவிட்டேன் என்பதும்.பன்முகப் பகுப்பு, சுவர் பதிவு, வினை உருவாக மணலை குவிப்பதும் அதை கலைப்பதும் கவின்கலை கூறுகளாக உலாவிக் கொண்டிருப்பது போலவே, தமிழ்ச் சூழலில் கோணல் முகமாக வரைவதையும் நவீனம் என்றும், படைப்புச் சுதந்திரம் என்றும் கருத்துகள் உலா வருவது விமர்சனத்துக்கு உள்ளாக வேண்டியது.இந்தக் கருத்தைச் சொல்வதால் நான் அவர்களுக்கெல்லாம் எதிரானவன், ஆகாதவன் என்று சொல்கிறார்கள். இது அவர்களின் அறியாமையைத்தான் காட்டுகிறது.
மாணவர்களோடு பல்வேறு இடங்களுக்குச் சென்று முகாமிடுகிறீர்கள்... அங்கு என்ன மாதிரியான வேலைகளைச் செய்கிறீர்கள்...
முகாம் செல்வதில் இரண்டு நோக்கங்கள் உண்டு. ஒன்று, மாணவர்கள் மக்களோடு பழகுவதன் மூலம் அவர்களுக்கு சமூகத்தோடு ஒரு நல்ல தொடர்பு ஏற்படுகிறது. சமூகத்தின் ஏற்றத் தாழ்வுகளைத் தெரிந்துகொள்ள முடிகிறது. மற்றொன்று, நாங்கள் செல்கிற அந்தந்தப் பகுதி மக்களிடம், அங்கிருக்கிற புராதண மற்றும் தொல்லியல் கூறுகள் பற்றி பயிற்றுவிக்கிறோம். இதனால், அவர்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுகிறது.அப்படி ஒருமுறை நாங்கள் சென்றிருந்த பகுதிகளில் படிமப் பாறைகளை காண நேர்ந்தது. அங்கிருக்கிற மக்கள், அவற்றை உடைத்து கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தி வந்தனர். அதைப் பார்த்ததும், அதனுடைய புராதண தன்மை எங்களுக்கு புலப்பட்டது. அது பற்றி அந்த மக்களிடம் விளக்கி எடுத்துச் சொன்னபோதான் அவர்களால் அந்தப் பாறையின் முக்கியத்துவத்தை உணரமுடிந்தது. இதுபோலவே தமிழ்நாட்டின் பல பகுதி மக்கள் அறியாமையால் தங்கள் அடையாளங்களை தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதை மீட்டெடுக்கும் வேலை மிகப் பெரியது. அதில் நாங்கள் செய்வது மிகச்சிறிய பணிதான்.
கல்லூரி சீர்கெட்டு விட்டதாக வரும் விமர்சனங்கள் பற்றி...
அப்படி சொல்கிறவர்களுக்கு வரலாறு தெரியவில்லை என்றுதான் என்னால் பதிலாக சொல்லமுடிகிறது. இந்தச் சீரழிவுகளுக்கும் சீர்க்கேடுகளுக்கும் யார் காரணம். இதற்குமுன் இருந்தவர்களின் உதாசினப்போக்கு, பொறுப்பற்றத்தன்மை இவைதான். முன் இருந்ததைக் காட்டிலும் இப்போது இந்தக் கல்லூரி பல மாற்றங்களையும் பல வளர்ச்சிகளையும் கண்டிருக்கிறது. இதற்குமுன் இருந்தவர்கள் விருதுகளுக்காகவும் தங்களின் சுய ஆதாயங்களுக்காகவும் கல்லூரியின் பழமையையும் அதன் புராதணத்தன்மையையும் அழித்து ஒழித்தார்கள். இதை யாராவது மறுக்க முடியுமா?
நன்றி: 'விகடன் புக்ஸ்'


08 September 2008

கொலை வாளினை எடடா!

Posted by Gunalan Lavanyan 9:38 AM, under | 3 comments

வலியோர் சிலர் எளியோர் தமைவதையே புரிகுவதா?
மகராசர்கள் உலகாளுதல்நிலையாம் எனும் நினைவா?
உலகாள உமது தாய் மிகஉயிர்வாதை அடைகிறாள்;
உதவாது இனி ஒரு தாமதம்உடனே விழி தமிழா!

கலையே வளர்! தொழில் மேவிடு!
கவிதை புனை தமிழா!
கடலே நிகர் படை சேர்;
கடுவிட நேர் கருவிகள் சேர்!
நிலமே உழு! நவதானியநிறையூதியம் அடைவாய்;
நிதி நூல்விளை! உயிர் நூல் உரை நிச நூல் மிக வரைவாய்!

அலை மாகடல் நிலம் வானிலுன் அணிமாளிகை ரதமே அவை ஏறிடும் விதமே
உனததிகாரம் நிறுவுவாய்!
கொலைவாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே
குகை வாழ் ஒரு புலியே உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே புரி சரி நீதி பொருள் ஜனநாயகம்
எனவே முரசறைவாய்! இலையே உனவிலையே
கதிஇலையே எனும் எளிமை இனி மேலிலை
எனவே முரசறைவாய்... முரசறைவாய்!

- புரட்சிக்கவி பாரதிதாசன்

04 September 2008

புழக்கடையில் மேய்ந்துத்திரியும் பன்றி

Posted by Gunalan Lavanyan 7:50 PM, under | 1 comment

வா...
எனது ஒவ்வோர் அசைவையும் கண்காணி.
வந்தெனது
அந்தரங்கத்தை
உன் சவுகரியம் ஆக்கிக்கொள்.
சம்பந்தமின்றி
என் சுயத்தில் தலையிடு.
எச்சில் கையால்கூட காக்கை நீ
பகிர்தலையும் அன்பையும் பற்றி
முழுக்கப் பேசு!
உன் சூத்து நாறும்போது
அடுத்தவன் சூத்து நாறுவதாய் புரளிசெய்!
சாதியாலும் மதத்தாலும்
என் சனங்களையும்
என் ஈனச்சாமியையும்
கேலிக்குள்ளாக்கு...
புழக்கடையில் மேய்ந்துத்திரியும்
என் புழக்கடைச் சங்கதிகளை
வயிறு புடைக்கத்தின்று
செறிக்காமல் திரி...
செறிக்க வேண்டுமெனில்
கண்ணாடியில் உன் பிம்பத்தைப் பார்...
காரித்துப்பு...
செரிக்கத்தொடங்கும் இப்போது!

01 September 2008

நதியான காதல்கள்

Posted by Gunalan Lavanyan 1:39 PM, under | 2 comments

அது மலைகளால் நிறைந்த கிராமம். குழந்தைகள் வட்டமாக நின்று கை கோர்த்து ஆடும் ஆட்டத்தைப்போல அந்த கிராமத்தைச் சுற்றி மலைகள் கைகோர்த்து நின்று ஆடும் ஆட்டம் அலாதியானது. பனிக்காலத்தில்தான் அதன் அழகை தரிசிக்க முடியும். அப்போது மலை பனி ஆடை கட்டிய தேவதையாக காட்சியளிக்கும்.மார்கழித் திங்களில் பனி படர்ந்த இரவுகளில் ஊரின் தெருக்களெங்கும் கோல மழையில் நனைந்துகொண்டிருக்கும்... பெண்கள் ஒன்றுகூடி இன்று நான் இந்தக் கோலம் போடுகிறேன். நீ எந்தக் கோலம் போடுவதாக உத்தேசம்..? அவள் மயில் கோலம் போடப்போகிறாளாம்..! அக்கா நீங்கள்... என்று குழுவாகக் கூடி நின்று, விளித்துப் பேசும் பெண்களின் கோல உற்சவம் மார்கழி மாதத்தில்தான் விமரிசையாக நடைபெறும். கோலம் என்றால் சரளைக் கற்களைப் பொடியாக்கிப் போடும் கோலமல்ல. பச்சரிசியை ரவைப் பதத்தில் உரலில் இடித்துப் போடும் மாக்கோலம்.ஊர் பெண்களுக்கு கோலமென்றால் கொள்ளை ப்ரியம். திருமணமாகி புகுந்த வீட்டுக்கு போகும்போது தோழியைப் போல் கோல நோட்டையும் உடன் எடுத்துச் செல்லும் அளவுக்கு ப்ரியம். பருவம் எய்திய பெண்களுக்கு சமைப்பதையடுத்து கோலம் போடுவதே தொழில். கம்பிக்கோலம், பூக்கோகலம், வண்ணக்கோலம் என்று வகைவகையாய் கோலம் இடும் பெண்களின் கன்னக்குழியின் கோலம் அழகின் உச்சக்கோலம்.கற்பனை நிறைந்த அவர்களின் விரல் இடுக்குகளிலிருந்து துளித்துளியாக அச்சுகள் பூமியை முத்தமிடும். ஈரம் நிறைந்த பூமியில் முத்தமும் சேர்ந்து கரைந்துபோகும். பின் புள்ளிகள் ஒன்றுகூடி கோலம் தன்னைத்தானே வரைந்துகொள்ளும்.அதிகாலையில்தான் பெண்கள் கோலமிடுவது வழக்கம். கூதிர்க்கால அதிகாலைகளிலோ, பனி ராட்சஸனாகி தலையில் ஏறி உட்கார்ந்து உடலை கவ்விப்பிடித்து உலுக்கிவிடும் என்பதால் பெண்கள் இரவிலேயே கோலம் இட்டு முடித்து, பறவைகள் கூடு தேடி அடைக்கலம் அடைவதைப்போல், வீட்டில் போர்வையைப் போர்த்தி உறங்கத் தொடங்கிவிடுவார்கள். மாடி வீடு உள்ளவர்கள் பனிக்காலங்களில் நடுக்கமின்றி குளிருக்கு அடக்கமாக இருப்பார்கள். ஆனால், கூரை வேய்ந்த வீட்டில் வசிப்பவர்களும், ஓட்டு வீட்டில் குடியிருப்பவர்களும் மழையில் நனைந்த கோழியைப்போல் பனியில் நனைந்து வெடவெடத்துக் கிடப்பார்கள். போர்வை, கம்பளி என்று எதைப் போர்த்தினாலும் குளிர் அடங்கவே அடங்காது; பற்கள் கிடுகிடுவென ஆடத்தொடங்கும்.அப்படிப்பட்ட பனிக்காலத்தில் அந்த ஊரின் இயற்கை அழகு காண்பதற்கு அரிய காட்சியாக இருக்கும். ஆனாலும், முதுமை தாங்கிய வயசாளிகளுக்கு, அழகெல்லாம் ஒரு பொருட்டல்ல. பனி எப்போது போகும் என்று போர்வைக்குள் ஒடுங்கிக் கிடப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே என்று இருப்பார்கள். பனி என்றால் அவர்களுக்கு மேல் அன்னமும் கீழ் அன்னமும் சேர்ந்து நடுங்க ஆரம்பித்துவிடும்.ஆனால், பருவம் வந்த பெண்களுக்கும் இளமைப் பொங்கும் காளையருக்கும் பனிக்காலம்தான் காதல் பூக்கும் வசந்தகாலம். அப்போதுதான் காதல் மொழி பேசுவதற்கு & வெண்பனி சிந்தும் மாலைகள், பச்சைப் பூத்த பசுஞ்சோலைகள், வண்ண மலர்கள் தூவி வரவேற்கும் பூங்காக்கள் என்று காதலர் கூடும் இடங்கள் தோறும் ஆளரவமற்று காதலரின் வருகையைப் பார்த்து காத்துக் கிடக்கும். காதலர்கள் பேசிக்கொள்வதைக் கேட்பதில் அவைகளுக்கு அப்படியென்ன ஆனந்தக் களிப்போ... அதைக் காதலர்தான் அறிவர்!அப்படி வழக்கமாய் குளிர் இரவுகளின் நடுக்கத்தில் தாவணிகள் கோலத்துக்கு புள்ளி வைக்க, அப்புள்ளிகள் இளங்காளைகளை மான்களாக்கிவிடும். புள்ளிகள் ஒவ்வொன்றும் புள்ளி மான்களாகி, காதல் புல் மேய இதய வனத்தைத் தேடி, சதா சர்வகாலமும் துள்ளியலையும் பணிக்கு ஆட்பட்டுப் போகும்.பெண்களின் வீட்டு வாசற் கோலப்புள்ளிகள், ஆண்களின் இதய வாசலில் நிறைந்து வண்ணங்கள் தூவிய கலர்க் கோலமாகிவிடும். காதல் பதற்றத்தில் காளையர்களின் நெஞ்சப் படபடப்புக் கூடி, காதல் குளிரெடுக்கும். காட்சியின் திசைகள் நோக்கி, கண்கள் கரைந்து நதியாவதும் உண்டு.
உன் விரல்களிலிருந்து விழும்புள்ளிகளில்
என் நெஞ்சத்தின் ஏக்கப்
பெரும்புள்ளிகள்
கூடிக்கொண்டே இருக்கின்றன.
ஒவ்வொருமுறை நீ புள்ளி இடுகையிலும்
சொல்ல நினைக்கிறேன்.
ஆனாலும், உன் பார்வைக் கரும்புள்ளிகளில் சிக்கி
என் வார்த்தைச் சிறுபுள்ளிகள்
மூழ்கி
கோலம்
முற்றாகிவிடும்போது
எப்படி முடியும்
என்னால்
அந்த மூன்றெழுத்தை உச்சரிக்க.